நக்சலிசம் - நரோத்னிசத்தின் பாதிப்பு
மேலும் எம் எல் குழுக்கள் எல்லோரும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் லின்சியோ பிங் வழியின் இடது தீவிர அழித்தொழிப்புப் பாதையை தேர்ந்தெடுத்தவர்கள். இந்தியாவில் நக்சலிசம் நரோத்னிசமாகும். நரோத்னிசத்தை லெனின் கடுமையாக விமரிசனம் செய்தார். தத்துவார்த்த ரீதியல் வீழ்த்தினார். ஆனால் இந்திய எம்.எல். குழுக்கள் ரசிய நரோடிச போக்கையே பிரதிநிதித்துவபடுத்துகின்றனர்.
இந்திய சமூகத்தில் குறைந்த பட்சம் இரண்டு வகைப் பிரச்சினைகள் உண்டு. ஒன்று: சமூகத்தில் உள்ள உற்பத்தி சக்திகளை எப்படி வளர்ப்பது என்பது. மற்றொன்று: உற்பத்தி உறவுகளையும் சமூக உறவுகளையும் எப்படி மாற்றியமைப்பது என்பது. ஆனால் எம். எல். இயக்க தோழர்களின் முக்கிய கவனம் அவர்களது திட்டப்படி சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதாகும். முக்கியமாக சிறு உடைமை விவசாய வர்க்க நலன்களை பிரதிபலிப்பதுதான் நக்சலிசத்தின் அடிப்படையான பண்பாகும். உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கை சாராம்சத்தில் சிறு உடைமையாளரின் நலனைப் பாதுகாக்கச் செய்கிறது.
பொது திட்டம் - பின்னணி
பொது திட்டம் கூறுவது யாதெனில் இந்தியா ஒரு அரைக்காலனி அரை நிலபிரபுத்துவம் தன்மைகளைக் கொண்டது. முக்கிய நான்கு முரண்பாடுகள் அவற்றில் முதன்மையானது நிலபிரபுத்துவத்திற்கு பரந்த பட்ட மக்களுக்குமான முரண்பாடு ஆகும். உடனடி கடமை புதிய சனநாயக புரட்சி ஆகும். இது மா.லெ. குழுக்களின் 1970 இன் அடிப்படைத் திட்டத்திலிருந்தும் தற்போது பெரும்பாலான குழுக்கள் வைத்திருக்கும் திட்டத்திலிருந்தும் விலகிச் செல்ல வில்லை என்பதற்கான சான்று. சனநாயகப் புரட்சி என்ற கருத்தாக்கம் நக்சல்பாரி அரசியல் வேலைத் திட்டங்களிலிருந்து வந்து சேருகிறது. சீனப்புரட்சி அனுபவங்களிலிருந்தும் மாவோயிச சிந்தனையிலிருந்தும் இக்கருத்தாக்கம் உருவானதைத் தோழர்கள் அறிவார்கள். சனநாயகப் புரட்சி என்ற சொல்லாக்கத்தோடு தொடர்பு கொண்ட அரைநிலப்பிரபுத்துவம், மூன்றாம் உலக நாடுகளின் பிரத்தியேகப் பண்புகள், புரட்சியில் விவசாயிகளின் பங்கு ஆகிய விரிந்த பல கருத்தாக்கங்களோடுதான். இவை சீனமாதிரி திட்டம். இது நமக்கு பொருந்துமா? இந்தியாவின் அரசியல் சமூக பொருளாதார கலாச்சார வரலாற்று சூழ்நிலைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலிருந்து வருவிக்கப்பட்டதா?
’உண்மை’ என்பது, ஒருமுறை கண்டறியப் பட்டவுடன் வெறுமனே மனப்பாடம் செய்யக்கூடிய, தயார்நிலையிலுள்ள வறட்டுச் சூத்திரங்களின் தொகையாக இருக்க முடியாது. இப்போது உண்மை என்பது அறிந்துணர்தலின் வளர்ச்சிப் போக்கிலேயே அடங்கியுள்ளது (ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்)
திட்டம் இன்னும் இந்திய தமிழக நிலைமைகளை ஆழமாகவும் அகலமாகவும் முழுமையாகவும் பகுதியாகவும் ஆய்வு செய்து தயாரிக்கப் பட்டிருக்கவேண்டும். இதன் செயல்திட்டம் தமிழகத்தின் பெரும்பாலான பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எல்லா பிரச்சனைகளையும் பட்டியலிட்ட விதத்தைப்பார்க்கும் போது இது ஒரு பொறுப்புள்ள கட்சியின் தேர்தல் அறிக்கைப் போலத் தோன்றுகிறது. மட்டுமின்றி தமது அணிகளை திருப்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது போல் தோற்றமளிக்கிறது. காரணம் என்ன வென்றால், இவர்கள் இப்புதிய குழுவை தாம் முன்னர் சார்ந்திருந்த முன்னாள் மா.லெ. கட்சியின் நீட்சியாக மட்டுமே தம்மை உணர்கின்றனர்.
80 களின் இறுதியில் கட்சியில் சில பாரதூரமான முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதும் அவை அமுலுக்கு வந்த போதும் கூட இத்தகைய ஒரு பிளவு எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண சூழ்நிலைமையில் இத்தகைய பிளவு ஏற்பட்டது ஏன்? இதற்கான காரணங்களை முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளது. தலைமை குறுங்குழு வாதத்தில் மூழ்கிவிட்டது; இது வலது சந்தர்ப்ப வாத அரை அராஜகவாத் தாராளவாத சிறுமுதலாளிய தலைமையாக மாறிவிட்டது. பிளவுக்கு முக்கியத்துவம் நிறைந்த அடிப்படையான குறிப்பிடத்தக்க அரசியல் தத்துவார்த்த காரணங்கள் இருந்தது போல் தோன்றவில்லை. இது அதிகாரத்துவத்திற்கு எதிரான பிளவு போல் தோற்றமளிக்கிறது. அதனாலென்னவோ தெரியவில்லை இத்திட்டத்தில் அமைப்பறிக்கை இல்லாமல் போனது.
விஞ்ஞான பூர்வமான திட்டம் - அனைத்தையும் உள்ளடக்கிய இயங்கியல் அணுகுமுறை
விஞ்ஞான பூர்வமான திட்டம் என்பது என்ன? அதற்கான அடிப்படை என்ன? அது எந்தெந்த அம்சங்களை உள்ளடக்கி யிருக்க வேண்டும்? அதற்கான நோக்கம் என்ன? என்பனவற்றை எல்லாம் விவாதிக்கவும் பூர்த்தி செய்யவும் வேண்டும்.
புராதன இனக்குழு சமூகம், அடிமை முறை, நில உடமை முறை, முதலாளியம், சோசலிசம் என்ற ஐரோப்பிய வரலாற்று வரிசைதான் நமக்கு வாய்ப்பாடாக இன்னமும் இருக்கிறது. முதலில் இத்தகைய எந்திரவயப்பட்ட சிந்தனையிலிருந்து மீள வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தனித்தன்மை வாய்ந்த சமூக பொருளாதார கலாச்சார அரசியல் வரலாற்று போக்கைப் பயில வேண்டும்.
கீழைநாடுகளுக்குச் சொந்தமான சமூக பொருளாதார வாழ்வியல் முறையாக மார்க்ஸ் ‘ஆசிய உற்பத்தி முறை’யைச் சுட்டிக் காட்டினார். இந்தியா போன்ற நாடுகளின் சமூக அமைப்புகளுக்கு உரிய தனிச்சிறப்பான பண்புகளை நாம் சுயமாகவும் சுதந்திரமாகவும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
இந்திய மார்ச்சியர்கள் பொருளாதார குறைத்தல் வாத்திலிருந்து மீண்டு, மேற்கட்டுமான விசயங்களிலும் ஆக்கபூர்வமாக கவனம செலுத்துவது என்பதைக் கோட்பாட்டு தளத்தில் உணர்ந்து அதனடிப்படையில் திட்டம் தாயாரிக்க முனையவேண்டும். அது மட்டுமின்றி எல்லாவிதமான விசயங்களிலும் குறைத்தல் வாதத்தைக் கடைபிடிப்பது இன்று வாடிக்கையாகி விட்டது.
இந்தியாவின் வரலாற்றுரீதியாக மேல்கட்டுமானத்தின் செல்வாக்கு மற்றும் அடித்தளம் மற்றும் மேல்கட்டுமானம் ஆகியவற்றிற்கிடையேயான இயங்கியல் ரீதியிலான உறவு ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டு செயல்படவும் கலாச்சார புரட்சியை முன்னெடுக்கவும் இன்றைய நிலைமைக் கோருகின்றது.
சக தோழமை அமைப்புகள் மற்றும் குழுக்களின் சிறப்பம்சங்களையும் அனுபவங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் சனநாயகத் தன்மையை தரித்துக் கொள்ளவேண்டும். திட்டம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளை கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் விவாதிப்பதோடு இதுவரை நிலவும் போக்குகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், இந்திய சமூக எதார்த்தத்தில் நீடித்துவரும் மிகவும் சிக்கலான முரண்களை திறமையாக எதிர்கொள்ளவும் கையாளவும் தீர்ப்பதற்கும் ஆன ஒரு வலுவான இயங்கியல் போக்கு உருவாக்கவும் உருவாகவும் வேண்டும்.
இவர்களைப் பொருத்தவரை இந்திய எதார்த்தம் என்பது இவர்களின் சிந்தனையிலிருந்து அந்நியப்பட்டு போய்விட்ட ஒன்றாகும். வறட்டுக் கோட்பாடு அனைத்தையும் அழித்தொழிக்கும் இயக்கவியல் வழிமுறை கைவரப்பெறுவது ஒன்றுதான் இன்றைய தேவையும் அவசியமுமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக