பொதுவுடைமை இயக்கம், இந்திய துணைக்கண்டத்தில் தனது நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்திய சமூக பொருளாதார கலாச்சார மற்றும் அரசியல் நிலைமைகளை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தில் ரசியா சீனா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் ஒரு நீண்ட நெடிய காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. பொதுஉடைமை இயக்கத்தின் வரலாறு இங்கு அறிமுகமாகி சுமார் ஒரு நூற்றாண்டு காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த தத்துவம் இந்திய பகுதிகளில் நிலவும் சமூக பொருளாதார அரசியல் தத்துவார்த்த நிலைமைகளின் மீது ஒரு உணர்வு பூர்வமான தாக்கத்தை
ஏற்படுத்த முடியவில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்று பார்க்கும்போது இந்திய துணைக்கண்டத்திற்கே உரித்தான தனிச்சிறப்பான சமூக பொருளாதார வரலாற்று காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன். ஆனாலும் இந்தியப் பொது உடைமை இயக்கத்திற்கும் அதன் அரசியல் தத்துவ நிலைபாடுகளுக்கும் இதில் தனிச்சிறப்பான பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதை மட்டும் இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். இந்திய பொதுஉடைமை இயக்க வரலாற்றை நோக்கும் போது சுமார் அரை நூற்றாண்டு காலம் ஒன்றுபட்ட பொதுவுடைமை கட்சியாய் செயல்பட்டு பின்னர் எண்ணற்ற பிளவுகளையும் உடைசல்களையும் சந்தித்துள்ளது. நூற்றுக்கணக்கான குழுக்களும் பிரிவுகளும் புதிது புதிதாக தோன்றி செயல்பட்டு வந்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான தோழர்களும் இளைஞர்களும் தங்கள் வாழ்க்கையையும் இன்னுயிரையும் அற்பணித்து வரலாற்றுப் புகழ்மிக்க பல்வேறு போராட்டங்களையும் இயக்கங்களையும் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் பொதுவுடைமை பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்திய பொது உடைமை இயக்கத்தின் இத்துணை பிரச்சார இயக்கங்களும் போராட்டங்களும் நடந்தேறினாலும் மார்க்சிய தத்துவம் இந்திய மக்களின் சிந்தனையைப் பற்றிக் கொண்டுள்ளதா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.
மார்க்சிய தத்துவம் மக்களின் சிந்தனையைப் பற்றிக் கொள்ளும் போது அது அளவிடமுடியாத பௌதீகச் சக்தியாக எழுந்து சமூகத்தை மாற்றியமைப்பார்கள் என மார்க்சு கூறுவதை பலமுறை கேட்டிருக்கின்றோம்.ஆனால் இந்திய மக்களை ஏன் மார்க்சிய தத்துவம் பற்றிக் கொள்ளவில்லை என்பதை ஆய்வது உகந்ததாகும்.
சென்ற நூற்றாண்டில் இதற்கு முன் இந்திய வரலாறு கண்டிராத பல்வேறு வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடந்தேறின. பிரிட்டிசு ஆதிக்கத்திற்கு எதிராகவும் கடுமையான நிலபிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் மக்கள் போராடினர் என்பது வரலாறு.
தேசம் தழுவிய இந்திய சுதந்திர போராட்டம் பல்வேறு போக்குகளையும் தன்மைகளையும் கொண்டிருந்தது. இவ்வனைத்து போக்குகளையும் வழி நடத்திய தத்துவம் பிற்போக்கு தன்மையையே கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அன்றைய காங்கிரசு இயக்கத்தில் இரண்டு வகையான முக்கிய போக்குகள் இருந்தன. ஒன்று தீவிரவாதப் போக்கு. மற்றது மிதவாத போக்கு. தீவிரவாத போக்கை பிரதிநிதித்துவ படுத்தியவர்களும் பிற்போக்கு தத்துவத்தையே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.
ஆரம்பகால பொதுவுடைமை இயக்கத்தின் முக்கிய செயல்திட்டமானது காங்கிரசு இயக்கத்திலுள்ள தீவிரவாதப் போக்கு உடையவர்களை கட்சிக்கு வென்றேடுப்பது என்பதாகும். அந்த தீவிர வாதப் போக்கின் மூலம் காங்கிரசு இயக்கத்தையே மாற்றியமைப்பது என்ற செயல்திட்டத்தை பொதுவுடைமை இயக்கம் வைத்திருந்தது. இறுதியில் அது சுதந்திர போராட்டத்திற்கு தலைமை ஏற்பதிலிருந்து விலகிச் சென்று விட்டது. சுதந்திரமான இயக்கமும் உறுதியான தெளிவான தத்துவ தலைமைப் பண்பும் விஞ்ஞானபூர்வமான திட்டமும் இல்லாத காரணங்களினால் இந்திய பொதுவுடைமை இயக்கம் பின்னுக்கு சென்றது.
இன்னபிற காரணங்களினால் மார்க்சிய தத்துவம் இன்னமும் இந்திய உழைக்கும் மக்களின் சிந்தனையைப் பற்றிக் கொள்ளவில்லை என்பது தெளிவு. ஆகவேதான் வெகுமக்கள் போராட்டங்களில் பொதுவுடைமையாளர்கள் ஒரு தீர்மானகரமான பங்களிப்பை வகிக்க வியாலாமல் ஒதுங்கியே இருக்கின்றனர். சரி. இந்திய பொதுவுடைமை யாளர்களாவது மார்க்சிய தத்துவத்தை சிந்தனையில் பற்றிக் கொண்டார்களா என்று ஆய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சிந்தனைக்கும் புறஉலகிற்கும் உள்ள உறவு என்பது தத்துவத்தின் ஒரு அடிப்படைக் கூறு ஆகும். புற உலகத்திலிருந்து தோன்றிய சிந்தனை மீண்டும் புற உலகத்தை சென்றடைகின்றது. புற உலகம் மாற்றம் பெறுகின்றது. அதனால் சிந்தனையும் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. புற உலகிலிருந்து தோற்றம் பெறும் சிந்தனையானது புற உலகையே மாற்றியமைக்க வல்லமையும் பெற்று விடுகின்றது. இவ்விரண்டிற்கும் உள்ள உறவைத்தான் இயங்கியல் உறவு என்று கூறுகின்றோம்.
வரலாறு ரீதியான இத்தகைய உறவின் மூலம் இரண்டுமே மாற்றமடைந்து வளர்ந்து வருவது குறித்து மார்க்சு விளக்குவார். சிந்தனைக்கும் புற உலகிற்கும் பாலமாக அமைவது மனித நடவடிக்கையாகும். இரண்டின் வளர்ச்சிக்கும் மனித நடவடிக்கை என்பது இன்றியமையாததாகும். சிந்தனையின் பாத்திரத்தைக் குறைத்து மதிப்ப்பிடுவது வறட்டு பொருள் முதல் வாதத்திற்கு வழிவகுக்கும். அது இயக்க மறுப்பியலுக்கும் இடமளிக்கும். அதேபோல மனித நடவடிக்கையைப் புறக்கணிப்பது போன்ற குறைபாடுடைய பொருள்முதல்வாதம் ஆகும்.
இந்திய மரபுரீதியான பொருள்முதல்வாதம் இத்தகையதாகத் தான் இருந்தது. இது மனித நடவடிக்கையின் இன்றியமையாப் பாத்திரத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. ஆகவே இந்திய மரபு பொருள் முதல்வாத சிந்தனை புறஉலகை மாற்றியமைக்கவோ தன்னை மாற்றிக் கொள்ளவோ இல்லை. இந்திய மரபு பொருள்முதல்வாத பாரம்பரியத்தை உரிமை கொண்டாடுபவர்களாகிய இந்திய கம்யூனிஸ்டுகளால் இத்தகைய பலவீனத்தை களைந்தெடுக்க இயலவில்லை.
இது ஒரு புறமிருக்க, பிரிட்டிசு ஏகாதிபத்திய ஆதிக்கத்தினால் தத்துவ தளத்தில் நேர்காட்சிவாத சிந்தனையே மேலோங்கியிருந்தது. இதுவும் ஒருவகையான அனுபவாத பொருள்முதல்வாதம் ஆகும். இது இந்திய மரபு பொருள்முதல்வாத சிந்தனையோடு பிரிட்டிசு நேர்காட்சிவாத சிந்தனையுடனான கலவையே, பொது உடைமையாளர்களை ஆட்கொண்டது. மேலும் இயக்கவியல் தன்மை முற்றிலும் அற்றுப் போயிருந்தது.
இத்தகைய பின்புலத்தில்தான் இந்தியாவில் மார்க்சியம் அறிமுகம் ஆனது. லெனின் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு மார்க்சிய தத்துவம் பரிச்சயம் ஆனது. அன்றைய இந்திய பொதுவுடைமையாளர்களால் மார்க்சியத்தை முழுமையாக சுதந்திரமான சிந்தனையாக உள்வாங்கிக் கொண்டு வளர்த்துக் கொள்ளவில்லை.
ஆகவே சர்வதேச பொதுவுடைமை கட்சிகளில் இருந்துவந்த பலவீனமான போக்குகளும் பிற்போக்கான சிந்தனைகளும் இந்திய பொதுவுடைமை இயக்கத்தை எளிதில் ஆட்கொண்டது. இரசியசார்பு சீனசார்பு என வெளிப்படையாகவே இந்திய பொதுவுடைமையாளர்களின் சிந்தனையில் ஒரு சார்பு தன்மை காணப்பட்டது. இது ஏறத்தாழ அனைத்துக் குழுக்களின் சிந்தனை முறையும் அவ்வாறே இருந்தது.
இரசியாவிலும் சீனாவிலும் பொதுவுடைமையாளர்களின் தலைமை தகர்ந்த பின்னரே மார்க்சியத்தை இந்தியாவின் குறிப்பான நிலைமைகளுக்கு பொருத்துவது குறித்து யோசிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. தமக்கே உரிய தத்துவ பலவீனத்தால் இம்முயற்சியும் வெற்றிபெறுமா என்பது கேள்விக்குறியே.
இந்திய சிந்தனை மரபு என்பது தனிச்சிறப்பு வாய்ந்ததும், சிக்கலானதுமாகும். இதில் ஏராளமான தத்துவ போக்குகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. இந்திய மரபு தத்துவங்கள் குறித்து இந்திய பொதுவுடைமையாளர்களிடையே எப்பொதுமே ஒரு உதாசீனமான போக்கு நிலவி வந்துள்ளது.
இந்திய பொதுவுடைமையாளர்கள் இந்திய சிந்தனை மரபிலுள்ள பொருள்முதல்வாத சிந்தனையையோ அல்லது இயங்கியல் கூறுகளையோ பயில்வதோ அல்லது பயிற்றுவிப்பதோ இல்லை. அவற்றின் பலவீனங்களை களைந்து தனிச்சிறப்புகளைக் கண்டறிந்து அவற்றை உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க என்றுமே விரும்பியதில்லை.
இதன் விளைவாக இவர்கள் இந்திய மரபு தத்துவங்களில் உள்ள பிற்போக்கான தத்துவங்களையே பிரதிநிதித்துவ படுத்துகின்றனர். இந்திய சிந்தனைமரபிலுள்ள பொருள்முதல்வாத பாரம்பரியத்தை உரிமைக் கொண்டாடுபவர்களாக இருந்தாலும் அதன் பலவீனமான அம்சங்களூக்கு ஆட்பட்டுப் போனதில் வியப்பேதுமில்லை.
இந்திய நிலைமைகளில் அனுபவவாதமே மேலோங்கி இருக்கிறது.
நமது விவாதத்தை தோழர் மார்க்சின் மேற்கோளிலிருந்து தொடங்கலாம். '’தத்துவாதிகள் எல்லோரும் உலகத்தை விமரிசனம் மட்டும் செய்தனர்; ஆனால் பிரச்னை அதை மாற்றுவதாகும்' என தனது புகழ்பெற்ற வாசகத்தை ஒரு இடத்தில் கூறுவார். இந்த மேற்கோள் ஒரு எந்திரதனமான கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டு உலகை ஆய்வு செய்தது போதும், இதை மாற்றுவதே நமது முன்னுள்ள ஒரே கடமை ஆகும் என்று பல மார்க்சியர்கள் நடைமுறை பணியில் மும்மரமாக ஈடுபட்டிருப்பதைக் காணவியலும். அவரவர் ஈன்ற அனுபவங்கள் கொள்கைகளாக வடித்தெடுக்கப்படுகின்றன. மேலும் மேலும் நடைமுறையில் சிக்கி தவிக்கின்றனர்.
சுருக்கமாக நாம் இந்தியாவில் கம்யூனிச கட்சிகளிடம் காணும் காட்சி, யானையை பார்த்த குருடர்களின் கதைதான். ஒருவர் யானையின் காதை தொட்டுப்பார்த்து யானையைப் புரிந்து கொள்கிறார். மற்றொருவர் யானையின் கால்களை தொட்டுணர்ந்து யானையை புரிந்துக் கொள்கிறார். மற்றவர் உடலைத் தொட்டுப்பார்த்து யானை சுவரைப்போல இருப்பதாக உரைக்கிறார். இன்னொருவர் யானையின் இன்னொரு பகுதியை தொட்டுணர்ந்து யானையை பற்றி விளக்குகிறார். எவரும் முழுமையைப் பார்த்து உணர்ந்தவரில்லை.
இவ்வாறு இந்திய யதார்த்தத்தை முழுமையாக காணமாட்டாமல் அதை தனிதனிக் கூறுகளை பிரித்து எடுத்து தனித்தனியாக புரிந்து கொண்டுள்ளனர். இந்த அடிப்படை மேலும் உறுதிபடுத்தும் வகையில் அவர்களது நடைமுறை அனுபவம் அமைந்து விடுகின்றது. ஒன்றை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் பார்த்தவை யாவும் யானையின் உறுப்புகளைத்தான் என்பதை நாம் நினைவில் இருத்த வேண்டும். ஆக அனைவரும் பகுதியினை முழுமையாக கருதி தம் அனுபவத்தினை கோட்பாடாக்கி கொள்கின்றனர். இவர்களை தத்துவ குருடர்கள் என்று அழைப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது
நமது பாரம்பரியம் வர்க்க போராட்ட பாரம்பரியம் ஆகும். நடைமுறையில் ஏராளமான செழுமையான அனுபவங்களும் அளப்பறிய போர்க்குணமும், தன்னிகரற்ற அற்பணிப்பும் நமது மார்க்சியர்களுக்கு உண்டு. ஆனால் தத்துவ பாரம்பரியத்தில் நாம் எவ்வளவு வளர்ந்துள்ளோம் அல்லது வளர்ச்சி பெற்றுள்ளோம் என எண்ணிப் பார்க்கையில் நாம் இன்னும் ஆரம்பத்திலேயே இருப்பதை விளங்கிக்கொள்ள சிரமம் இருக்காது என எண்ணுகிறேன். தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடு இந்திய நிலைமைகளில் நீர்த்துப்போய் அனுபவவாதமே மேலோங்கி இருக்கிறது. ஆய்வில்லாமல் பேச உரிமை யில்லை என்று மாவோ சொன்னார். ஆனால் பருண்மையான ஆய்வில்லாமல் முக்கால் நூற்றாண்டு நடைமுறையில் மூழ்கி கழித்து விட்டோம்.
திட்ட பிரச்னை எல்லாம் முடிந்து விட்டது, இனி அதை நடைமுறைப்படுத்துவதுதான் பாக்கி என்று பிரகடபடுத்தும் கட்சிகளுக்கு இடையே, குழுக்கள் மத்தியில், இது போன்று தத்துவ கருத்தியல் பிரச்சனைகள் குறித்து திறந்த மனதுடன் வெளிப்படையான விவாதங்கள், ஆரோக்கியமான விமரிசனங்கள், நேர்மையான சுயவிமரிசனங்கள் நடத்துவது என்பது மிகவும் அவசியமானதும் அத்தியாவசியமானதுமாகும்.
தோழரே தங்களது இக்கட்டுரையை படித்தேன்,
பதிலளிநீக்குபொதுவுடைமை இயக்கம் அறிமுகமாகி சுமார் 100 ஆண்டுகள் ஆகப் போகின்றன. ஆனால் அந்த தத்துவம் இந்திய பகுதிகளில் நிலவும் சமூக பொருளாதார அரசியல் தத்துவார்த்த நிலைமைகளின் மீது ஒரு உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று ஆதங்கத்துடன் தொடங்கி இருக்கிறீர்கள்
“இந்தியபொதுவுடைமை யாளர்களாவது மார்க்சியதத்துவத்தை சிந்தனையில் பற்றிக் கொண்டார்களா என்று ஆய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.” என்று சரியான கண்ணோட்டத்தை வைத்திருக்கிறீர்கள். ஆனால் இதனை விரிவான விளக்கத்துடன் விவாதத்தை தொடங்கினால். நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
“சிந்தனைக்கும் புறஉலகிற்கும் உள்ளஉறவு என்பது தத்துவத்தின் ஒரு அடிப்படைக் கூறு ஆகும். புறஉலகத்திலிருந்து தோன்றியசிந்தனை மீண்டும் புறஉலகத்தை சென்றடைகின்றது. புறஉலகம் மாற்றம் பெறுகின்றது. அதனால் சிந்தனையும் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. புறஉலகிலிருந்து தோற்றம் பெறும் சிந்தனையானது புறஉலகையே மாற்றியமைக்கவல்லமையும் பெற்று விடுகின்றது. இவ்விரண்டிற்கும் உள்ளஉறவைத்தான் இயங்கியல் உறவு என்று கூறுகின்றோம்.” என்ற தங்களின் கருத்து, சிந்தனையின் தோற்றத்தை விடுத்து சிந்தனைக்கு முதன்மை கொடுக்கிறது என்பதை நான் வெளிப்படையாக தெரிவிக்க விரும்புகிறேன். மேலே நீங்கள் “இந்தியபொதுவுடைமை யாளர்களாவது மார்க்சியதத்துவத்தை சிந்தனையில் பற்றிக் கொண்டார்களா என்று ஆய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.” என்று தொடங்கிவிட்டு, தங்கள் கருத்தோட்டத்தில் மார்க்சியத்திற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் இருப்பதே நல்லது என்று கருதுகிறேன்.
“சிந்தனையின் பாத்திரத்தைக் குறைத்து மதிப்ப்பிடுவது வறட்டு பொருள் முதல் வாதத்திற்கு வழிவகுக்கும்.” என்று எழுதியிருக்கிறீர்கள். தங்களை மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு நெருங்க விடாமல் எதோ தடுப்பதாக கருதுகிறேன். அதனை இனம் கண்டு, அதனிடமிருந்து விலகாமல் இந்திய நிலமைகளை தாங்கள் பார்வையிடுவது மார்க்சிய வழிமுறையில் அமையாது என்பதை தெரிவிப்பதற்காகவே இதனை எழுதுகிறேன்.
“புறஉலகத்திலிருந்து தோன்றியசிந்தனை மீண்டும் புறஉலகத்தை சென்றடைகின்றது. புறஉலகம் மாற்றம் பெறுகின்றது. அதனால் சிந்தனையும் வளர்ந்துக் கொண்டே வருகின்றது.” என்ற தங்களின் கருத்தில் சிந்தனையின் தனித்த சுதந்திரத்தை பேசுவதாகவே நான் கருதுகிறேன். புறஉலகத்திலிருந்து சிந்தனை தோன்றியவுடன், சிந்தனை தனித்த சுதந்திரம் பெற்று புறஉலகை மாற்றுவதாக தெரிவிப்பதில், சிந்தனை புறஉலகின் போக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சிந்தனை தனது வளமையால் புறஉலகை மாற்ற நினைப்பது தெரிகிறது.
மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ன சொல்கிறது என்றால் புறநிலையின் அடிப்படையில் மாற்றம் அடையும் சமூகத்தை அறிந்து கொண்ட சிந்தனை அதன் போக்கில் சென்று சமூகத்தை மாற்றுகிறது என்று தான் சொல்கிறதே தவிர, புறநிலையினால் பெற்ற சிந்தனை, புறஉலகின் போக்கையே மாற்றிவிடும் என்று தெரிவிக்கவில்லை.
அடித்தளத்திற்கும் மேல்கட்டுமானத்திற்கு இடையே உள்ள உறவில். அடித்தளம் நிர்ணயகரமான பாத்திரத்தை வகிக்கிறது. மேல்கட்டுமானம் வரம்பிற்கு உட்பட்ட வகையில் அடித்தளத்தை தாக்கம் செலுத்துகிறது என்று தான் மார்க்சியம் தெரிவிக்கிறது, அதாவது பொருளாதார அவசியத்தின் அடிப்படையில் மேல்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது எதிர்செயல் புரிகின்றன. இதனை அறிந்து கொள்ளாமல் வறட்டுப் பொருள்முதல்வதம் என்றோ மேல்கட்டமைப்பின் அடித்தளத்தின் மீதான தாக்கத்தை இயக்கவியல் முறையில் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிடுவதனால் மட்டுமோ தங்களின் கண்ணோட்டம் மார்க்சிய வழிபட்டதாகாது என்பதை தெரிவிக்கிறேன்.
இதனை சரிப்படுத்திக் கொண்டதிற்கு பிறகு, தங்களின் தத்துவப் பணி மார்க்சிய வழிபட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கிறேன், இதன் அடிப்படையில் விவாத்த்திற்கு வந்தால் விவாத்த்திற்கு ஆயத்தமாக இருக்குகிறேன்.
அ,கா,ஈஸ்வரன் கைபேசி 9283275513