இந்திய எதார்த்தம் - பன்மைத் தன்மை
இந்திய எதார்த்தம் பன்மைத் தன்மை வாய்ந்ததாகும் என்பது சொல்லாமலே விளங்கும். சாதி ரீதியாக, இன ரீதியாக, மொழி ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, தத்துவ ரீதியாக, அரசியல் ரீதியாக, சிந்தனை ரீதியாக வேறுபட்ட சித்திரத்தையே இந்தியத் துணைகண்டம் நமக்கு வழங்குகிறது. இதற்கு ஒற்றைத் தன்மையை வலியுறுத்தி மேலிருந்து ஒற்றை கட்டமைப்பு ஒன்றை கட்டமைக்க ஆளும் வர்க்கம் முயற்சித்து வெற்றியும் பெற்று இருக்கிறது. , நமக்கு பன்முகப்பட்ட சிந்தனை, புரிதல், செயல்பாடு ஆகியவற்றின் அவசியத்தை உணர்த்துகிறது.
நாமும் நிலவுகின்ற பன்மைத் தன்மை வாய்ந்த சமூகத்திற்கு மாற்றாக ஒற்றைத் தீர்வை முன்வைக்கலாமா எனது எனது ஐயப்பாடு. பன்மைத் தன்மை வாய்ந்த இந்திய எதார்த்தம்
வரலாற்று ரீதியாக இந்திய துணைக்கண்டமானது பல்வேறு சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களை கண்டிருக்கிறது. இந்தியாவின் ஏற்படும் மாற்றங்களுக்கும் வளர்ச்சி போக்குகளுக்கும் முக்கிய காரணியாக இருப்பது இச்சமூக அரசியல் பொருளாதார வரலாற்று நிலைமைகள் தான்.
இத்தகைய வளர்ச்சிப் போக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் புறநிலையான அம்சங்கள் உறுதுணையாக இருந்துள்ளன என்பதை மறுக்க இயலாது. எனினும் இந்திய சமூகத்தில் சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளுக்கும் மீது செல்வாக்கு செலுத்தும் புறநிலைக் காரணிகளை புறக்கணிக்கவோ அல்லது கண்டும் காணாமல் விட்டுவிட்டாலோ அது இயங்கியலுக்கு எதிராக திசையில் போய் முடியும்.
அதே போல இந்திய சமூக பொருளாதார நிலைமைகளின் மீது வரலாற்று ரீதியாக செயலாற்றிவரும் உட்காரணிகளையும் இயங்கி வரும் அடிப்படையான அம்சங்களையும் அவற்றிற்கிடையே உள்ள வளர்ந்து வரும் முரண்களையும் புறக்கணிக்கவோ அல்லது இரண்டாம் பட்சமானதாக ஆக்கினாலோ அது பொருள்முதல் வாதத்திற்கு எதிராகப் போய் முடியும்.
கம்யூனிச இயக்கத்தின் நிலை - சாதியப்பண்பு நிறைந்த நிறுவனங்கள்
அனைத்து குழுக்கள் மற்றும் கட்சிகள் உள்ளடங்கிய ஒட்டுமொத்த பொது உடைமை இயக்கத்தையும் பார்க்கும் போது எதிரெதிரான முரண்கள் நிலவுவதை ஒருவர் பார்க்க முடியும். இடது தீவிரவாதத்திற்கும் வலதுசாரித்தனத்திற்கும் உள்ள முரணை வெளிப்படையாகவே காணலாம்.
நாம் காணும் எதார்த்தம் முழுமையானதா அல்லது பகுதிகள் கொண்டதா? முழுமைக்கும் பகுதிக்குமான போராட்டம் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. இது பொது உடைமை இயக்கத்திலும் பிரதிபலிக்கக் காணலாம். ஏகாதிபத்தினைக் குறித்தும் அதன் மீதான புரிதலைக் குறித்தும் கவலைப்படும் கே. என்.ஆர் தலைமையிலான எம்.எல் குழு, இந்தியாவின் குறிப்பானதும் தனி சிறப்பானதுமான பிரச்சனைகள் குறித்து எந்த கவனமும் அக்கறையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் குறிப்பானதும் தனிசிறப்பானதுமான பிரச்னைகள் குறித்து கிஞ்சிற்றும் ஆய்ந்ததாக தெரியவில்லை. ஏகாதிபத்தியம் குறித்தச் சிந்தனையானது ஹெகலிய முழுமைவாதத்தைப் பிரதிபலிப்பதாக தெரிகிறது. முழுமை ஒன்றே உண்மை; பகுதிகள் ஒருங்கிணைந்துதான் முழுமையாகிறது; ஆனால் இந்த பகுதிகளில் உண்மையில்லை; இயக்கம் இல்லை; அவ்வாறு இயங்கினாலும் அந்தப் பகுதிகள் முழுமையைச் சார்ந்தே இயங்கும் என்பது ஹெகலியம்.
இப்போக்கு எதிராக சில எம்.எல். குழுக்கள் பகுதி நலன்களை மட்டுமே பிரதிபலிக்கச் செய்கின்றனர். இவர்கள் முழுமையின் தன்மையைப் பார்க்க தவறுவதோடு பகுதியிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். இந்திய பொது உடைமை இயக்கம் பல குழுக்களாக பிளவுண்டு கிடப்பதும் பொது உடைமைச் சக்திகள் சிதறிக்கிடப்பதும் அவை பகுதிகளின் தன்மைகளை பிரதிபலிப்பதால் தான் என்பது சொல்லாமலே விளங்கும்.
அதே போல ஒரு குழுவுக்குள் உள்ள உறுப்பினர்கள் முரண்பாடற்ற ஒற்றைத் தன்மையைக் காணலாம். அதே சமயம் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் ஐக்கியமற்ற பகைமைத் தன்மையைக் காணலாம். ஐக்கியத்தை கைவிட்டு பகைமை கொள்வதும், போராடுவதைக் கைவிட்டு ஐக்கியத்தை மட்டும் வலியுறுத்துவதும் ஆன முரண் சாதியச் சமூகத்தின் அடிப்படை குணாம்சமாகும். போராடுவதைக் கைவிட்டு ஐக்கியத்தை மட்டும் வலியுறுத்துவது அதிகாரத்திற்கும் இட்டு செல்லும் அதே வேளையில் ஐக்கியத்தை கைவிட்டு முரண்பாடு கொள்வது பிளவுக்கு இட்டு செல்லும். இதுவே இந்திய பொது உடைமை இயக்கத்தின் அடிப்படைப் பண்பாக இருக்கிறது.
கம்யூனிச இயக்கத்தில் திரிபுவாதம் திருத்தல்வாதம், இடதுதீவிரவாதம் அழிவு வாதம் என்பவை பிளவுகளுக்கும் உடைசல்களுக்கும் முதன்மைக் காரணம் என்று பேசப்படுகின்றது. இந்திய சமூகம் சாதிகளாக பிளவுண்டு கிடக்கிறது. பிளவுண்டு இருப்பதும் பிரிந்து போவதும்தான் சாதியச் சமூகத்தின் அடிப்படை இயல்பு. எனவே இப்பண்புகள் நம்மிடம் இயல்பாகவே அமைந்து கிடக்கிறது. பிளவுண்டு இருப்பதற்கும் பிரிந்து போவதற்கும் நம்மிடம் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் சாதிய பண்புகளைத் தவிர வேறென்ன இருக்க முடியும். இது மட்டுமே முதன்மையான காரணமாகும்.
எம் எல் இயக்கம் சி.பி.எம் இடமிருந்து பிரிந்து வந்த போதும் சரி, அது பல்வேறு குழுக்களாக பிளவுகண்டு பிரிந்து போன தருணங்களிலும் சரி, அடிப்படையான முக்கியத்துவம் வாய்ந்த தத்துவார்த்த கோட்பாட்டு ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொண்டதே யில்லை என்று தோன்றுகிறது. புற நிலையில் புதிதாக ஆயிரம் தத்துவார்த்த சிக்கல்களும் பிரச்சனைகளும் எதிரே இருந்தாலும் தமக்குள்ளே சுருண்டு போகும் தன்மையையே கொண்டிருக்கிறது. ஆகவே அத்தருணங்களுக்கு பின்னர் ஏதாவது அதிசயம் நடைபெறுகிறாதா என்ற ஏக்கமே மிஞ்சியது. அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த எதுவுமே நடைபெறவில்லை. இதுவும் அதைப் போன்றதே என்று எண்ணத்தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக