ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

முழுமையும் பகுதியும்


உண்மைநிலை என்பதின் அடிப்படை இயல்பு என்ன? உண்மைநிலை என்பது முழுமையால் ஆனதா அல்லது பகுதிகளால் ஆனதா என்ற விவாதம் பழம்பெரும் விவாதமாகும். கிரேக்க மரபிலும் சரி, இந்திய மரபிலும் சரி, முழுமையை அல்லது பரிபூரணத்தை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட தத்துவங்களும், பகுதியை அல்லது அணுவை மையப்படுத்திய தத்துவங்களும் எதிர்எதிர் முரண்களாக செயல்பட்டு வ‌ந்துள்ள‌ன.

கிரேக்க மெய்யியலில் டெமாகிரடசு என்பவர்தான் அணுவாதத்தின் தொடக்கப் புள்ளி எனலாம். இப்பிரபஞ்சம் என்பது பிளவுபடா மூலாதார துகள்கலான அணுக்களால் ஆனது என்று கூறினார். அதற்கு முன்பு தால்ஸ் என்பவர் உண்மைநிலையின் மூலாதாரம் தண்ணீர் என்றும், அனாக்ஸிமெனஸ் என்பவர் காற்று என்றும், ஹெராகிளடசு என்பவர் நெருப்பு என்றும் கூறி வந்தனர். அணுக்கள் எண்ணற்ற அளவுகளில், வடிவங்களில் உள்ளன என்றாலும் அவற்றின் ஆதார இயல்பு ஒன்றே என்றும், அணுக்களும் சூனியமும், தொடக்கமும் முடிவுமின்றி போய்க்கொண்டே இருப்பவை என்றும் டெமாகிரடசு கூறினார்.

இதன் மற்றொருபுரம், பரமெனிடிசு என்பவர் சூனியமும், மாற்றமும் ஒருவித மாயை என்றும் இப்பிரபஞ்சம் அனைத்தும் உள்ளடக்கப்பட்ட ஒரு மாற்றமில்லா முழுமையினால் ஆனது என்றும் கூறி வந்தார். இவ்வாறு டெமாகிரடசும் அவர் வழி வந்தவர்களும் அணுவாதத்தையும் பரமெனிடிசும் அவர் வழி வந்தவர்களும் முழுமைவாத்தையும் வலியுறுத்திக் கொண்டு வந்தனர். அதன் பிறகு பிளாட்டோ, அரிஸ்டாடில், எபிகியூரஸ் என்று தொடர்ந்து நடந்த இவ்விவாதம் பலவகைகளில் தொடர்ந்து மறுஆக்கம் செய்யப்பட்டது.

ஆனால் இம்முறைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உண்மைநிலையை ஒற்றைப்படையாகவே பார்த்து வருகின்றன. அணுவாதம் என்பது ஒருவகை சுருக்குதல் ஆகும். இதன் எதிர் திசையில் பயனிக்க முற்பட்ட முழுமைவாதமும், அணுவாதம் சுருக்கியவற்றை எல்லாம் உயர்த்திப்பிடிக்க நினைத்து அதுவும் சுருக்குதலிலேயே வந்து முடிந்தது. அனைத்தையும் உள்ளடக்கிய முழுமை என்ற நோக்கைக் கொண்ட முழுமைவாதம் பலவற்றை தொடர்ந்து உதாசீனப்படுத்தியே வருகிறது.


இந்தியத் தத்துவங்கள், பொதுவாக இரண்டு மூலங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று பருப்பொருள். இரண்டாவது பரம்பொருள். இதில் முதலாவதான பருப்பொருள் என்ற‌ மூலம், பிரபஞ்சம் மற்றும் அணு ஆகிய இரண்டு அடிப்படைகளைக் கொண்டிருக்கின்றது. இரண்டாவதான பரம்பொருள் என்பது பிரம்மம் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டு அடிப்படைகளைக் கொண்டிருக்கின்றது.



இந்தியத் தத்துவங்கள் பொதுவாக இரண்டு அணுகுமுறையைக் கொண்டது. ஒன்று முழுமை; மற்றது பகுதி. முதலாவது, பிரபஞ்ச முழுமையாகவும் இருக்கலாம் அல்லது பிரம்ம முழுமையாகவும் இருக்கலாம். இரண்டாவது அணுவாகவும் இருக்கலாம் அல்லது ஆன்மாவாகவும் இருக்கலாம். இரண்டு அணுகுமுறைகளும் வேறு வேறு.


பகுதியில் ஏற்படும் மாற்றம் முழுமையைப் பாதிக்குமா?


பொருள் முழுமையாக மாற்றம் பெறுகின்றதா அல்லது பகுதியாக மாற்றம் பெறுகின்றதா என்ற கேள்வி புத்தர் காலத்திலேயே எழுந்தது. அதற்கு பொருட்கள் மாறும்போது அதன் பகுதிகள் மட்டுமே மாறுவதில்லை; ஒரு பொருள் முழுவதுமே மாறி, வேறொரு பொருளாகி விடுகின்றது; கண்ணுக்குத் தோன்றாவிடினும், மாற்றம் என்பது ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது என்று புத்தர் பதிலிறுத்தார்.



மாற்றம் இருவகைப்படும். ஒன்று ஒரு பொருள் தன்னைப் போன்ற இன்னொன்றாக மாறுவது; மற்றது தன்னிலிருந்து சற்று வேறுபட்ட ஒரு பொருளாக‌ மாறுவது என்பனவாகும். அவ்வகையில் மாற்றம் நிகழும்போது பழைய பகுதிகள் எஞ்சி நிற்குமா அல்லது புதிய பகுதிகள் உருபெறுமா என்ற கேள்விக்கு வைசேடியம் பதிலளிக்கிறது. அதற்கான காரண காரியங்களையும் விளக்குகின்றது.



பகுதிகளுக்கும், அப்பகுதிகளாலாய ஒரு முழுப் பொருளுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதிலும் வைசேடிகர் வேறு இந்திய மதத்தினர் யாருமே கைக்கொள்ளாத மிக விசித்திரமான தத்துவம் ஒன்றைக் கைக்கொள்ளுகின்றனர். ஏதாவது இரு பொருள்களுக்கிடையில், உதாரணமாக ஒரு மேசைக்கும் அதன் மேலுள்ள புத்தகத்துக்குமிடையிலுள்ள தொடர்பைச் 'சம்யோக சம்பந்தம்' என்பர் வைசேடிகர். ஆனால், மேசையின் கால்களுக்கும் மேசைக்குமுள்ள சம்பந்தம் இத்தகையது அல்ல. அது மிக நெருங்கிய சம்பந்தம். அதனை வைசேடிகர் 'சமவாய சம்பந்தம்' என்பர். .

சம்யோகத்திலே, சம்பந்தப்பட்ட இரு பொருள்களுள், ஒன்றுக்காவது பங்கம் ஏற்படாது இரண்டையும் பிரித்தல் இயலும். 'ஆனால், சமவாயத்தில் அது இயலாது. கால்களாகிய பகுதிகளை, மேசையாகிய முழுப்பொருளிலிருந்து பிரிக்கும்போது, மேசை அழிகின்றது. நூல் பகுதி; புடைவை அந்நூலால் ஆகிய பொருள். நூலுக்கும் புடைவைக்கும் உள்ள சம்பந்தம் சமவாயம். சம்பந்தப்பட்ட இரு பகுதியுள் ஒன்றை அழிக்காது. அவற்றைப் பிரித்தல் இயலாது. புடைவையிலிருநது நூலைப் பிரிப்பதாயின், புடைவை அழியும், சமவாயம் என்று ஒரு சம்பந்தத்தை வற்புறுத்தியது வைசேடிகரின் சிறப்பாகும்.

உலகின்கண்ணுள்ள பொருள்கள் யாவும் அழிந்து அழிந்து தோன்றுகின்றன. உலகின் பகுதிகளாகிய பொருள்களுக்குச் சம்பவிக்கும் இத்தோற்றமும், அழிவும், உலகு முழுதுக்கும் சம்பவித்தே தீர வேண்டும். இந்த அழிவுக்குத், தோற்றத்துக்கும் காரணம் சேதனப் பொருளான ஒரு முதல்வனே ஆதல் வேண்டும் என்பது சைவசித்தாந்திகளின் கொள்கை.

பகுதிகளுக்குச் சம்பவிக்கும் தோற்ற அழிவுகள். அப்பகுதிகளை உடைய முழுப் பொருளுக்கும் சம்பவித்தே தீரும் என்ற நியதியை மீமாம்சகர் ஒப்புக்கொள்ளார். உலகின் கண்ணுள்ள பொருள்கள் தோன்றித் தோன்றி அழியுமே ஒழிய, உலகு முழுதும் இல்லை; அது என்றும் இருந்தபடியே இருக்கும் என்கின்றனர் மீமாம்சகர்.

முழுமையில் ஏற்படும் மாற்றம் பகுதியைப் பாதிக்குமா?


மாற்றத்திற்குள்லான சமூகம் முழுமையும் மாற்றம் பெற்று விட்டதாக கருத முடியுமா? முழுமை மாற்றம் எல்லா பகுதிகளிலும் முழுமையான மாற்றத்திற்கு இட்டு செல்லுமா? மாற்றத்திற்கும் பாதிப்புக்கும் உள்ளாகாத பகுதிகள் இருக்கவியலுமா?


தனியாக பகுதி மாற்றம் சாத்தியமா? ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் ஏற்ப‌டும் மாற்ற‌ங்க‌ள் வேறு வேறு த‌ள‌ங்க‌ளிலும் வேறு வேறு விகிதாசார‌த்திலும் மாற்ற‌ங்க‌ள் ஏற்ப‌டுவ‌து உண்மையா? ப‌குதி மாற்ற‌ங்க‌ள் முழுமையின் மாற்ற‌ங்களுக்கு இட்டுச் செல்லுமா?


ஒரு நிலையில் முழுமையில் ஏற்படும் மாற்றம் பகுதிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும், ஒரு நிலையில் பகுதிகளில் ஏற்படும் வளர்ச்சி முழுமையின் மாற்றத்திற்கு அடிப்படையாகவும் இருக்கும். பகுதிகள் சில நேரங்களில் தன்னிச்சையாகவும் தனியாகவும் இயங்கும் போக்கையும் பார்க்கலாம். முழுமை பகுதிகளை முற்றிலுமாக உட்செரித்துக் கொள்ளும் நிலையும் பார்க்கலாம்.


முழுமையை பாதிக்காத பிராந்திய பகுதி இயக்கங்கள் நிலவியதையும் பகுதியைப் பாதிக்காத முழுமைப் பற்றிய இயக்கங்களும் நிலவுவதையும் வரலாற்றில் கண்டிருக்கிறோம். சில நேரங்களில் இவ்விரண்டும் எதிர் எதிர் நிலைகளைக் கூட எடுப்பதையும் கண்டிருக்கிறோம். சான்றாக பெரியார், பூலே போன்றவர்களின் பிராந்திய இயக்கங்கள், காங்கிரசின் இந்திய விடுதலை இயக்கம்.


20ம் நூற்றாண்டின் தொடக்ககால அல்லது மத்திய காலம் இந்திய தேசிய விடுதலை உணர்வு பொங்கிப் பிரவகித்த கால கட்டம். இக்காலகட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் பிராந்தியங்களில் விடுதலை உணர்வுகள் எவ்வெவ்வாறு வெளிப்பட்டன? விடுதலை உணர்வு சார்ந்து என்னென்ன கிளர்ச்சிகள், என்னென்ன போராட்டங்கள் நடைபெற்றன? என்னென்ன மாதிரியான தலைவர்கள், என்னென்ன மாதிரியான இயக்கங்கள்? இவை சார்ந்த அனைத்துத் தரவுகளின் தொகுப்பையும் கொண்டுதான் நாம் 20ம் நூற்றாண்டு சமூகத்தின் முழுசித்திரம் தீட்டமுடியும்.


இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தமிழ்நாட்டின் சமூகச் செயல்பாட்டுத் தளத்தில் செயல்பட்ட பெரியார் அயோத்திதாசர் இவரிடம் சுதந்திரப் போராட்ட தாகமோ, இநந்திய விடுதலை உணர்வோ இல்லை. அவர் காலத்திய இந்திய சுதந்திரம், சுதேசியம் போன்றவை மீது சிறிதளவுகூட மரியாதை இருந்ததில்லை. இதே காலகட்டத்தில் ஜோதிபா பூலே, அய்யன்காளி, நாராயணகுரு, வைகுண்டசாமி போன்ற தலைவர்களும் சமூகத்தில் இயங்கிக் கொண்டிருந்தனர்.


பகுதிக்கும் முழுமைக்கும் உள்ள உறவு



இது முழுமைக்கும் பகுதிக்கும் உள்ள உறவுப் பற்றிய பிரச்சினையாகவும் அவற்றிற்கிடையேயுள்ள முரண்பாடாகவும் பார்க்க வேண்டும். இது சாராம்சத்தில் தனிக்கும் ஒட்டுமொத்தத்திற்கும் உள்ள பிரச்சினையாகும். இது தொடர்பான‌ இயங்கியல் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாதவரை இப்பிரச்சினையின் புரிந்துக் கொள்ள முடியாது. அதைத் தீர்க்கவும் இயலாது.



முழுமைக்கும் பகுதிகளுக்கும் உள்ள உறவு என்ன? முழுமை என்பது பகுதிகளின் கூட்டுத்தொகையா? பகுதி என்பது முழுமையில் தனித்த கூறா? ப‌குதிக‌ள் த‌னித்து இய‌ங்கும் த‌ன்மையுடைய‌தா? முழுமையின் இயக்கத்திலிருந்து பிரித்தறியா தன்மையுடையதா? ப‌குதிக‌ளின் இய‌க்க‌ம் முழுமையின் பிரிக்க‌முடியாத இயக்கமா? ப‌குதிக‌ளில் ஏற்ப‌டும் மாற்ற‌ங்க‌ள் முழுமையை பாதிக்க‌ச் செய்யுமா? முழுமையில் மாற்ற‌ங்க‌ள் ஏற்ப‌டுமானால் அவை ப‌குதிக‌ளில் எந்த‌ வ‌கையான‌ பாதிப்புக‌ளை ஏற்ப‌டுத்தும்?



ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சியின் வளர்ச்சிப்போக்கு பல்வேறு மாற்றங்களுக் குட்பட்டு வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய வளர்ச்சிப் போக்கின் பாதையில் அந்தப் பொருள் அல்லது அந்த நிகழ்ச்சி பல்வேறு பகுதி பொருட்களுக்கும் அல்லது சிறு நிகழ்வுகளுக்கும் இடமளித்து வளர்ச்சி பெறுவது அதற்கு இன்றியமைதாகிறது.



மக்களின் கூட்டு உழைப்பு சார்ந்த பொருளாதாரம் தனியார் உழைப்பாக மாறி, தனிச் சொத்துரிமையாகிய வரலாற்றின் தொடர்ச்சியில், அதையும் இழந்து செல்லும் இப்போக்கின் ஊடாகக் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, குடும்பம் என்ற அலகு சிதைந்து, மனிதனைத் தனிநபராக மாற்றியுள்ளது,



ஒரு விதைக்குள்ளே பகுதிகள் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஆனால் அதில் மாற்றம் ஏற்பட்டு முளைவிட்டு செடியாகி மரமாக வளர்ச்சி பெறும் வளர்ச்சிப் போக்கில் பகுதிகளில் வளர்ச்சி பெற்றிருக்கும்.



இங்கு முழுமைக்குள் ஏற்படும் மாற்றங்கள் பகுதிகளின் வளர்ச்சிக்கும், பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் முழுமையில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இவற்றில் எது முதன்மையாக இருக்கின்றது என்பது பொருளின் வளர்ச்சி போக்கின் தன்மையைப் பொருத்தது.



ஒரு பொருளில் பகுதிகள் வளர்ச்சி பெறாதிருக்கும் பொழுது முழுமையில் ஏற்படும் மாற்றங்கள் முதன்மைப் பெறுகின்றன. பகுதிகள் வளர்ச்சி பெற்றிருக்கும் நிலைமையில் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சிப்போக்குகள் முக்கியத்துவம் அடைகின்றன. எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரியான மாற்றத்தையோ அல்லது வளர்ச்சிப் போக்கையோ பார்க்கமுடியாது.


எல்லா சூழ்நிலைமைகளிலும் முழுமையின் வளர்ச்சிப்போக்கிற்கு அல்லது மாற்றத்திற்கு முக்கியத்தும் அளிப்பது என்பது இலட்சியவாதத்திற்கு இடமளிப்பதாகும். இது கருத்துமுதல்வாதத்திற்கு இட்டுச் செல்லும் தர்க்கத்தை உடையதாகும். மாறாக பகுதிகளில் ஏற்படும் மாற்றத்திற்கும் வளர்ச்சிப் போக்கிற்கும் முதன்மை யளிப்பது அனுபவவாதத்தில் முடியும்.


நாம் வாழும் உலகம், பிரபஞ்சம் முழுமையின் பிரிக்கவியலா பகுதி. ஆனாலும் தனித்த இயக்கமும் கொண்டது. சமூகம், இயற்கையின் பிரிக்க வியலாமல் இணைந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தனது தனித்த இயக்கத்தையும் கொண்டிருக்கிறது. தனிமனிதன் சமூகத்தைச் சார்ந்து இயங்கும் பிரிக்கமுடியா ஓர் அங்கம். ஆனாலும் தனித்தும் இயங்கிக் கொண்டிருக்கிறான். சமூக சூழ்நிலைமைகளுக்கு உட்பட்டு இயங்கும் அதே வேளையில் சமூக சூழ்நிலைமைகளையும் மாற்றக்கூடிய அறிவையும் ஆற்றலையும் பெற்றிருக்கிறான். இவ்வாறு முழுமையும் பகுதியும் இணைந்தும் தனித்தும் இயங்கி வருகின்றன.



ஒருவர் ஒரு நிகழ்ச்சிப்போக்கின் வளர்ச்சிப்போக்கில் எந்த இடத்தில் தலையீடு செய்கிறார் என்பதைப் பொருத்து அவரது அணுகுமுறை மாற்றத்திற்குட்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்தப் பொருள் முற்றிலுமாக மாற்றத்திற்கு உட்படும் வரை பகுதிகளின் வளர்ச்சிப் போக்கு இன்றியமையாததாகும்.





துணை நின்ற நூல்கள்

1.இந்திய தத்துவ ஞானம், கி.லட்சுமணன்

2.வரலற்றெழுதுதல் - டி.தருமராஜன்

3. பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் - பராகா





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக