வெள்ளி, 10 ஜூன், 2011

அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 3

மார்க்சு -‍ எங்கல்சு க்கு பிறகு


மார்க்சும் எங்கல்சும் இந்தளவுக்கு எச்சரித்த பின்னரும், அவர்களின் காலத்திற்கு பிறகு மேல்கோப்பு, அடித்தளம் குறித்த கருத்துக்கோப்பு எந்திரதனமாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது. அடித்தளம் மேற்க்கோப்பு குறித்து இறுக்கமாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது. எங்கல்சின் மறைவுக்குப் பிறகும் இரண்டால் அகிலத்தில் இதே தவறான போக்குகள் தொடரவே செய்தன. இரண்டாம் அகிலத்தில் தொடர்ந்த பொருளாதார வாததையும் அதன் குறிப்பான அரசியல் அமைப்பு வழிமுறையான தன்னியல்பு வாதத்திற்கும் எதிராக லெனின் போராடினார். லெனின் எழுதிய 'என்ன செய்ய வேண்டும்?', 'ஏகாதிபத்தியம் முத்லாளித்துவத்தின் உச்ச‌க்கட்டம்' போன்ற நூல்கள் கூட் ஒரு விதத்தீல் இந்த பொருளாதார வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசியலின் முதன்மையான பாத்திரத்தை வலியுறுத்தும் நோக்கில் உருவானவையே. அந்த அளவுக்கு இரண்டாம் அகிலத்தில் மார்க்சியமானது பொருளாதார வாதமாக குறுக்கப்பட்டிருந்தது.


ஆரம்பகால ரசிய மார்க்சியர்கள் அடித்தளம் மேற்க்கோப்பு குறித்து ஒரு இறுகியப்‌ போக்கைக் கடைபிடித்தனர். ரசிய மார்க்சியவாதியான பிளக்னேவ் “உற்பத்தியில் ஏற்படும் மாற்றம் மேல்கட்டுமானத்தில் தானாகவே மாற்றத்திற்கு இட்டுசெல்லும்” என்ற கருத்தை முன்வைத்தார்.

“சமூக உறவுகளுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான்’ என்று உறுதியாக கூறுகின்றார். மேலும் ‘உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி சமூக உறவுகளை அதாவது பொருளாதார உறவுகளை நிர்ணயிக்கும்” என்று அவர் விளக்குகின்றார். இதே கருத்தை காவுட்ஸ்கியும் எடுத்துரைத்தார்.

உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் அடிக்கட்டுமானமாகக் கொண்ட அடித்தளம் மேற்கோப்பை நிர்ணயிக்கின்றது. மேலும் அடிக்கட்டுமானத்திற்கு ஏற்றவாறு மேற்கோப்பின் பண்புகள் உருவாகின்றது. இவற்றில் அடிக்கட்டுமானம் தீர்மானிப்பதாகவும் மேல்கோப்பு தீர்மானிக்கப்படுவதாகவும் கருதப்படுகின்றது. அதாவது அடிக்கட்டுமானம் செயலூக்கியாகவும் மேற்கோப்பு செயலற்றதாகவும் கொள்ளப்படுகின்றது. இது நடைமுறையில் நிர்ணயவாதக் கோட்பாடாகவும் குறைத்தல்வாதக் கோட்பாடாகவும் ஆக்கப்படுகின்றது. இது மார்க்சிய ‌ இயங்கியலுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தது.

லெனினின் பிரதிபலித்தல் கொள்கை

இத்தகையப் போக்குகளைக் களைவதில் லெனின் முயன்றார். இந்த வகையில் அவரது பிரதிபலிப்புக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது. லெனின் இயங்கியல் பொருள்முதல்வாத அறிதல் கோட்பாட்டுடன் பிரதிபலித்தல் கருத்தினை இணைத்துப் பிரதிபலித்தல் கொள்கையை உருவாக்கினார். இக்கொள்கையை ‘பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமரிசமும்’ என்ற நூலில் விளக்குவார். அதன் முக்கிய அம்சங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

1. பிரதிபலித்தல் செயல்முறையில் அறிவன் ஒருபக்கத்திலும் அவனுக்குப் புறத்தே உள்ல பொருள் மற்றொரு பக்கத்திலும் உள்ளன.

2. பிரதிபலித்தல் என்பதி இரு செயல் முறைகளைக் கொண்டதாக உள்லது. அ.புறவயமாகப் பொருள் உள்ளது. இது முதல் நிலையானது. இது மனதைச் சார்ந்தது அல்ல. இதன் பல அம்சங்கள மனத்தில் பிரதிபலிக்கின்றன. ஆ. மனது வழிநிலையானது இவற்றில் எல்லாமே பிரதிபலிக்கப் படுதவதில்லை. ஒரு எல்லைக்கு உட்பட்டு எது பிரதிபலிக்கப் படுவதில்லை. ஒரு எல்லைக்கு உட்பட்டு எது பிரதிபலிக்கப்படவேண்டும். எது வேண்டாம் என்ற முறையில் இது நிகழ்கிறது.

3. இந்தப் பிரதிபலிப்பின் அடைப்படையாக உள்ளது. மனித மூளையும் புலன் உறுப்புகளும் ஆகும். புலன் உறுப்புகளின் மூலம் புற உலகம் உணரப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் தூண்டல்கள் மூளையை அடைகின்றன. மனித மூளை உடலின் ஒரு பகுதியாக இருந்தாலும் அது சமூக வளர்ச்சியின் தடங்களைப் பெற்றிருக்கிறது. சமூக வளர்ச்சியினால் ஏற்பட்ட அனுபவத் தொகுப்பினைத்தான் மார்க்சியவாதிகள் உணர்வு என்று அழைக்கின்றனர். எனவே பிரதிபலித்தலின் பொழுது மூளை, புலன் உறுப்புகள், புறப்பொருள் ஆகியவற்றின் இடையே தொடர்ச்சியான இணைப்பு ஏற்படுகிறது.

4. புற உலகம் மனித மனத்தில் பிரதிபலிக்கும் செயல்முறை என்பது, ஒரு வடிவம் (பொருள்) மற்றொரு வடிவமாக (பிம்பம்) மாறுவது ஆகும். இது இயங்கியல் செயல்முறை.

5. இந்த மாறுதல் நிகழும் பொழுது புறவயமான பொருள் பிம்பமாக உருப் பெறுகிறது. இந்தப் பிம்பமானது பொருளின் எல்லா அம்சங்களையும் அப்படியே ஒத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொருளின் சில அம்சங்கள் பிம்பத்தில் இடம் பெறலாம். சில விடுபடலாம்.

6. மனித உணர்வானது சமூக அனுபவத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகப் பிரஹிபலிக்கப்பட்ட பொர்ருள் புறப் பொருள்லிருந்து வேறுபட்டு உள்ளது. இது கலை இலக்கிய உலகில் இடம் பெறும் நிகழ்ச்சி. விஞ்ஞானப் பிரதிபலிப்பு ஏறத்தாழ புறப்பொருளுக்கு இணையாக உள்ளது.

7. இந்தச் செயல் மனிதன் உலகத்தினைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையானது. மனிதன் இயற்கையுடன் நிகழ்த்தும் போராட்டத்தில் பல தூண்டல்களையும் அனுபவங்களையும் பெறுகிறான். அப்பொழுது அதுபற்றிப் புரிந்துக் கொள்ள் முயற்சி செய்கிறான். அப்படிப் புரிந்து கொள்ளும் பொழுது அதை மாற்றுவதற்கான படிமங்களை உருவாக்குகிறான். இந்தப் புரிதல் செயல்முறையில் ஒன்று புற உலகத்திலிருந்து தகவல்களைப் பெறுதல். இரண்டு அதை மனிதன் அனுபவங்களைக் கலந்து ஒரு புதிய பொருளாக உருவாக்குதல் ஆகிய இருவழிச் செயல் முறைகள் உள்ளன.

8. இந்தப் புரிதல் செயல்முறைதான் மார்க்சிய அறிவுத் தோற்ற இயலுக்கு அடிப்படையாக உள்ளது. இந்த செயல் கருத்து முதல்வாதப் பிரதிபலிப்புக் கொள்கைக்கு முற்றிலும் மாறானது. ஏனென்றால் அதில் புற உலகம் ஏற்றுக் கொள்ளப்ப‌டவில்லை. அங்கு உலகம் என்பதே எண்ணங்களின் பிரதிபலிப்பு என்பது அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. (மார்க்சியம் - சில போக்குகள், எஸ். தோதாத்ரி)

பொருளாதார வாதம் என்பது மார்க்சியத்தை மிகவும் எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ளப்படுவதன் விளைவு மட்டுமல்ல சமூகத்தில் உள்ள இயக்கமறுப்பு சிந்தனைகளும் இதற்கு காரணமாக அமைகின்றது. இந்த பொருளாதார வாதம் மீண்டும் மீண்டும் பலதரப்பட்ட வடிவங்களில் மறுபிறப்படுக்கவே செய்கிறது. லெனின் மறைவை அடுத்து ஸ்டாலின் காலத்தில் மூன்றாம் அகிலத்தில் மீண்டும் பொருளாதார வாதத்தின் வர‌ட்டு சூத்திரத்தில் சிக்கியது.

மாவோவின் பங்களிப்பு

அடுத்ததாக, அடிக்கட்டுமானத்திற்கும் மேற்கோப்பிற்கும் இடையே உள்ள உறவு குறித்து மாவோவின் கருத்துரை குறிப்பிடுவது அதன் வளர்ச்சிப் போக்கை அறிந்துகொள்ள உதவும்.. இதன்மூலம் இவர் பொருள்முதல்வாத அடிப்படையிலிருந்து கொண்டு இயங்கியலுக்கு முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். முரண்பாடு தத்துவத்தை மார்க்ஸ் ஏங்கல்ஸ், லெனின் போன்றோரால் வரையறுக்கப்பட்டிருந்தாலும் அதை மேலும் வளர்ந்தெடுத்தவர் மாவோ என்றால் மிகையாகாது. இனி அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மாவோவின் ஒரு மேற்கோளை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

மேற்கட்டுமானத்தின் ஒப்பீட்டு ரீதியிலான சுதந்திரமும் தீர்மானிப்பும்

“உற்பத்தி சக்திகளும், நடைமுறையும், பொருளாதார அடித்தளமும், உண்மையில் முதன்மையான நிச்சயமான பங்கையே வகிக்கிறது. இதை மறுக்கக்கூடியவர்கள் பொருள் முதல்வாதிகளாக இருக்க கூடியாது. ஆனால் குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் உற்பத்தி உறவுகள் தத்துவம் மற்றும் மேலமைப்பு போன்ற கூறுகள் முதன்மையான ஆழமான வகையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டு தான் தீரவேண்டும். உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏதுமில்லாமல் உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சியுற முடியாமல் இருக்கும் போது உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றம் முதன்மையான, தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கிறது. 'புரட்சிகர தத்துவமில்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது' என லெனின் கூறிய காலத்தில், புரட்சிகர தத்துவம் உருவாக்கமும் அதற்காக வாதாடுவதுமே முதன்மையான தீர்மானகரமான பங்கை வகித்தன. ஒரு கடமை (எத்தகைய தொன்றானாலும் கூட) நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில் வழிகாட்டும் பாதையோ, வழிமுறையோ, திட்டமோ, கொள்கையோ இல்லாதிருக்கும் போது வழிகாட்டும் பாதையோ, வழிமுறையோ, திட்டமோ, கொள்கைகளோ உருவாக்கப்படுவது தான் முதன்மையான தீர்மானகரமான கூறாகும்.

“அதேபோன்று, அரசியல் ‍பண்பாடு முதலிய மேலமைப்புகள், பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் போது அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் முதன்மையான வகையாகவும், தீர்மானகரமானவையாகவும் விளங்குகின்றன. இப்படிச் சொல்லும் போது நாம் பொருள் முதல்வாதத்திற்கு முரணாகச் சொல்கின்றோமா? இல்லை. ஏனெனில் வரலாற்றின் பொதுவளர்ச்சியில் சடப்பொருட்களே சிந்தனையைத் தீர்மானிக்கின்றது; சமூக வாழ்வு‍ சமூக உணர்வை நிச்சயிக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் சிந்தனை என்பது சடப்பொருளின் மீதும் மேலமைப்புகளானது பொருளாதார அடித்தளத்தின் மீது பிரதிபலிப்பதை நாம் ஏற்று கொள்கின்றோம். உண்மையில் அதை நாம் அங்கீகரிக்கவும் வேண்டும். இது பொருள் முதல்வாதத்திற்கு எதிரானதல்ல. மாறாக எந்திரவியல் பொருள் முதல்வாதத்தைத் தவிர்த்து, இயங்கியல் பொருள் முதல்வாத்தை உயர்த்திப் பிடிக்கின்றது.” (முரண்பாடு பற்றி (56-57)... மாவோ).

அடித்தளம் மேற்கட்டுமானம் குறித்த மாவோவின் கருத்துரை, எங்கெல்சின் இறுதி நிர்ணயம் என்ற கருத்தாக்கத்தின் தர்க்கரீதியான‌ வளர்ச்சியாகும். இதன்மூலம் மாவோ பொருள்முதல்வாத அடிப்படையைப் பாதுக்காத்ததோடு இயங்கியல் ரீதியிலான பங்களிப்பையும் செய்துள்ளார்.

முரண்பாட்டின் எதிர்எதிர் கூறுகள் இடம் மாறிக்கொள்ளும்

மேலும், “முரண்பாட்டுக் கூறுகளில் இரண்டில் ஒன்று முதன்மையானது; மற்றொன்று இரண்டாம் நிலையானது. முதன்மைக் கூறே முரண்பாட்டில் தலைமைப்பாத்திரம் வகிக்கின்றது. ஒரு பொருளின் இயல்பை நிர்ணயிப்பதில் முதன்மைப் பங்கு வகிப்பது ஒரு முரண்பாட்டில் உள்ள முதன்மைக் கூறாகும். ஆனால் இந்நிலைமை நிலையானது அன்று. முரண்பாட்டின் முதன்மைக் கூறும் முரண்பாட்டின் முதன்மையில்லாத கூறும் அவற்றின் எதிர்மறைகளாகத் தாமே மாறிவிடுகின்றன. இதற்கேற்ப பொருளின் இயல்பு மாறுகிறது. ஒரு முரண்பாட்டின் வளர்ச்சியிலுள்ள ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிப் போக்கில், அல்லது ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் 'அ' என்பது முதன்மைக் கூறாகவும், 'ஆ' எனது முதன்மையல்லாதக் கூறாகவும் இருக்கின்றன. மற்றொரு கட்டத்தில் அல்லது மற்றொரு வளர்ச்சிப் போக்கில் பாத்திரங்கள் இடம் மாறுகின்றன. ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கிலுள்ள இரண்டு கூறுகளுக்கு இடையேயுள்ள போராட்டத்தில் ஒவ்வொரு கூறுக்கும் உள்ள சக்தி எந்த அளவுக்குக் கூடுகிறதோ அல்லது குறைகிறதோ அந்த அளவுக்கு இம்மாற்றம் நிர்ணயிக்கப்படுகின்றது." என மாவோ 'முரண்பாடு பற்றி' எனும் கட்டுரையில் கூறுவார். இந்த விதி, பொருளாதார அடித்தளம் மேல்கட்டுமானம் என்ற முரண்பாடிற்கும் பொருந்தும் என்றும் அவர் கூறுவார்.

'குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் உற்பத்தி உறவுகள், தத்துவம் மற்றும் மேலமைப்பு போன்ற கூறுகள் முதன்மையான ஆழமான வகையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன' என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றோடு 'எல்லா நேரங்களிலும் அடித்தளம் நிர்ணயிக்கும் தன்மை பெறுவதில்லை' என்ற கூற்றோடு சேர்த்து பார்க்கும்போது இரண்டிற்குமுள்ள இயங்கியல் உறவு வலுப்படுகின்றது. அரசியல் ‍பண்பாடு முதலிய மேலமைப்புகள், பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் போது அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் முதன்மையான வகையாகவும், தீர்மானகரமானவையாகவும் விளங்குகின்றன. இது இந்திய நிலைமைகளுக்கு மிகவும் பொருத்தமாக அமைவதைக் காணலாம். அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற‌ மார்க்சிய கருத்துக்கோப்பு குறித்த விவாதங்கள் என்னென்ன போக்குகளை உருவாக்கியிருக்கின்றன என்பதைப் பார்க்க இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக