முதன் முதலில் இக்கூட்டத்தின் சாதகமான அம்சங்களாவன: எதிர்கருத்துகளுக்கு மதிப்பளிக்கவும் விவாதிக்கவும் முன் வந்தது ; புரிதலின் தேவையை வலியுறுத்தி விவாதத்தினை தொடர்ந்தது; முன்னணித்தோழர்கள் கலந்து கொண்டு ஆரோக்கியமாக விவாதித்தது.
தோழர். கே.என். ஆர் முன் வைத்த கருத்துகளின் சாரம் வருமாறு: இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டு இயக்கம் பல்வேறு குழுக்களாகவும் கட்சிகளாகவும் பிளவுபட்டு கிடக்கின்றன. காரணம். அவர்கள் ஏகாதிபத்தியத்தைப் பற்றிய இன்றைய வளர்ச்சிப்போக்குகள் குறித்து சரியான புரிதல் இல்லை.
ஏகாதிபத்தியம் வரலாற்று போக்கில் இன்று நவகாலனிய காலகட்டத்தை அடைந்துள்ளதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். மூலதனம் இன்று நவகாலனீய தன்மையைப் பெற்றுள்ளது. இதை புரிந்து கொண்டிருந்தால் இவர்களுக்குள் பிளவு வந்திருக்காது. புரட்சி வெற்றிபெற்றிருக்கும்.
மேலும் எம் எல் குழுக்கள் எல்லோரும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் லின்சியோ பிங் வழியின் இடது தீவிர அழித்தொழிப்புப் பாதையை தேர்ந்தெடுத்தவர்கள். இந்தியாவில் நக்சலிசம் நரோத்னிசமாகும். நரோத்னிசத்தை லெனின் கடுமையாக விமரிசனம் செய்தார். தத்துவார்த்த ரீதியல் வீழ்த்தினார். ஆனால் இந்திய எம்.எல். குழுக்கள் ரசிய நரோடிச போக்கையே பிரதிநிதித்துவபடுத்துகின்றனர்.
இதுபோன்றவை குறித்து வரலாற்று ரீதியாக தோழர் விளக்கம் அளித்தார். பின் சோசலிசம் தோற்றதற்கான காரணங்களையும் விளக்கினார். கட்சி அதிகாரத்துவம் ஆனது; நிலையான படையை ஒழிக்காமல் அப்படியே வைத்து இருந்தது.படையை மக்கள் மயமாக்காதது. இவையெல்லாம் கலாச்சார புரட்சி கூட வெற்றி பெறாததற்கான காரணங்களாகும். இன்னும் பல்வேறு விளக்கங்களை அவருக்கே உரித்தான பாணியில் அளித்தார்.
ஏகாதிபத்தினைக் குறித்தும் அதன் மீதான புரிதலைக் குறித்தும் கவலைப்படும் தோழர், இந்தியாவின் குறிப்பானதும் தனி சிறப்பானதுமான பிரச்சனைகள் குறித்து எந்த கவனமும் அக்கறையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் குறிப்பானதும் தனிசிறப்பானதுமான பிரச்னைகள் குறித்து கிஞ்சிற்றும் ஆய்ந்ததாக தெரியவில்லை.
அகிலம் தேவைதான். சர்வதேசியம் அவசியம்தான். பொதுவான வழிகாட்டுதல்கள் தேவைதான். அது ஒவ்வொரு நாடுகளின் குறிப்பான தன்மைகளை அடிப்படையாக கொண்டு அவற்றின் தனித்தன்மைகளை உட்கிரகித்துக் கொண்டு அந்தந்த நாடுகளில் ஊன்றி நின்று வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகிலம் கட்டமைக்க வேண்டும்.
நமது விவாதத்தை மார்க்சின் மேற்கோளிலிருந்து தொடங்கலாம். '’தத்துவாதிகள் எல்லோரும் உலகத்தை விமரிசனம் மட்டும் செய்யதனர்; ஆனால் பிரச்னை அதை மாற்றுவதாகும்' என தனது புகழ்பெற்ற வாசகத்தை ஒரு இடத்தில் கூறுவார். இந்த மேற்கோள் ஒரு எந்திரதனமான கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டு உலகை ஆய்வு செய்தது போதும், இதை மாற்றுவதே நமது முன்னுள்ள ஒரே கடமை ஆகும் என்று பல மார்க்சியர்கள் நடைமுறை பணியில் மும்மரமாக ஈடுபட்டிருப்பதைக் காணவியலும். அவரவர் ஈன்ற அனுபவங்கள் கொள்கைகளாக வடித்தெடுக்கப்படுகின்றன. மேலும் மேலும் நடைமுறையில் சிக்கி தவிக்கின்றனர்.
சுருக்கமாக நாம் இந்தியாவில் கம்யூனிச கட்சிகளிடம் காணும் காட்சி, யானையை பார்த்த குருடர்களின் கதைதான். ஒருவர் யானையின் காதை தொட்டுப்பார்த்து யானையைப் புரிந்து கொள்கிறார். மற்றொருவர் யானையின் கால்களை தொட்டுணர்ந்து யானையை புரிந்துக் கொள்கிறார். மற்றவர் உடலைத் தொட்டுப்பார்த்து யானை சுவரைப்போல இருப்பதாக உரைக்கிறார். இன்னொருவர் யானையின் இன்னொரு பகுதியை தொட்டுணர்ந்து யானையை பற்றி விளக்குகிறார்.
இவ்வாறு மார்க்சிய தத்துவத்தின் கூறுகளை பிரித்து எடுத்து தனித்தனியாக புரிந்து கொண்டுள்ளனர். இவர்களை தத்துவ குருடர்கள் என்று அழைப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. இந்த அடிப்படை மேலும் உறுதிபடுத்தும் வகையில் அவர்களது நடைமுறை அனுபவம் அமைந்து விடுகின்றது. ஒன்றை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் பார்த்தவை யாவும் யானையின் உறுப்புகளைத்தான் என்பதை நாம் நினைவில் இருத்த வேண்டும். ஆக அனைவரும் பகுதியினை முழுமையாக கருதி தம் அனுபவத்தினை கோட்பாடாக்கி கொள்கின்றனர்.
நமது பாரம்பரியம் வர்க்க போராட்ட பாரம்பரியம் ஆகும். நடைமுறையில் ஏராளமான செழுமையான அனுபவங்களும் அளப்பறிய போர்க்குணமும், தன்னிகரற்ற அற்பணிப்பும் நமது மார்க்சியர்களுக்கு உண்டு. ஆனால் தத்துவ பாரம்பரியத்தில் நாம் எவ்வளவு வளர்ந்துள்ளோம் அல்லது வளர்ச்சி பெற்றுள்ளோம் என எண்ணிப் பார்க்கையில் நாம் இன்னும் ஆரம்பத்திலேயே இருப்பதை விளங்கிக்கொள்ள சிரமம் இருக்காது என எண்ணுகிறேன்.
திட்ட பிரச்னை எல்லாம் முடிந்து விட்டது, இனி அதை நடைமுறைப்படுத்துவதுதான் பாக்கி என்று பிரகடபடுத்தும் கட்சிகளுக்கு இடையே, குழுக்கள் மத்தியில், ஏகாதிபத்தியத்தின் இன்றைய வளர்ச்சி பற்றி புரிதல் தேவை என்று பகர்வது நல்ல அறிகுறியாக தென்படுகின்றது. இது போன்று தத்துவ கருத்தியல் பிரச்சனைகள் குறித்து திறந்த மனதுடன் வெளிப்படையான விவாதங்கள், ஆரோக்கியமான விமரிசனங்கள், நேர்மையான சுயவிமரிசனங்கள் நடத்துவது என்பது மிகவும் அவசியமானதும் அத்தியாவசியமானதுமாகும்.
ஆனால் ஏகாதிபத்தைப் பற்றிய புரிதல் வேண்டும் என்றால் அதற்கு முதலாளித்துவத்தைப் பற்றிய புரிதல் வேண்டும்; அவற்றிற்கு அடிப்படையான மூலதனத்தை புரிந்து கொள்ளவேண்டும்; மூலதனத்தை மார்க்சியத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளவேண்டுமானால் அதற்கு முன்னர் மூலதனத்தைப் பற்றிய முதலாளித்துவ பொருளியல் அறிஞர்களின் பொருளாதாரத் தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மூலதனத்திற்குள்ள முரண்களை புரிந்து கொள்ளவேண்டும். முரண்கள் ஏற்படுத்தும் விளைவுகளை புரிந்து கொள்ளவேண்டும்.
இந்திய மார்க்சியவாதிகள் ஒற்றுமையின்மைக்கு காரணம், அவர்கள் பிளவுண்டதற்கு காரணம், அவர்கள் புரட்சி செய்யாதற்கு காரணம் என்ன என்று ஆராயும் தோழர், ஏகாதிபத்தியத்தின் இன்றைய புதிய வளர்ச்சிப் போக்குக்களை புரிந்துகொள்ளாதே என்ற முடிவுக்கு வருகிறார். ஆக அனைத்துக்கும் காரணம் ஏகாதிபத்தியத்தின் மீதான புரிதலின்மை என்றும் இன்றைய உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சிபோக்குகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுரண்டல், ஒடுக்குமுறை அனைத்துக்கும் காரணம் ஏகாதிபத்தியமே என்றும் தோழர் கூறுகின்றார்.
ஏகாதிபத்திய மூலதனத்திற்கும் உலக மக்களுக்கும் உள்ள முரண்தான் பிரதான முரண்பாடு என்று தோழர் கூறுகிறார். இந்திய அரசு ஏகாதிபத்திய நலன்களைத் தாங்கி நின்கிறது. இந்திய முதலாளித்துவ வளர்ச்சிக்கு அடிப்படையானது ஏகாதிபதியமே யாகும்.
கம்யூனிச இயக்கத்தில் திரிபுவாதம் திருத்தல்வாதம், இடதுதீவிரவாதம் அழிவு வாதம் என்பவை பிளவுகளுக்கும் உடைசல்களுக்கும் முதன்மைக் காரணம் என்று பேசப்படுகின்றது.
இந்திய சமூகம் சாதிகளாக பிளவுண்டு கிடக்கிறது. பிளவுண்டு இருப்பதும் பிரிந்து போவதும்தான் சாதியச் சமூகத்தின் அடிப்படை இயல்பு. எனவே இப்பண்புகள் நம்மிடம் இயல்பாகவே அமைந்து கிடக்கிறது. பிளவுண்டு இருப்பதற்கும் பிரிந்து போவதற்கும் நம்மிடம் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் சாதிய பண்புகளைத் தவிர வேறென்ன இருக்க முடியும். இது மட்டுமே முதன்மையான காரணமாகும்.
வரலாற்று ரீதியாக இந்திய துணைக்கண்டமானது பல்வேறு சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களை கண்டிருக்கிறது. இந்தியாவின் ஏற்படும் மாற்றங்களுக்கும் வளர்ச்சி போக்குகளுக்கும் முக்கிய காரணியாக இருப்பது இச்சமூக அரசியல் பொருளாதார வரலாற்று நிலைமைகள் தான்.
இத்தகைய வளர்ச்சிப் போக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் புறநிலையான அம்சங்கள் உறுதுணையாக இருந்துள்ளன என்பதை மறுக்க இயலாது. எனினும் இந்திய சமூகத்தில் சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளுக்கும் மீது செல்வாக்கு செலுத்தும் புறநிலைக் காரணிகளை புறக்கணிக்கவோ அல்லது கண்டும் காணாமல் விட்டுவிட்டாலோ அது இயங்கியலுக்கு எதிராக திசையில் போய் முடியும்.
அதே போல இந்திய சமூக பொருளாதார நிலைமைகளின் மீது வரலாற்று ரீதியாக செயலாற்றிவரும் உட்காரணிகளையும் இயங்கி வரும் அடிப்படையான அம்சங்களையும் அவற்றிற்கிடையே உள்ள வளர்ந்து வரும் முரண்களையும் புறக்கணிக்கவோ அல்லது இரண்டாம் பட்சமானதாக ஆக்கினாலோ அது பொருள்முதல் வாதத்திற்கு எதிராகப் போய் முடியும்.
உதாரணத்திற்காக தேசிய இனப்பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். தேசிய இனம், மொழி ஆகியவை குறித்த ஆய்வுகள் மார்க்சிய - லெனினியத்தில் இருக்கின்றன. அவற்றை வளர்த்தெடுத்து முன்னெடுப்பதை விடுத்து இந்தியாவில் தேசிய இனச்சிக்கலை புறக்கணிக்கும் வகையில் தோழர் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.
சில எம். எல் குழுக்கள் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பாட்டாளிவர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்ற வரம்புடன் அவை நிற்கின்றன.
ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பாட்டாளிவர்க்கம் முன்னெடுக்க வேண்டும் என்று தேசிய இன முரண்தான் முதன்மையானது என்று அதை கூறும் போக்கும் இக்குழுக்களில் சிலரிடம் உருவாகியிருக்கிறது.
ஏகாதிபத்தின் உலகமய திட்டத்தின் செயல்பாடும் அதனால் விளையும் விளைவையும் பார்க்கும் போது, ஒரு புறம் தேசிய இனங்களின் அல்லது தேசியங்களின் தனித்தன்மைகளை அழித்து அவற்றை உலகமயத்தில் உட்கிரகித்து கொள்கிறத; இன்னொரு புறம் உலகமயமானது உருவாக்குகின்ற சாதகமான விளைவுகளை காணலாம். அதாவது சர்வ தேசங்களையும் உலக மக்களையும் ஓரணியில் திரளவும் ஏகாதிபத்திற்கு எதிரான புறநிலையான ஒற்றுமையை கட்டமைக்கவும் செய்கின்றது.
அதேபோல இந்திய அரசு அனைத்து தேசிய இனங்களின் மீது தனது ஒடுக்குமுறையின் விளைவாக சுரண்டலின் மூலமாக அவற்றின் தனித்தன்மையையும் சுயவளர்ச்சியையும் அழிக்கின்றது. இதன் எதிர்விளைவாக அனைத்து தேசிய இனங்களை ஒன்றுபட தூண்டுகின்றது.
இதிலிருந்து தேசங்கள் ஒன்றுபட்டுபோராடி சுயநிர்ணய உரிமையை பாதுகாத்துக்கொள்வதா? அல்லது தேசிய இன பிரிவினைக்காக குரல் கொடுப்பதா? என்ற கேள்விகள் இரு போக்குகளை உருவாக்கியுள்ளது. தோழரோ இன்னும் ஒருபடி மேலே சென்று தேசிய இனச்சிக்கலை மறுதலிக்கும் நிலைக்கு செல்வது கவனிக்கத் தக்கது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தோழரின் ஏகாதிபத்தியம் குறித்தச் சிந்தனையானது ஹெகலிய முழுமைவாதத்தைப் பிரதிபலிப்பதாக தெரிகிறது. முழுமை ஒன்றே உண்மை; பகுதிகள் ஒருங்கிணைந்துதான் முழுமையாகிறது; ஆனால் இந்த பகுதிகளில் உண்மையில்லை; இயக்கம் இல்லை; அவ்வாறு இயங்கினாலும் அந்தப் பகுதிகள் முழுமையைச் சார்ந்தே இயங்கும் என்று ஹெகலியம் கூறுவதை தோழர் பிரதிபலிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக