வியாழன், 16 ஜூன், 2011

அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 4

நான்கு போக்குகள்


அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற‌ மார்க்சிய கருத்துக்கோப்பு குறித்த விவாதங்கள் பல போக்குகளை உருவாக்கியிருக்கின்றன. அதில் நான்கு பிரதான போக்குகள் குறிப்பிடத்தக்கன.. ஒன்றாவது, சமூக மாற்றத்தில் அடித்தளம் நிர்ணயமான காரணி என்று கூறும் போக்கு. இது மேற்கட்டுமானத்தின் செல்வாக்கையும் தாக்கத்தையும் குறைத்து மதிப்பிடுவது அல்லது புறக்கணிக்கச் செய்வது என்ற‌ போக்காகும். இரண்டாவது, சமூக மாற்றத்தில் அடித்தளம் நிர்ணயமான பாத்திரத்தையும், அதன்மீது மேற்கட்டுமானத்தின் செல்வாக்கையும் தாக்கத்தையும் ஏற்றும் கொள்ளும் அதே நேரத்தில் அடித்தளத்துக்கும் மேல்கட்டுமானத்திற்கும் உள்ள‌ உறவை எந்திரத்தனமாகப் பார்க்கும் போக்கு. மூன்றாவது, அடித்தளத்தின் நிர்ணய வாதத்தை மறுத்து மேல்கட்டுமானமே நிர்ணயிக்கும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட போக்காகும். நான்காவதாக, அடித்தளத்தின் பொருள்முதல்வாத அடிப்படையை ஏற்றுக் கொண்டு அதன் மேல்கட்டுமானத்தின் மீதான உறவை இயங்கியல் ரீதியாக பார்க்கும் போக்காகும்.


முதல் போக்கான அடித்தள நிர்ணயவாதப் போக்கை எதிர்த்து இந்த மூன்றாவது போக்கு எழுந்ததாகக் கொள்ளலாம். எனவே, இது அடித்தள நிர்ணயவாத நிலைப்பாட்டினை மறுத்து மேல்கட்டுமான நிர்ணயவாத நிலைப்பாடு உருவானதைக் குறிக்கிறது.. இவ்விரண்டும் எதிரெதிர் துருவங்களாகும். இவற்றை நாம் எளிதில் எதிர் கொள்ள முடியும். ஆனால் இரண்டாவதாக கூறப்பட்ட‌ எந்திரவியல் அடிப்படையிலான போக்கு தான் நமக்கு சவாலான இலக்கு. தத்துவ ரீதியில் எந்திரவியல் பொருள்முதல்வாதப் போக்கை வென்று இயங்கியல் பொருள்முதல்வாதப்போக்கை நிறுவுவதுதான் முக்கிய கடமையாக நம்முன் நிற்கின்றது.

புதிய இடதுகள் என்றும் பண்பாட்டு மார்க்சியவாதிகள் என்றும் அழைக்கப்படுவோர்,, அடித்தளத்தின் அடிப்படையை மறுத்து மேல்கட்டுமானத்திற்கே முதன்மையளித்தார்கள். அடித்தளத்தின் மீது மேல்கட்டுமானத்தின் பரஸ்பர செல்வாக்கு என்பதை இவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனாலும் அடித்தளம் காரணமாகவும் மேல்கட்டுமானம் காரியமாகவும் இருக்கும் மார்க்சிய அடிப்படையை அவர்கள் ஏற்கவில்லை. மேல்கட்டுமானம் சமூகத்தில் தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பதாகவும் சமூக வளர்ச்சியைத் தீர்மானிப்பதாகவும் இருக்கிறது. அதாவது தத்துவத்தையும் கலைகளையும் ஆன்மீகத்தையும் வெறும் பொருளியல் இயக்கத்தைக் கொண்டு விளக்கிவிட முடியாதென்பதே இவர்களின் கூற்றாகும். அவை பொருளியல் கட்டுமானத்தின் மீதுள்ள மேற்கட்டுமானங்கள் எழுகின்றன என்ற கொள்கையை அவர்கள் ஏற்பதில்லை. இவர்களின் அணுகுமுறை கருத்துமுதல்வாத அடிப்படையைக் கொண்டது என கம்யூனிஸ்டுகளால் விமரிசிக்கப்பட்டது. இயங்கியல் அடிப்படையில் மட்டும் இப்பிரச்சினையை விவாதிக்க முற்பட்டனர். ஆனால் மேல்கட்டுமான செயல்பாடுகளை மட்டும் உயர்த்திப் பிடித்தனர்.

அடுத்ததாக, சமூக மாற்றத்தில் அடித்தளம் நிர்ணயமான பாத்திரத்தையும், அதன்மீது மேற்கட்டுமானத்தின் செல்வாக்கையும் தாக்கத்தையும் ஏற்றும் கொள்ளும் அதே நேரத்தில் அடித்தளத்துக்கும் மேல்கட்டுமானத்திற்கும் உள்ள‌ உறவை எந்திரத்தனமாகப் பார்க்கும் போக்கு. அடித்தளம் மேல்கட்டுமானத்தை நிர்ணயிக்கும் என்ற அடிப்படையில் ஊன்றி நின்று அடித்தளத்தின் மீதான மேல்கட்டுமானத்தின் செல்வாக்கு என்பது வரையறைக்கு உட்பட்டதாக கருதுகின்றது. வெவ்வேறு கட்டங்களில் அடித்தளத்துடன் கொண்டுள்ள எதிர்வினையின் போது, மேல்கட்டுமானம் அடித்தள‌த்தைப் பிரதிபலிப்பது முதற்கொண்டு, உறுதிபடுத்துவது, பாதிக்கச்செய்வது, செல்வாக்கு செலுத்துவது, மாற்றத்தை ஏற்படுத்துவதுவரை தனது செயல்பாட்டை படிப்படியாக‌ விரிவாக்குகின்றது. அவ்வாறு இருக்கும்போது மேல்கட்டுமானத்தின் செயல்பாட்டை வரையறைக்கு உட்படுத்துவது என்பது பொருளின் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகும்.

சிந்தனையின் செயல்பாட்டின் எல்லை வரம்புக்குட்பட்ட தென்றால் அடித்தளத்தை மாற்றியமைக்கும் செயல்பாடு நடந்தேற வியலாது என்று முடிவுக்கு வரவேண்டியிருக்கும். இது அடித்தளத்தை மாற்றுவதில் மேல்கட்டுமானத்தின் பங்கை கேள்விக்குள்ளாக்குவதாகும். ஆகவே, இவர்கள் விதிக்கும் மேல்கட்டுமானத்தின் வரம்பை மீறும் போது மட்டுமே அது அடித்தளத்தை மாற்றக்கூடிய வல்லமைப் பெறுகின்றது. இது மனிதனின் சிந்தனை மாறப்போகும் பொருளாதாய நிலைமைகளுடன் ஒன்றிப்போவதைக் குறிக்கின்றது. மார்க்சும் எங்கல்சும் முன்வைக்கும் மேல்கட்டுமானத்தின் வரம்பு என்பது அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட சுதந்திரம் என்பது இதுதான்.

நிர்ணய வாதம்

ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் இருக்கின்றது. காரணம் ஒரு விளைவை உருவாக்குகின்றது; காரணம் இல்லையெனில் காரியம் இல்லை; ஆகவே ஒரு காரியம் நிகழ்ந்ததென்றால் ஒரு காரணம் இருக்கவேண்டும் என்பது நிர்ணயவாதத்தின் முக்கிய கோட்பாடு. பிரபஞ்சம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பல்வேறு சக்கரங்கள் கொண்ட ஒரு எந்திரம் என்பது நிர்ணயவாதம் ஆகும். அவை இயங்கும் விதிகளும் முறைகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை. அவற்றை அறிந்து கொண்டால் பிரபஞ்சம் எதிர்காலத்தில் என்னவாக மாறும் என்பதை ஒருவர் அறிய இயலும் என்பது நிர்ணயவாதத்தின் தர்க்கரீதியான முடிவு. அதாவது ஒரு நிகழ்வு நிச்சயமாக அதன் முந்தைய நிகழ்வால் தீர்மானிக்கப்படுகின்றது.


நிர்ணயவாதம் என்பது, காரண நிர்ணயவாதம் என்றும், தர்க்க நிர்ணயவாதம் என்றும், வரலாற்று நிர்ணயவாதம் என்றும் வகைப்படுத்தப்பட்டு விவாதிக்கப்படுகின்றது. வரலாற்று நிர்ணயவாதம் என்பது வரலாற்று நிகழ்வுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதாகும் என்று கூறுகின்றது. இது ஒரு வகையில் உலக நிகழ்வுகளின் வாய்ப்புகளையும் மறுக்கின்றது. உலகம் ஒரு வழியில் தான் இயங்கும். இப்படித்தான் மாறும் என்ற ஒரே நிர்ணயத்தை வழங்குகின்றது. அது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதாக கூறுகின்றது. இதில் தனிமனிதர்களின், சமூகத்தின் பாத்திரத்தை மறுக்கின்றது. இது விதிவாதம் என்ற நிலைபாட்டிற்கு போய்சேர்கின்றது. நிர்ணயவாத விதிகளுக்கோ அல்லது காரணகாரிய விதிகளுக்கோகூட இடம் தருவதில்லை. பொருளாதார நிர்ணயவாதம் என்பது வரலாற்று வளர்ச்சியில் பொருளாதாரம் மட்டுமே நிர்ணயமான காரணியாகும் என்று கூறுகின்றது.

நிர்ணயம்வாதம் பேசுவோரில் சிலர் இரண்டிற்குமுள்ள உறவை ஓர் எந்திரதனமான உறவாக மட்டுமே பார்க்கின்றனர். அதற்கிடையே உள்ள இயங்கியல் உறவை காணத் தவறுகின்றனர். இயங்கியல் எனும்போது அதில் நிர்ணயத்திற்கோ அல்லது தீர்மானத்திற்கோ அல்லது அடிப்படைக்கோ இடமில்லை. அதாவது அடித்தளத்திற்கு என்ன அழுத்தம் கொடுக்கப்படுகின்றதோ அதே அளவுக்கு மேல்கட்டுமானத்திற்கும் கொடுக்க வேண்டும். இந்த இயங்கியல் அம்சத்தைப் புறக்கணித்துவிட்டுத்தான் மறுதலித்து விட்டுத்தான் நிர்ணயவாதம் நிலைநாட்டப்படுகின்றது. அது எந்திர பொருள்முதல்வாதம் மட்டுமே அல்லாது, ஒருபோதும் இயங்கியல் பொருள்முதல்வாதம் ஆகாது.

பொருள்முதல்வாதம் பொருளை முதன்மைப்படுத்துகின்றது. பொருளில் ஏற்படும் வளர்ச்சிபோக்குகள், மாற்றங்கள் ஆகியவை காரண காரிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைகின்றன என்று பொருள்முதல்வாதம் போதிக்கின்றது. பொருளிலிருந்து கருத்துக்கள் உருவாவதும், சமூக இருப்பிலிருந்து, சமூக உணர்வு எழுவதும், அடித்தளத்திலிருந்து மேல்கட்டுமானம் கட்டமைக்கப்படுவதும் காரண காரிய கோட்பாட்டின் அடிப்படையில்தான். இவ்வாறு பொருளிலிருந்து தோன்றிய கருத்து மீண்டும் பொருளின் மீது வினைபுரிகின்றன‌. அதே போல சமூக உணர்வு சமூக இருப்பின் மீது செல்வாக்கு செலுத்துகின்றது. மேல்கட்டுமானம் அடித்தளத்தை மாற்றியமைக்கின்றது. இத்தகைய செயல்பாடுகள் கூட காரண காரிய கோட்பாட்டின் அடிப்படையில்தான் நடைபெறுகின்றன.

காரணகாரிய கோட்பாட்டில் இரண்டு வகைகள்

காரணகாரிய கோட்பாட்டில் இரண்டுவகைகள் உள்ளது. முதலாவது முதல்நிலை காரண காரிய கோட்பாடு, இரண்டாம் நிலை காரணகாரிய கோட்பாடு ஆகியவையாகும். பொருளிலிருந்து கருத்து தோன்றுவது முதன்நிலை காரண காரியக் கோட்பாடென்றால், கருத்து பொருள்மீது வினைபுரிவது இரண்டாம் நிலை காரண காரியக் கோட்பாடாகும். அதே போல அடித்தளத்திலிருந்து மேல்கட்டுமானம் எழுவது முதன்நிலை காரண காரியக் கோட்பாடென்றால்,மேல்கட்டுமானம் அடித்தளத்தின்மீது வினைபுரிவது இரண்டாம் நிலை காரண காரியக் கோட்பாடாகும். அதாவது காரணத்திலிருந்து தோன்றும் காரியம் பின்னர் காரணமாக மாறுகின்றது. காரணத்திலிருது காரியமாற்றுகின்றது. இரண்டு நிலைகளிலும் காரணகாரியக் கோட்பாடு செயல்படுகின்றது. இத்தகைய செயல்பாடுகள்தான் இயங்கியல் அடிப்படையிலான‌ காரணகாரியக் கோட்பாடாகும். எங்கல்சும், மாவோவும் அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான இயந்திரத்தனமான காரணகாரியக் கோட்பாட்டின் இடத்தில் இயங்கியல் அடிப்படையிலான‌ காரணகாரியக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர். எனவே அடித்தளத்திற்கும் மேல்கட்டுமானத்திற்கும் உள்ள உறவென்பது காரணகாரியக் கோட்பாட்டில் அமைந்தது மட்டுமல்ல இயங்கியல் அடிப்படியிலும் அமைந்ததாகும்.

அடித்தளம் மேல்கட்டுமானம் ஆகிய இரண்டும் ஒன்றை ஒன்று பாதிக்கவும், செல்வாக்கு செலுத்தவும் செய்யும். இவை இரண்டுக்குமான உறவு, காரணகாரிய கோட்பாட்டின் அடிப்படையிலான உறவு ஆகும். அதாவது அடித்தளம் காரணமாகவும் மேல்கட்டுமானம் காரியமாகவும் இருக்கும். அடித்தளத்தின் விளைவுதான் மேல்கட்டுமானம் ஆகும். இந்தக் காரணகாரிய அடிப்படையில் தான் இவை இரண்டிற்கிடையே உறவு மேற்கொள்கின்றன.

மேற்கட்டமைப்புவாதம்

இன்று மேல்கட்டமைப்புவாதம் என்பது மேலோங்கிய கருத்தியலாக இருக்கிறது. அதைவிரிவாக பார்த்தால் தான் அது தோன்றிய பின்னணியையும், அதன் அடிப்படைகளையும் அறிந்து கொள்ளமுடியும். அது எவ்வாறு எதிர்மறையான வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். அடித்தளம், மேற்கட்டுமானத்தினதை தீர்மானிக்கும் சக்தி உண்டு. அதே வேளையில் மேற்கோப்பிற்கு ஒப்பீட்டு ரீதியான சுதந்திரம் உண்டு என்பது மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடு ஆகும். இந்தக் கோட்பாடு ஸ்டாலின் காலத்தில் எந்திரதனமாக புரிந்துக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இது மேற்கட்டுமானத்தின் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிடும் போக்கு தலைதூக்கியது. அடிப்படை பற்றிய சிந்தனையே அதிகமாக இருந்தது. இதன் விளைவாக ஒரு கட்டத்தில் சர்வதேசப் பொது உடைமை இயக்கத்தில் மேற்கோப்பினைப் பற்றிய சிந்தனைப் புறக்கணிக்கப்பட்டது.

“ஸ்டாலினிசம் மிக அதிகமாக அடித்தள மாற்றத்தை வலியுறுத்தியது. அதே சமயம் ஜெர்மனியில் தோன்றி அமெரிக்காவில் வலுவாக இடம் பெற்ற பிராங்பர்ட் அமைப்பு மேற்கோப்பை அதிகமாக வலியுறுத்தும் போக்கினை வெளிப்படுத்தியது. அடிப்படையை மறுக்கும் போக்கு இவர்களிடம் தென்பட்டது.(மார்க்சியம் சில போக்குகள், 2005, தோதாத்ரி.) மேற்கோப்புப் பற்றி சிந்தித்தவர்களில் முக்கியமானவர்கள் அல்தூசர், லூகாஸ், கிராம்சி ஆகியோர் ஆவர்.

அல்தூசர்

சமூக நிகழ்ச்சிகளை எது தீர்மானிக்கிறது என்பதற்கு ஒட்டுமொத்த நிர்ணயம் என்ற கருத்தை பதிலாகத் தருகிறார். இதன்படி சமூகச் செயல்பாடுகள் பிற செயல்பாடுகளாகப் பிரிகின்றன. அவை மீண்டும் முரண்பாடுகளாக மாறுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் செயல்பாடுகள் முழுமை பெற்றுப் பின்பு பல்வேறு செயல்பாடுகளாகப் பிரிந்து முரண்படுகின்றன. இவற்றில் எது எதை நிர்ணயம் செய்கிறது என்பது அந்தக் காலத்தினுடைய வரலாற்று நிலையைப் பொறுத்ததாகும். பொருளாதாரக் காரணி நிர்ணயிக்க இயலாது என்று அல்தூசர் கூறுகிறார். (மார்க்சியம் சில போக்குகள்,2005,தோதாத்ரி) அல்தூசர், அடித்தளம் மேற்கட்டுமான முரணை அமைப்பியல் அணுகுமுறையில் அமைத்தார். கூட்டு நிர்ணயம், போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கினார். எங்கல்சின் இறுதி நிர்ணயக்கோட்பாட்டை அல்தூசர் முதலில் அங்கீகரித்தாலும் இறுதியில் அதற்கும் ஒரு முடிவு கட்டிவிடுகிறார் என்பதைப் பார்ப்போம்.

“இங்கு சங்கிலிக்கு இருமுனைகள் இருக்கின்றன. பொருளாதாரம் எனபது நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்தது. ஆனால் அது கடைசி நிலையில்தான். எங்கல்ஸ் இதை நீண்ட வரலாற்றுப் போக்கில் என்று ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறார். “ஆனால் வரலாறு என்பது தேசிய மரபிலிருந்து சர்வ தேசிய சூழ்நிலைகள் வரையிலான, பல்வேறு வடிவிலான மேற்கோப்புகளின் வாயிலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றது. இவ்விஷயத்தில் எங்கல்ஸ் கூற நினைக்கிற கொள்கை ரீதியான தீர்வை விட்டுவிடலாம். கடைசியில் நிர்ணயிக்கும் திறன் கொண்டது என்று அவர் கூறும் பொருளாதார நிர்ணயத்துவத்திற்கும் தேசிய மரபு சர்வதேச நிகழ்வுகள் ஆகியவற்றி கிடையேயான அவரது தீர்வையும் விட்டுவிடலாம். அவருடைய கூற்றிலிருந்து ஒரு முக்கியமான் விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள‌ வேண்டும். அதாவது ஆகக் கடைசியில் நிர்ணயிக்கப்போவது என்று கூறப்படும் பொருளாதார அடித்தளமானது, மேற்கோப்புகளிருந்தும் தேசிய சர்வதேசிய நிகழ்வுகளினால் உருவாகிற கூட்டுச் சேர்க்கையாலும் நிர்ணயிக்கப்படுகின்றது என்ற அவரது கருத்தை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாம். இதைத் தான் நான் கூட்டு நிர்ணய‌ தன்மை கொண்ட முரண்பாடு என்று அழைக்கின்றேன்,. இத்தகைய கூட்டு நிர்ண‌யம் தவிக்க இயலாதது . எனவே இத்தகைய கூட்டு நிர்ணய வாதத்தை தேசிய அளவில் அன்றி சர்வதேசிய அலவிலும் நாம் பொருத்திப் பார்க்கலாம். பொருளாதார நிர்ணயக் கருத்து மேற்கோப்பின் துணையின்றி தனித்து இயங்குவதில்லை. வரலாற்றில் இந்த மேற்கோப்பு போன்றவை தங்கள் வேலை முடியும்வரை இயங்கிவிட்டு விலகி விடுவதில்லை அல்லது பொருளாதாரம் என்ற மகாராஜா வரும் வரை வழி விலகிக் காத்திருந்து அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணக்குவதில்லை. அதற்காக இயங்கியல் எனப்படும் ராஜப்பட்டையின் ஓரத்தே நின்று காத்திருக்கப் போவதுமில்லை. ஏனெனில் ‘last instance ‘ எனப்படும் அந்தக் கடைசி சந்தர்ப்பம் வரப்போவதுமில்லை” என அல்தூசர் கூறுவதாக‌ ‘அல்தூசரின் சித்தாந்தம் முதலிய கட்டுரைகள்’ (1996), என்ற நூலில் கிருஷ்ணமூர்த்தி விளக்குவார். இதன்மூலம் மார்க்சியத்தின் அடிப்படையையே அடித்து நொருக்கியிருக்கிறார். இறுதி நிர்ணயக் கோட்பாட்டைக் கூட்டு நிர்ணய கோட்பாடாக மாற்றி பொருள்முதல்வாதத்திற்கு பலத்த அடி கொடுத்துள்ளார்.

அல்தூசர் எங்கல்சின் மேற்கோள்களைச் சுட்டிக் காட்டிய‌ அல்தூசர், அடித்தளம் போலவே மேல்கட்டுமானமும் நிர்ணயச் சக்தி படைத்தது. அடித்தளம் மேல்கட்டுமானத்தைத் தீர்மானிப்பதைப் போல, அரசியலும், மரபான சிந்தனைகளும்கூட மேற்கட்டுமானத்தை நிர்ணயிப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது எனக் கூறுவார்.

.. பிரஷ்ய அரசு வரலாற்று ரீதியான‌ பொருளாதாரக் காரணங்களிலிருந்து தோன்றி வளர்ச்சியுற்றது. வட ஜெர்மனியின் பொருளாதார, மொழியியல், மற்றும் மதச்சீர்திருத்தத்துக்கு பொருளாதாரக் காரணங்களைக் காண்பவர்கள் தவறுசெய்பவர்கள். ..“இளைஞர்கள் சில சமயங்களில் பொருளாதாரத் தரப்பின் மீது உரியதைக் காட்டிலும் அதிகமான‌ அழுத்தம் கொடுப்பதற்கு மார்க்சும் நாமும் பகுதியள‌வுக்குப் பொறுப்பாவோம். முக்கியமான கொள்கையை மறுத்த எதிரிகளுக்கு எதிராக நாங்கள் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த இடைச்செயலில் பங்கெடுக்கின்ற மற்ற கூறுகளுக்கு உரிய அழுத்தம் கொடுப்பதற்கு அவசியமான காலம், இடம் அல்லது சந்தர்ப்பம் எங்களுக்கு எப்பொழுதும் இருக்கவில்லை." என்று எங்க‌ல்சு கூறிய‌தை அல்தூச‌ர் அவ‌ர‌து நூலில் குறிப்பிடுவார்.

லூகாக்ஸ்

ஜார்ஜ் லூகாக்ஸ் இருபதுகளில் பொருளாதார வாதத்தை விமரித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர். “மேற்கோப்பைப் பற்றி அதிகம் சிந்தித்தவர் லூகாக்ஸ் ஆவார். இவர் முழுமைக் கோட்பாடு (Totality) குறுக்கீட்டுக் கோட்பாடு (Mediation) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எல்லாவற்றையும் ஆராய்கிறார். இவரது க்ருத்துப்படி முழுமையானது தனியன்களைத் தீர்மானிக்கிறடு என்பது வலியுறுத்தப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட தனிக்காரணியை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை புறக்கணிக்கக்கூடாது. முழுமையும் பல்வேறு சக்திகள் ஒரே காலத்தில் செயல்படுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். சமுதாயத்தில் பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றிக்கும் தனி இடம் உண்டு. அவை எல்லாவற்றையும் கவனித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பது இந்தக் கோட்பாட்டுகளின் சாரம்சம். லூக்க்காக்சின் இந்தக் கருத்து பொருளாதாரக் காரணிக்கும் மேற்கோப்பில் உள்ல பல்வேறு செயல்களுக்கும் சம அந்தஸ்தைக் குறிக்கிறது. இதன் மூலம் எந்த ஒரு காரணிக்கும் தீர்கரமான தன்மை எதுவுமில்லை என்பதை கூறுகிறது. (மார்க்சியம் சில போக்குகள், 2005,தோதாத்ரி) அடித்தளம் மேல்கட்டுமானம் ஆகிய எந்த ஒன்றுக்கும் நிர்ணயத்தன்மை இல்லை என்பதே இவரது வாதம். இதன்மூலம் இவர் அடித்தளத்தையும் மேல்கட்டுமானத்தையும் எல்லா வகையிலும் சமப்படுத்துகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக