எங்கல்சின் விளக்கமும் விரிவாக்கமும்
அடித்தளத்திற்கும் மேல்கட்டுமானத்திற்கும் உள்ள உறவு என்ன என்ற விவாதம் மார்க்ஸ், ஏங்கல்ஸ் காலத்திலேயே தீவிரமான விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பலவிதமாக புரிந்துக் கொள்ளப்பட்டன. இதன்மீதான வாதப்பிரதிவாதங்கள் பல்வேறு விதமான சிந்தனைப் போக்குக்களை உருவாக்கின. அவற்றில் ஒரு முக்கிய போக்காக, மேல்கோப்பிற்கு உரித்தான செல்வாக்கை மறுத்து பொருளாதாரத்தளம் மட்டுமே நிர்ணயம் செய்யும் என்ற பொருளாதார நிர்ணயவாதப் போக்கு எழுந்தது இவ்வகையான இறுக்கமான அணுகுமுறையை மார்க்சும் எங்கல்சும் கண்டித்து வந்தனர்.
1890 களில் எங்கல்சு எழுதிய புகழ்பெற்ற கடிதங்கள் வாயிலாகவும், முன்னுரைகளின் வாயிலாகவும் வேறு பல இடங்களிலும் அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்கும் உள்ள உறவுகள் குறித்த இறுக்கமான அணுகுமுறையை மாற்றி இயங்கியல் அணுகுமுறையில் விளக்கங்களையும் விரிவாக்கங்களையும் செய்து தனது பங்களிப்பை ஆற்றினார்.
'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்' என்ற நூலின் முன்னுரையில் ‘பொருள்முதல்வாதக் கருத்தமைப்பின்படி கடைசியாகப் பார்க்கும் பொழுது உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும், மறு உற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானகரமான காரணியாகும். ஆனால் இது இரு வகையான தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வது அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும் அவற்றைப் பெறுவதற்குத் தேவையான கருவிகளையும் உற்பத்தி செயவது; மறுபக்கத்தில், மனிதர்களையே உற்பத்தி செய்வது; அதாவது மனித இனத்தைப் பெருக்குவது. ஒரு திட்டவட்டமான வரலாற்று சகாப்தத்தை சேர்ந்த ஒரு திட்டவட்டமான நாட்டைச் சேர்ந்த மக்கள் எந்த சமுக அமைப்பின் கீழ் வாழ்ந்து வருகிறார்களோ அந்தச் சமூக அமைப்பை உற்பத்தியின் இரு வகைகளும் கட்டுபடுத்துகின்றன. ஒரு பக்கத்தில் உழைப்பின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்பது; மறுபக்கத்தில் குடும்பத்தின் வளர்ச்சி எந்தக் கட்டத்திலிருக்கின்றது என்பதும் இந்த அமைப்பைக் கட்டுபடுத்துகின்றன’ என எங்கல்சு (1884) கூறுகிறார்.
இனி எங்கல்சு எழுதிய புகழ்பெற்ற கடிதங்களிலிருந்து சில மேற்கோள்களைப் பார்ப்போம். பொருளாதார தளத்தின் மீதான அதிக அழுத்தம் கொடுப்பதை விமரிசித்த எங்கல்சு ஸ்டார்கென்பர்க் என்பாருக்கு 1890 ல் எழுதியக் கடித்தத்தில் பின்வறுமாறு குறிப்பிடுகின்றார். “அரசியல், சட்டவியல், தத்துவஞான, சமய, இலக்கிய கலை வளர்ச்சியானது பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. ஆனால் இவை அனைத்தும் ஒன்றின் மீது ஒன்றும் பொருளாதார அடிப்படையின் மீதும் எதிர்ச்செயல் புரிகின்றன. பொருளாதார நிலைமை காரணமாக அமைகின்றது என்பதோ அது மட்டுமே செயலூக்கமிக்கது என்பதோ அல்லது மற்றவை செயலற்ற விளைவாக மட்டுமே இருக்கின்றன என்பதோ உண்மையல்ல. பொருளாதார அவசியத்தின் அடிப்படையில் அது பரஸ்பரம் பாதிக்கச்செய்கின்றது; இறுதியில் அது மட்டுமே எப்பொழுதும் தன்னைதானே வலியுறுத்திக்கொள்கின்றது.”
இங்கு, பொருளாதார அடித்தளம் இறுதியாக நிர்ணயிக்கும் என்ற எங்கெல்சின் வரையறையானது காரணகாரிய கோட்பாட்டின் அடிப்படையிலிருந்து பெறப்பட்டதாகும். பின்னாளில் அவர் எழுதிய கடிதங்களில் கூட இந்த அடிப்படையை கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1890 ல் பிளாக்கு என்பவருக்கு எங்கெல்ஸ் எழுதியக் கடிதத்திலும் அதை மேலும் செழுமைப்படுத்தி விளக்குவார்.
“'வரலாற்றியல் பொருள் முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதுமே சொல்லவில்லை. ஆகவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால் அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத சூக்குமமான அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகின்றார். பொருளாதார நிலைமைதான் அடிப்படை. ஆனால் மேற்கட்டமைப்பின் பல்வேறு கூறுகள் -வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைவுகளும் வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு இதரவை சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாவற்றின் மறுவினைகளும் கூட அரசியல் சட்டவியல் தத்துவஞானத் தத்துவங்கள், சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் - வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்திகின்றன. பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன.
“பிரஷ்ய அரசு வரலாற்று ரீதியான பொருளாதாரக் காரணங்களிலிருந்து தோன்றி வளர்ச்சியுற்றது. வட ஜெர்மனியிலுள்ள பல சிறு அரசுகளில் பிரான்டென்பர்க்தான் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பொருளாதார மொழியியல் மற்றும் மதச்சீர்திருத்தத்துக்கு பிறகு மத வேறுபாட்டின் புறவடிவமாக இருந்த பேரரசாக உத்தேசிக்கப்பட்டது என்றும் இது பொருளாதார அவசியத்தினால் நிர்ணயிக்கப்பட்டதே தவிர மற்ற சக்திகளினால் அல்ல என்றும் ஏட்டுப் புலமையின்றி அநேகமாகக் கூறமுடியாது. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் ஜெர்மனியில் ஒவ்வொரு சிறிய அரசின் இருத்தலை அல்லது சுதேத்து மலைத் தொடரிலிருந்து டானுஸ் வரை ஜெர்மனியின் குறுக்கே ஒருமுறைப்படியான வெடிப்பை ஏற்படுத்திய பூகோளப் பிரிவினைச் சுவரை அகலப்படுத்திய மேல் ஜெர்மன் மெய்யெழுத்து வரிசை மாற்றங்களின் தோற்றத்தைப் பொருளாதாரப் பொருளாதார இனங்களில் விளக்குவது கடினமானதே.( எங்கல்சு பிளாக்குக்கு எழுதிய கடிதம் - செப் - .21,1890)’
“இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன. அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு அதாவது பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள்இடைத்தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை என்று அற்பமானதென்று நாம் கருத முடியாது. மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது''
“இளைஞர்கள் சில சமயங்களில் பொருளாதாரத் தரப்பின் மீது உரியதைக் காட்டிலும் அதிகமான அழுத்தம் கொடுப்பதற்கு மார்க்சும் நாமும் பகுதியளவுக்குப் பொறுப்பாவோம். முக்கியமான கொள்கையை மறுத்த எதிரிகளுக்கு எதிராக நாங்கள் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த இடைச்செயலில் பங்கெடுக்கின்ற மற்ற கூறுகளுக்கு உரிய அழுத்தம் கொடுப்பதற்கு அவசியமான காலம், இடம் அல்லது சந்தர்ப்பம் எங்களுக்கு எப்பொழுதும் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றின் ஒரு காலகட்டத்தை ஆராய்ச்சி செய்வது அதாவது செய்முறையில் அதைக் கையாளுவது என்பது வேறு விஷயம், அங்கே தவறு செய்வதை அனுமதிக்க முடியாது.”
வரலாற்றியல் பொருள் முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும் என்ற எங்கல்சின் கூற்றில் வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகள் 'உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி' மட்டுமே ஆகும் என்று வரையறுத்துக் கூறுவார். இதில் பொருளாதாரத் அடித்தளம் மட்டுமே நிர்ணயக்கிற கூறாக எங்கல்சு பார்க்கவில்லை. மாறாக மேல்கட்டுமானக் கூறுகளுக்கும் இடம் உள்ளதாக அர்த்தப் படுத்துகின்றார். எனவேதான் 'பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால் அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத சூக்குமமான அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகின்றார்' என்று எங்கல்சு கூறுவதிலிருந்து அதைப் புரிந்து கொள்ளலாம்.
மேல்கட்டுமானம், அடித்தளப் பொருளாதார நிர்ணயத்துக்கு கட்டுப்பட்ட வகையில், சார்புநிலையிலான சுதந்திரமாக எதிர்செயல்கள் புரிவதை எங்கல்சு வரையறுத்துக் கூறுவார். எங்கல்சு அக்.27, 1890 இல் கோ.ஷ்மிட்டுக்கு எழுதிய கடிதத்தின் சாரம் வருமாறு:...”அரசு தோன்றுகிறது. பண்ட வர்த்தகத்திலும், பின்னர் பண வர்த்தகத்திலும் நடப்பதை ஒத்த ஓர் இயக்கம் நடைபெறுகிறது; புதிய சுயேச்சையான சக்தி பிரதானமாக உற்பத்தியின் இயக்கத்தைப் பின்பற்றுகின்ற பொழுதே, தன்னுடைய உள்ளுறையான சார்புநிலைச் சுதந்திரத்தின் மூலம் அதாவது ஒரு சமயத்தில் மாற்றித் தரப்பட்டு படிப்படியாக மேலும் வளர்க்கப்பட்ட சார்பு நிலைச் சுதந்திரத்தின் மூலம் உற்பத்தி நிலைமைகள் மற்றும் போக்கின் மீது தன் பங்குக்கு எதிர்ச்செயல் புரிகிறது. இது இரண்டு சமத்துவமில்லாத சக்திகளின் இடைச்செயல்; ஒரு பக்கத்தில் பொருளாதார இயக்கம், மறுபக்கத்தில் புதிய அரசியல்சக்தி; இச்சக்தி இயன்ற அளவுக்கு அதிகமான சுதந்திரத்துக்கு முயல்கின்றது; அந்த அரசியல் சக்தி ஒரு தடவை கிடைத்த பிறகு அது சொந்த இயக்கத்தைப் பெற்று விடுகிறது. மொத்தத்தில் பொருளாதார இயக்கம் முன்னேறும்; ஆனால் அது தானே நிறுவி சார்புநிலையான சுதந்திரம் அளித்த அரசியல் இயக்கத்தின் ஒரு பக்கத்தில் அரசு ஆட்சியதிகாரத்தின் இயக்கத்திலிருந்தும் மறு பக்கத்தில் அதே சமயத்தில் தோற்றுவிக்கப்படுகின்ற எதிர்ப்பிலிருந்தும் எதிர்ச் செயல்களுக்கு உட்படுகிறது.”
“பொருளாதார வளர்ச்சியின் மீது அரசு அதிகாரத்தின் எதிர்த்தாக்கம் மூன்று ரகங்களாக இருக்க முடியும்; அது அதே திசையில் நடைபெறமுடியும், அப்பொழுது வளர்ச்சி அதிக வேகமாக இருக்கிறது; அது பொருளாதார வளர்ச்சியின் திசைவழிக்கு எதிராக நடைபெற முடியும். அப்படியானால் இப்பொழுது ஒவ்வொரு மாபெரும் மக்களினத்திலும் அது குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு தகர்ந்து விடும்; அல்லது பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட திசைவழிகளில் முன்னேறிச் செல்வதை அது தடுக்க முடியும், வேறு திசைவழிகளை வகுத்தளிக்க முடியும். முடிவில் இது முந்திய இரன்டு வழிகளில் ஒன்றாகத் தன்னைக் குறுக்கிக் கொள்கிறது. ஆனால் இரண்டு மற்றும் மூன்றாவது விசயங்களில் அரசியல் அதிகாரம் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகமான நாசத்தை ஏற்படுத்த முடியும்.”
"சட்டத் துறையிலும் இம்மாதிரியே. முழுநேர வழக்குறைஞர்களைத் தோற்றுவிக்கின்ற புதிய உழைப்புப் பிரிவினை அவசியமாக்கப்பட்ட உடனே மற்றொரு புதிய மற்றும் சுதந்திரமான துறை திறந்துவிடப்படுகிறது; அத்துறை பொதுவில் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருந்தாலும், இத்துறைகளின் மீது எதிர்ச் செயல் புரிவதற்குரிய விசேச ஆற்றலையும் கொண்டிருக்கிறது. ஒரு நவீன அரசில் சட்டம் பொதுப்படையான பொருளாதார நிலையுடன் பொருந்தியிருக்க வேண்டும். அதன் வெளியீடாக இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி முரண்பாடுகளின் காரணமாகத் தன்னைத் தானே நிராகரித்து விடாதபடி உள்ளார்ந்த ஒத்திணைந்த வெளியீடாகவும் இதை நிறைவேற்றுவதற்குப் பொருளாதார உறவுகளின் நுட்பமான பிரதிபலிப்பு மேலும் பாதிக்கப்படுகிறது... ஆக 'சட்ட வளர்ச்சியின்' போக்கு பெருமளவுக்கு, முதலில் பொருளாதார உறவுகளைச் சட்டக் கோட்பாடுகளாக நேரடியாக மாற்றுவதில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை ஒழிப்பதற்கான முயற்சிகளிலும் ஒருங்கிசைந்த சட்ட அமைப்பை நிறுவுவதிலும் மற்றும் பிறகு நடைபெறுகின்ற பொருளாதார வளர்ச்சியின் தாக்கமும் கட்டாயமும் இந்த அமைப்பின் மீது திரும்பத் திரும்ப ஏற்படுத்துகின்ற உடைப்புகளிலும் அடங்கியிருக்கிறது.”
“...ஒவ்வொரு விசயத்திலும் பொருளாதாரக் காரணங்களினால் மட்டுமே ஏற்பட்டிருக்கின்றன என்று நிரூபிப்பது கடினமாகும். இரண்டுமே பொருளாதாரத் துறையின் மீது மிகவும் கணிசமான அளவுக்கு எதிர்ச்செயல் புரிகின்றன... இயற்கையைப் பற்றி அறிவின் முன்னேற்றத்துக்குப் பிரதான இயக்குச் சக்தியாக பொருளாதார அவசியம் இருந்தாலும், அது மேன்மேலும் அப்படி ஆகியிருந்தாலும் இந்த பூர்விக கால பிதற்றல்கள் எல்லாவற்றுக்கும் பொருளாதார காரணங்களைத் தேடுவதும் கண்டுபிடிப்பதும் வெறும் ஏட்டுப்புலமை என்பது உறுதி.” “...அரசியல் அதிகாரம் பொருளாதார ரீதியில் சக்தியில்லாதது என்றால், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சர்வாதிகாரத்துக்காக நாங்கள் போராடுவது ஏன்? பலாத்காரம் அதாவது அரசின் ஆட்சியதிகாரம் ஒரு பொருளாதாரச் சக்திதானே!”
எங்கல்சின் கருத்துரையில் காணப்படும் குறிப்புகளைக் கீழ்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.
1.வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருத்தோட்டமானது உற்பத்தியும், அதையடுத்து உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும்தான், சமுதாயக் கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும்" என்று எங்கல்சு கூறுவார்.
2.வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும் என்று கூறுவார்.
3. இதுவரை வளர்ச்சியடைந்துள்ள பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும்" என மார்க்சு கூறுவார்.
4. பொருளாதார அவசியத்தின் அடிப்படையில் அது பரஸ்பரம் பாதிக்கச்செய்கின்றது; இறுதியில் அது மட்டுமே எப்பொழுதும் தன்னைதானே வலியுறுத்திக்கொள்கின்றது.”
5. பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால் அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத சூக்குமமான அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகின்றார்.
6. தன்னுடைய உள்ளுறையான சார்புநிலைச் சுதந்திரத்தின் மூலம் அதாவது ஒரு சமயத்தில் மாற்றித் தரப்பட்டு படிப்படியாக மேலும் வளர்க்கப்பட்ட சார்பு நிலைச் சுதந்திரத்தின் மூலம் உற்பத்தி நிலைமைகள் மற்றும் போக்கின் மீது தன் பங்குக்கு எதிர்ச்செயல் புரிகிறது.
7. ஒரு பக்கத்தில் பொருளாதார இயக்கம், மறுபக்கத்தில் புதிய அரசியல்சக்தி; இச்சக்தி இயன்ற அளவுக்கு அதிகமான சுதந்திரத்துக்கு முயல்கின்றது; அந்த அரசியல் சக்தி ஒரு தடவை கிடைத்த பிறகு அது சொந்த இயக்கத்தைப் பெற்று விடுகிறது.
8. சட்டத்துறை பொதுவில் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருந்தாலும், இத்துறைகளின் மீது எதிர்ச் செயல் புரிவதற்குரிய விசேச ஆற்றலையும் கொண்டிருக்கிறது.
9. பலாத்காரம் அதாவது அரசின் ஆட்சியதிகாரம் ஒரு பொருளாதாரச் சக்தி.
எங்கல்சு உற்பத்தி, மறு உற்பத்தி என்ற வகையாகப் பிரிக்கிறார். முதலாவதாக, உற்பத்தி என்பது வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வது அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும் அவற்றைப் பெறுவதற்குத் தேவையான கருவிகளையும் உற்பத்தி செயவது; இரண்டாவதாக கூறப்படும் மறு உற்பத்தி என்பது மனிதர்களையே உற்பத்தி செய்வது; அதாவது மனித இனத்தைப் பெருக்குவது என்று விளக்கிக் கூறுகிறார். பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரேகூறு என்று மார்க்சியம் கூறவில்லை. மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். ஆக சமூகத்தைத் தீர்மானிக்கிற வல்லமை பொருளாதார உற்பத்திக்கும் சமூக மறுஉற்பத்திக்கும் உண்டு என்று மார்க்சின் அதே விளக்கத்தை எங்கல்சும் கூறுகிறார். இங்கு கூறப்பட்டுள்ள 'உற்பத்தி, மறு உற்பத்தி என்பனவற்றை பொருளாதார அடித்தளத்திற்குள் அடக்கவியலாது. பொருளாதார அடித்தளம் என்பது ஏற்கனவே கூறியுள்ளவாறு, உற்பத்தி, விநியோகம், பரிவர்த்தனை ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கியதாகும். 'உற்பத்தி, மறு உற்பத்தி என்ற இணைப்பு பொருளாதார அடித்தளத்தின் பரப்பைவிட விரிவானது. பரந்துபட்டது.
மேலே கூறப்பட்டுள்ள கடிதப் பகுதியில், பொருளாதார அடித்தளத்தின் மீது மேல்கட்டுமானத்தின் கூறுகள் முக்கியமாக அரசு அதிகாரம், சட்டம், தத்துவஞானம் போன்றவை எவ்வாறு பொருளாதார அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்புகளையும் சில வேளைகளில் மீறவும் செய்கின்றன என்பதை உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும் சில சமயங்களில் பொருளாதாரத் தரப்பின் மீது உரியதைக் காட்டிலும் அதிகமான அழுத்தம் கொடுப்பதற்கு மார்க்சும் நாமும் பகுதியளவுக்குப் பொறுப்பாவோம் என்று சுயவிமரிசனம் செய்து கொள்ள எங்கல்சு தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
‘நிர்ணய’த்திலிருந்து ‘இறுதி நிர்ணயம்’ வரை
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது புதிய உற்பத்தி சாதனங்களை உருவாக்குகிறது. மேலும் அது உற்பத்தி உறவோடு முரண்பட வைக்கிறது. அதே போல உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது புதிய அரசியல், விஞ்ஞான, தத்துவக் கருத்துக்கள் தோன்றுகின்றன. புதிதாக வளர்ந்த உற்பத்தி சக்திகள், புதிய அரசியல் விஞ்ஞான, தத்துவக் கருத்துக்களை ஆயுதமாகக் கொண்டு உற்பத்தி உறவை மாற்ற முனைகின்றன. ஆக சமூக மாற்றத்தின் போது உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுக்கும் ஆன முரண்பாடு மட்டும் செயல்படுவதில்லை, பொருளாதார அடித்தளத்திற்கும், மேல்கட்டுமானத்திற்கும் இடையேயான முரணும் சேர்ந்து வினையாற்றுகின்றன. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவோடு முரண்படுவதும் அதே சமயம் தத்தமக்குள் முரண்படுவனவாகவும் இருக்கின்றன. அதேபோல மேற்கோப்பில் இருக்கும் பல்வேறு அங்கங்களும் தத்தமக்குள் முரண்படுவதும், ஒன்றை மற்றொன்று பாதிக்கவும் செய்கின்றன. அதே போன்று சிற்சில சமயங்களில் மேற்கோப்பின் சில அம்சங்கள் அடித்தளத்தைச் சார்ந்த உற்பத்திச் சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் மாற்றியமைக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கின்றன. இறுதியில் பொருளாதார அடித்தளமே மேற்கோப்பை நிர்ணயிக்கும் தன்மை கொண்டதாகும். அடித்தள நிர்ணயத்திலிருந்து இறுதி நிர்ணயத்திற்கு இட்டுச் சென்றது ஏதோ தற்செயலானதன்று; அடித்தளம் மேற்கட்டுமானம் ஆகிய இரண்டுக்குமுள்ள இயங்கியல் உறவை வளர்த்தெடுப்பதற்கான அவசியத்திலிருந்து வந்தடைந்த முடிவாகும்.
மேல்கட்டுமானத்தின் எல்லா அம்சங்களையும் பொருளாதார அடிப்படையில் விளக்க முடியுமா?
மேல்கட்டுமானம் பொருளாதார அடித்தளத்திலிருந்து எழுகின்றது; ஆகவே, மேல்கட்டுமானத்தின் எல்லா அம்சங்களையும் பொருளாதார அடிப்படையில் விளக்க முடியும் என்பது தான் பெரும்பாலான மார்க்சியர்களின் அணுகுமுறையாக இருந்து வருகின்றது. இது வேறொன்றுமில்லை. பொருளாதார நிர்ணயவாதத்தின் முக்கிய துணைவிதியாகும். ஆனால் எங்கல்சு இது போன்ற பிரச்சனை எழுந்தபோது, மேல்கட்டுமானத்தின் எல்லா அம்சங்களையும் பொருளாதார அடிப்படையில் விளக்க முடியாது என்று விளக்கியுள்ளார்.
“..பிரஷ்ய அரசு வரலாற்று ரீதியான பொருளாதாரக் காரணங்களிலிருந்து தோன்றி வளர்ச்சியுற்றது. வட ஜெர்மனியிலுள்ள பல சிறு அரசுகளில் பிரான்டென்பர்க்தான் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பொருளாதார மொழியியல் மற்றும் மதச்சீர்திருத்தத்துக்கு பிறகு மத வேறுபாட்டின் புறவடிவமாக இருந்த பேரரசாக உத்தேசிக்கப்பட்டது என்றும் இது பொருளாதார அவசியத்தினால் நிர்ணயிக்கப்பட்டதே தவிர மற்ற சக்திகளினால் அல்ல என்றும் ஏட்டுப் புலமையின்றி அநேகமாகக் கூறமுடியாது. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் ஜெர்மனியில் ஒவ்வொரு சிறிய அரசின் இருத்தலை அல்லது சுதேத்து மலைத் தொடரிலிருந்து டானுஸ் வரை ஜெர்மனியின் குறுக்கே ஒருமுறைப்படியான வெடிப்பை ஏற்படுத்திய பூகோளப் பிரிவினைச் சுவரை அகலப்படுத்திய மேல் ஜெர்மன் மெய்யெழுத்து வரிசை மாற்றங்களின் தோற்றத்தைப் பொருளாதார இனங்களில் விளக்குவது கடினமானதே.(“ எங்கல்சு பிளாக்குக்கு எழுதிய கடிதம்செப்.21,1890)
கருத்துருவங்கள் அடிப்படையின் பிரதிபலிப்பு என்பதை எந்திரத்தனமாக அணுகும்போது, எல்லா கருத்துருவங்களையும் பொருளாதார அடிப்படையினால் விளக்கிவிடமுடியாது. அடிப்படையானது நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பிரதிபலிக்கலாம் என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகின்றனர்.
“அடிப்படையானது எதிர்மறையாகக் கூட மேற்கோப்பில் பிரதிபலிக்கலாம் என்பதை எங்கசு விளக்குகிறார். 'ம்ண்ணை விட்டு விலகி விண்ணில் பறக்கும் கருத்துருவங்களைப் பொருத்தமட்டிலும் அதாவது மதம், தத்தௌவம் போன்றவற்றிலும் அவற்றிற்கு வரலாற்று முன் தொகுப்பு உள்ளது. அத்தொகுப்பு ஏற்கனவே இருக்கிறது. மனித இருப்பினைப் பற்றி இந்தப் பொய்யான கருத்துக்கள் ஆவிகள் பற்றிய நம்பிக்கைகள், மாந்திரீக சக்திகள், பெரும்பாலும் எதிர்மறையான பொருளாதார அடிப்படையைக் கொண்டுள்ளன.” ( ஸ்கீமிட்க்கு எங்கல்சு எழுதிய கடிதம்) இந்த அணுகுமுறையைத் தான் மதம் பற்றிய கருத்துக்களை உருவாக்குவதற்கு மார்க்சு, எங்கல்சு பயன்படுத்துகின்றனர்.
சில சமயங்களில் மேற்கோப்பு அடித்தளத்தை தீர்மானிக்கும் என்பது சரியா?
சமூக வளர்ச்சியின்போது பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களுக்கு மார்க்சியம் முக்கியத்துவம் கொடுக்கிறது. பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் சமூக வரலாற்றை நிர்ணயிக்கிறது என்பது மார்க்சீய அணுகுமுறை. சமூக இயக்கத்தின் அடிப்படை, பொருளாதாரம், அதற்கு மேலே அதைச் சார்ந்து இயங்குவதுதான், தத்துவம், அரசியல், மதம், பண்பாடு, சட்டம் அனைத்தும். மேல்கட்டுமான அம்சங்கள் அனைத்தையும் நிர்ணயிப்பது பொருளாதாரம்.
மார்க்சின் இத்தகைய சமூக மாதிரி என்பது வேறுபட்ட பல தளங்களை உள்ளடக்கியது. இவையனைத்தும் ஒன்றோடொன்று வினை புரியும் தன்மை கொண்டன. ஆனால் சமூகத்தை அடித்தளம், மேல் அமைப்பு என்ற இரண்டு கூறுகளாக பிரித்துப் பார்க்க வேண்டுமென்று கருதுகின்றனர். அதாவது, இரண்டு சரிநிகர் கூறுகளாக சமூகத்தை பிளவுபடுத்திப் பார்க்காமல், பொருளாதாரம், அரசியல், தத்துவம், பண்பாடு, கலை, இலக்கியம் என்ற அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புள்ளதாகவும், ஒன்றோடொன்று வினையாற்றும் தன்மை கொண்டனவாகவும் பார்க்க வேண்டும். இவை வேறுபட்ட பல தளங்களில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பன. ஆனால் பொருளாதார காரணியே சமூக வரலாற்றில் ஆதிக்கம் வகிக்கும் ஒரே காரணி என்ற தவறான அணுகுமுறையும், வெறும் பொருளாதார அம்சங்களை ஆய்வு செய்துவிட்டு, மற்ற அம்சங்களை புறக்கணித்து ஆராயும் போக்கும் கூடவே வளர்ந்து வந்ததை தவிர்க்கயியலாது போனது.
எனவேதான், பொருளாதார அடித்தளம்தான் மேற்கோப்பை நிர்ணயம் செய்யும் என்று மார்க்சோ அல்லது ஏங்கல்சோ எங்குமே கூறவில்லை. அடித்தளம் மேற்கோப்பை நிர்ணயிக்கும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதைவிடுத்து அடித்தளம்தான் மேற்கோப்பைத் தீர்மானிக்கும் என்று கூறவில்லை. இதன்பொருள் என்னவென்றால், அடித்தளமும் மேற்கோப்பை நிர்ணயிக்கும், அதே போல சில சமயங்களில் மேற்கோப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கும் என்பதாகும். இந்த இயக்கப் போக்கின் இறுதி நிகழ்வாக பொருளாதார அடித்தளமே மேற்கோப்பை நிர்ணயிக்கும் என்று எங்கல்ஸ் கூறியிருப்பதைக் காணலாம். இதற்கிடைப்பட்ட இடைவெளிகள் மேல்கட்டுமானக் கூறுகளால் இட்டு நிரப்பப்பட வேண்டியவையாகும்
//6. தன்னுடைய உள்ளுறையான சார்புநிலைச் சுதந்திரத்தின் மூலம் அதாவது ஒரு சமயத்தில் மாற்றித் தரப்பட்டு படிப்படியாக மேலும் வளர்க்கப்பட்ட
பதிலளிநீக்குசார்பு நிலைச் சுதந்திரத்தின் மூலம் உற்பத்தி நிலைமைகள் மற்றும் போக்கின் மீது தன் பங்குக்கு எதிர்ச்செயல் புரிகிறது.
7. ஒரு பக்கத்தில் பொருளாதார இயக்கம், மறுபக்கத்தில் புதிய அரசியல்சக்தி; இச்சக்தி இயன்ற அளவுக்கு அதிகமான சுதந்திரத்துக்கு
முயல்கின்றது; அந்த அரசியல் சக்தி ஒரு தடவை கிடைத்த பிறகு அது சொந்த இயக்கத்தைப் பெற்று விடுகிறது.//
6 எண்ணிடப்பட்டதில் ஒரு சமயத்தில் மாற்றித் தரப்பட்டு படிப்படியாக மேலும் வளர்க்கப்பட்ட சார்பு நிலைச் சுதந்திரத்தின் மூலம் உற்பத்தி
நிலைமைகள் மற்றும் போக்கின் மீது தன் பங்குக்கு எதிர்ச்செயல் புரிகிறது என்று சொல்வதின் மூலம் தாங்கள் சார்பான சுதந்திரத்தை மறுதலிக்க
சொற்களோடு போராடுவது தெரிகிறது. சொற்கள் தான் மாண்டுபோகும். பொருளாதாரத்தின் அடிப்படையில் தோன்றிய கருத்துககள்
சொற்ஜாலங்களால் மறைத்து விடமுடியாது.
7 எண்ணிட்டதில் "அந்த அரசியல் சக்தி ஒரு தடவை கிடைத்த பிறகு அது சொந்த இயக்கத்தைப் பெற்று விடுகிறது" இந்த மார்க்சியத்திற்கு
புறம்பான தங்களின் கருத்தை, எந்த வித ஆதாரத்தையும் காட்டாது, மேலே கூறிய மார்க்சிய மூல ஆசியர்களின் கருத்தை சிதைக்க முனைவது
படுகேவலமான திருத்தல்வாதமே.
அ.கா.ஈஸ்வரன்
அ.க.ஈஸ்வரன் அவர்களுக்கு
பதிலளிநீக்குகருத்து மக்களைப் பற்றிக்கொண்டால் அது பெளதீக சக்தியாக மாறிவிடுகின்றது என்பது மார்க்சின் கருத்துரையாகும். கருத்து என்பது அரசியலாக இருக்கலாம். பண்பாடுசார்ந்த கருத்துருக்களாக இருக்கலாம். இவை மக்களின் சிந்த்னையைப் பற்றி கொள்ளும் பட்சத்தில் அது பொருளீயச் சக்தியாக மாறுகின்றது என்பதுதான் இதன் பொருள். இது கருத்திற்கும் பொருளுக்கும், தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள இயங்கியல் உறவை வெளிப்படுத்தும் கூற்று ஆகும்.
இங்கு கருத்து பெளதீக சக்தியாக மாறுகின்றது எனும் போது அது பண்புரீதியிலான மாற்றத்தைக் குறிக்கின்றது. பொருள்முதல்வாதக் கருத்தாக்கங்களும், அறிவியல் கோட்பாடுகளும் கூட சமூக நடைமுறையிலிருந்து உருவானவையே. கருத்துக்கள் மக்களைப் பற்றி கொண்டால் அது ஒரு அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றுவிடுகின்றது. அதாவது பொருளீய சக்தியாக மாறிவிடுகின்றது. இதன் மூலம் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், பொருளிலிருந்து தோற்றம் பெற்ற கருத்து மக்களின் சிந்தனையைப் பற்றிக்கொண்டு ஒரு பொருளீய சக்தியாக மாற்றம் பெறும் இயக்கப் போக்கில் கருத்து ஒரு பண்புநிலையான மாற்றத்தைப் பெறுகின்றது. கருத்தின் இந்த இரண்டு நிலைகளும் அடிப்படையில் வேறுபட்டனவாக இருக்கின்றன. அதாவது பொருளிலிருந்து தோன்றிய கருத்து சார்புநிலையான சுதந்திரத்தை மட்டும் பெறுகின்றது. ஆனால் அக்கருத்து சிந்தனையைப் பற்றி பொருளீயச் சக்தியாக மாறியவுடன் அது சுய இயக்கத்தைப் பெற்றுவிடுகின்றது. அதாவது கருத்திற்கும் பொருளுக்கும், சிந்தனைக்கும் நடைமுறைக்கும் இடையே ஆன பரஸ்பர வினையாற்றும் இயக்கப் போக்கில் கருத்தின் சார்பு நிலையான சுதந்திரம், அதன் சுய இயக்கத்திற்கு இட்டுச்செல்கின்றது.
மார்க்சிற்கு முந்தைய பொருள்முதல்வாதிகள் பொருளை புறவயப்பட இயக்கமாக மட்டுமே கண்டனர். மார்க்ஸ் மட்டும்தான் பொருளை அகவயப்பட்டதாகவும், புறவயப்பட்டதாகவுமான மனித நடைமறையிலும், மனித வாழ்விலும் வைத்துப் பார்த்தார். இதுதான் மார்க்சிய இயங்கியல் என்பதாகும். மார்க்சிய சமூகத் தத்துவத்தில் மனித நடைமுறையானது முக்கிய இடம் பெற்றுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் மார்க்சு அவ்ருக்கு முந்தைய பொருள்முதல்வாதப் போக்குகளைக் கணக்குதீர்த்தார்.
அடித்தளம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பைக் குறிக்கிறது. அதாவது புறவயமான சூழ்நிலைமைகளைக் குறித்து நிற்கிறது. ஆனால் மேல்கட்டுமானம் என்பது அகவயப்பட்டதாகும். இந்த அகவயப்பட்ட அம்சங்களை புறக்கணிப்பது புறவய நிலைமைகளை மட்டும் கொண்டு சமூகத்தை ஆராய்வது நேர்காட்சிவாதம் என்றழைக்கப்படுகின்றது. இதை விஞ்ஞான வாதம் என்று கூறலாம்.
பதிலளிநீக்குஅடித்தளம் மேற்கட்டுமானத்தைத் தோற்றுவிக்கிறது. மேற்கட்டுமானம் அடித்தளத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால் மேற்கட்டுமானத்தின் இயக்கம் அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில்தான் செயல் புரியும் என்பது நிர்ணயவாதத்திற்கு இட்டுச் செல்லும் அபாயம் இருக்கின்றது.
அகநிலையின் 'கட்டுப்பட்ட இயக்கம்' புறநிலையின் மீது என்னவகையான தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்றால் புறநிலைக்கு உட்பட்டவகையில் தான். புறநிலை இயக்கத்தை அகநிலை இயக்கம் பின்பற்றி செல்வதாக இது கூறுகின்றது. ஆனால் ஒரு சில சமயங்களில் அகநிலை இயக்கம் புறநிலை இயக்கத்தை முடுக்கிவிடும் அளவுக்கு முன்னே செல்லும். இவ்வாறு சமூக மாற்றத்தில் அகநிலை புறநிலையின் மீது முக்கியமான பாத்திரம் வகிக்கிறது.
மனித நடைமுறைப் பற்றி கொஞ்சம் சொல்லியாகவேண்டும். சமூக நடைமுறை என்பது மனித சிந்தனையும் செயலும் வினையாற்றும் ஒரு சமூக கிரியை ஆகும். இது மனித சிந்தனையையும் நடைவடிக்கைகளையும் ஒன்றிணைக்கின்றது. இதை புறநிலைச் சார்ந்த விசயமாக மட்டும் பார்க்கவியலாது. அதேபோல அகநிலைசார்ந்த அம்சமாக மட்டும் பார்க்கவியலாது. நடைமுறை என்பது அகவயம் மற்றும் புறவயம் ஆகிய இரண்டும் இணைந்த விசயமாகும். நடைமுறையில் அகநிலையும் புறநிலையும் ஒன்று சேரும் தளமாகும். நடைமுறையில் அகநிலையையும் புறநிலையையும் பிரித்துப்பார்ப்பது தத்துவார்த்த தவறுகளுக்கு இட்டுச்செல்லும்.
இங்கு புறநிலையின் மீது அகநிலை வினைபுரிகின்றது. புறநிலைக்குட்பட்ட வகையில் எப்போது செயல்புரிவதில்லை. அவ்வாறு கட்டுப்பட்டு செயல்புரிந்தால் புறநிலையில் மீது எத்தகைய ஆற்றலையும் செலுத்த வியலாது. எத்தகைய மாற்றத்தையும் செய்யவியலாது. சமூக மாற்றம் பின்னுக்குத் தள்ளப்படும். எனவே சமூக மாற்றத்தில் அகநிலை பங்கு முக்கியமானதும் இன்றியமையாததுமாகும். ஆனால் தங்களின் கருத்து சமூக நடைமுறையின் அகவயமான அடிப்படையைப் புறக்கணித்துவிட்டு, அதை முற்றிலும் புறவயப் பொருண்மையாகப் பார்ப்பதாகும். இது கடைந்தெடுத்த விஞ்ஞானவாதம் ஆகும். அதைதானே மார்க்சு அன்றே தெளிவுபடுத்தினார்.
தங்களின் விமரிசனத்திற்கு பதிலளிக்குமுன் ஒரு உண்மையை நான் தங்களுக்கு சொல்லியாக வேண்டும். 'படுகேவலமான திருத்தல்வாதம்' என்று விமரிசித்திருக்கும் "அந்த அரசியல் சக்தி ஒரு தடவை கிடைத்த பிறகு அது சொந்த இயக்கத்தைப் பெற்று விடுகிறது" என்ற கருத்து என்னுடையதல்ல. இது எங்கல்சினுடையது. அதற்கான மேற்கோளை கொடுத்துள்ளேன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு