ஞாயிறு, 28 ஜூன், 2009

அறிவாராய்ச்சியியல்

அறிவாராய்ச்சியியல், த‌த்துவ‌த் துறைகளுள் ஒரு முக்கிய‌ துறையாகும். இங்கு அறிவைப்ப‌ற்றி ஆராயப்படுகிறது. அதாவது, அறிவு என்றால் என்ன, அது எதைப் பற்றியது, மனிதரால் எவ்வாறு அறிவு பெறப்படுகின்றது என்பன போன்ற அடிப்படை வினாக்களிற்கு விடை தேடும் தத்துவ ஆராய்ச்சியே அறிவாராய்ச்சியியல் (Epistemology) எனப்படும்.


 நவீன கால அறிவாராய்ச்சியியல் 17 ஆம் நூற்றாண்டில் அனுபவவாதம், அறிவுவாதம் ஆகிய இருவகைச் சிந்தனைப் போக்குகளால் மீண்டும் உயிர் பெற்று வளர்ச்சி பெற்றது. ஒரு புற‌ம் அனுப‌வ‌த்தை ஆதார‌மாக‌க் கொண்டு அனுபவ‌வாத‌மும், அறிவை அடிப்படையாக‌க் கொண்டு அறிவுவாத‌மும் வ‌ள‌ர்ந்த‌ன. இந்த வளர்ச்சிப்போக்கில்தான் மேற்கு ஐரோப்பாவின் இடைக்காலத் தத்துவங்கள் முறைப்படுத்தப்பட்டன. ஜான் லாக், டெஸ்கார்டே, லீப்னிட்ஸ், கான்ட் போன்றவர்கள்தான் மத்தியகால த‌த்துவ‌ போக்கையே முறைப்ப‌டுத்தி வளர்த்தெடுத்தன‌ர்.

அறிவுவாதம் சிந்தனையை ஆதாரமாகக் கொண்டு அறிவாராய்ச்சியியலை வளர்த்தது. இதை டெகார்தே என்பவர் தொடங்கி வைத்தார். இது பின்னாளில் திறனாய்வுப் பகுத்தறிவு வாதமாக(critical Rationalism) வளர்ச்சியடைந்தது. கணக்கியலை அடிப்படையாக கொண்டு தெகார்தெ தமது தத்துவத்தைப் படைத்தார். கணக்கியல் முறைகளுக்குள்ளும் முக்கியமாக வடிவ கணித முறையை கைக்கொண்டார் எனலாம். தெகார்தெ இந்த முறையைக் கையாண்டுதான் தமது தத்துவத்தை உருவாக்கிக்கொண்டார்.தெகார்தே, ஸ்பினேசா, லீப்னிட்ஸ் போன்றோர் பகுத்தறிவு வாதிகள் ஆவ‌ர்.


வினா தொடுத்து விளக்கம் பெறுவது சாக்ரடீஸ் சிந்தனைமுறை ஆகும். ஆனால் தெகார்தெ ஐயத்தின் துணையால் அடிப்படை உண்மையைக் காணமுற்பட்டார் எனலாம். மனம் உள்ளாற்றலைக் கொண்டு சிந்திப்பது ஒரு வகை. மனம் தன்னுள் உறைந்துள்ள அடிப்படை உண்மைகளை நேரடியாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் அறிந்து கொள்கின்றது. இவ்வாறு நேரடியாக உள்ளாற்றலின் மூலம் அறிந்து கொண்ட உண்மைகளிலிருந்து பகுப்பளவை சிந்தனை மூலம் புதிய உண்மைகளை வெளிக் கொண்டு வருகின்றது. அடிப்படை உண்மைகளைப் பகுத்தாய்ந்து சிந்திப்பதன் மூலம் பல நூறு புதிய உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் இத்தகைய அறிவே எக்காலத்திற்கும் ஏற்புடைய அறிவாக இருக்கும் என்றும் அவர் நம்பினார். மனத்தின் இவ்விரு செயல்களால் சரியான அறிவைப் பெற முடியும் என்றார்.


அடிப்படை உண்மையைக் காண கைக்கொண்ட முறைக்கு தெகார்தெவின் ஐயமுறை என்றழைக்கப்படுகின்றது. இது ஐயுறுக் கோட்பாட்டாளர் களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை காணவேண்டும். தெகார்தெவின் ஐயமுறைகொள்கை என்பது அனைத்து அனுவங்களையும் அவற்றால் விளையும் அறிவையும் ஐயுறுவதாகும். ஐயம் என்பதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி தெளிவான உண்மையைக்காண வேண்டும் என்பதாகும். ஆனால் தொடக்கம் முதல் கொண்டு இறுதிவரை எல்லாவற்றையும் எப்போதும் ஐயுற்றுக் கொண்டு எந்த முடிவுக்கும் வராமலிருப்பது ஐயுறுவியம் ஆகும்.


"நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன்" என்ற புகழ் பெற்ற வாக்கியம் தெகார்தெவின் உடையது ஆகும். மனிதனுடைய இருப்பு நிலை அவனுடைய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. சிந்தனை இல்லாத மனிதன் தனது இருப்பு நிலையை இழக்கின்றான். மனத்தின் இயக்கமாகிய சிந்தனையே அனைத்திற்கும் அடிப்படை. இது தெள்ளத் தெளிவான ஒரு தற்புல உண்மை. சிந்தனையை முதன்மையாகக் கொண்டு தத்துவ பிரச்சனைகளை அணுகுகின்றார். மனிதன் பிறக்கும் போதே மத்திலும் சில கருத்துக்கள் இருக்கின்றன. இக்கருத்துகளை உள்ளுறைக் கருத்துக்கள் என்பர். மனத்தில் எப்போதும் உறைந்திருக்கும் உள்ளுறை கருத்துக்களின் பரிணாம வளர்ச்சியே அறிவாக அமைகின்றது.


தெகார்தெயின் படைப்புகள் 1) சிந்தனை முறைப்பற்றிய உரையாடலகள், 2) தத்துவத்தின் அடிப்படைகள், 3) தத்துவ அடிப்படை பற்றிய சிந்தனைகள், ஆகியவை ஆகும். தெகார்தெவின் வாதம் இருமைவாதம் ஆகும்.


அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட அறிவாராய்ச்சியியலானது ஜான் லாக் என்பவரால் தோற்றிவிக்கப்பட்டது. அனுவபவாதச் சிந்தனை இங்கிலாந்து நாட்டில் பிறந்தது. அவர்கள் எண்ணங்களின் தோற்றம் இயல்பு ஏற்புடைமை ஆகிய அடிப்படைகளை ஆராய முற்பட்டனர். எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றன் என விரிவாக ஆராய்ந்து விளக்கமளித்தார் லாக். புறவுலகின் பொருளும் தொலைவும் எத்தகைய சிக்கல் நிறைந்த எண்ணங்கள் என்பதை எடுத்துக்காட்டினார் பார்க்லி. தத்துவ போராட்டத்தின் மையாமாக விளங்கும் செறிபொருளும் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையாய் விளங்கும் காரண காரியத் தொடர்பும் எந்த அளவு சிக்கல் நிறைந்தனவாய் இருக்கின்றன என்பதைக் காட்டியவர் டேவிட் ஹியூம் ஆவார். ஜான் லாக், பேர்க்லீ, டேவிட் ஹீயூம் போன்றோர் அனுபவ வாதிகள் ஆவ‌ர்.


அனுபவவாதம் அதன் வளர்ச்சிப்போக்கில் ஐயவாதமாகவும் (Skeptism) புலனறிவு வாதமாகவும் (Positivism) வளர்ச்சியடைந்தது.ஜான் லாக் அனுபவம் குறித்த அறிவாராய்ச்சியில் ஈடுபடுகின்றார். பகுத்தறிவினை மறுக்கின்றார். அனுபவ வாதத்தை ஏற்கின்றார். அனுவத்தின் மூலமே அறிவு விளைகின்றது என்றார். ஆனால் அனுபவத்தை பிறரைக் காட்டிலும் இவர் தெளிவாக விளக்குகிறார்.


அறிவாராய்ச்சியின் அடிப்படைக் கருத்துகளாக புலக்காட்சி, மனப்பதிவு, எண்ணம் ஆகிய மூன்றினை ஹியூம் குறிப்பிடுகின்றார். புறவுலகம் ஐம்பொறிகளைத் தாக்கி ஏற்படுத்தும் விளைவு புலக்காட்சி எனப்படும். பொறிகளின் கண் ஏற்படும் மாற்றம் முறையாக மனத்தில் பதிவாகின்றன. இவை மனப்பதிவுகள் நினைவாற்றலும் கற்பனையும் மனப்பதிவுகளை இணைத்தும் கூட்டியும் தொகுத்தும் தொடர்பு படுத்தியும் எண்ணங்களை உருவாக்குகின்றன.


பகுத்தறிவு சில அடிப்படை உண்மைகளை ஆதாரமாக கொண்டு சிந்தனையைச் சுழலவிடுதல் மூலமாகவும் அளவையியல் வழிகளைக் கைக்கொள்வதன் வாயிலாகவும் அனைத்தையும் அறியமுடியும் என்று பகுத்தறிவியலாளர்கள் கூறினர். அனுபவம் தவறான அறிவைத் தருகிறதெனக் கூறினர்.


பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோsக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.


அனுபவ‌வாதம் மெய்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய ஒர் அணுகுமுறை ஆகும். அனுபவ‌வாதம் ஆதாரத்தையும் அனுபவத்தையும் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக புலங்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகின்றது.


அனுபவ‌வாதாமே அறிவியலுக்கு அடிப்படை ஆகும். குறிப்பாக ஆதாரபூர்வமாக, பரிசோதனைகள் மூலம் ஒரு கூற்றை நிறுவுவதை இது வலியுறுத்துகின்றது. தத்துவ வரலாற்றில் ஐய‌வாத‌ம் தான் எல்லா புதிய‌ சிந்த‌னைப்போக்கிற்கு அடிப்ப‌டையாக‌ இருந்து வ‌ந்துள்ள‌து. ஒரு விளக்கத்தை நம்பிக்கையால் அல்லது அதிகாரத்தால் ஏற்றுக்கொள்ளாமல் ஐயுறவு அல்லது சந்தேக கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, ஆதாரங்களைத் தேடும் முறைமையைக் குறிப்பது ஐயுறவியல் எனப்படும் ஐயவாதம் ஆகும். என்றாலும் சில விச‌யங்களில் தெளிவான மற்றும் இறுதியான முடிவுகள் எட்டாமல், ஐயமுற்று தொடர்ந்து தேடுவது ஐயுறவியல் பண்பு ஆகும். ஐயுறவியல் மூடநம்பிக்கைகள், சமய நம்பிக்கைகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களைக் முன்வைக்கிறது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக