அக, புறமுரண்பாடுகள்
இவ்வறிக்கையில் தமிழ் தேசிய இனத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய இனத்தின் பன்மைத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுதான் இதன் சிறப்பம்சமாகும். வழமையாக ஒற்றைத் தீர்வை முன்வைக்கும் மரபை மீறி அனைத்து கூறுகளையும் தழுவிய ஓர்மைத் தீர்வை முன்வைப்பது நன்றாக இருக்கிறது.
தமிழ் தேசிய இனத்தின் அகமுரண்பாடுகள் புறமுரண்பாடுகள் பற்றிய விளக்கம் இதன் மற்றொரு சிறப்பம்சம். ஆனால் அக, புறமுரண்பாடுகள் பற்றிய விளக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தாலும் இதன் அணுகுமுறை மேம்பட்டதாக இல்லை. உதாரணமாக சாதிய முரண்கள் பற்றிய அணுகுமுறையைப் பார்க்கலாம்.
அறிக்கையில் பேசப்பட்ட அனைத்து விசயங்களிலும் சாதியம் என்பது இந்திய நிலைமைகளைப் பொருத்தவரை குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரை தனிச்சிறப்பு வாய்ந்ததும் முக்கியமானதும் ஆனவைகளில் ஒன்றாகும். ஆகவே சாதிய முறையை சாதியக் கட்டமைப்பை ஒருவர் எவ்வாறு அணுகுகிறார் என்பதை கவனத்துடன் ஆராய வேண்டும். வர்க்க முரணைப் போலல்லாமல் சாதிய முரண் சிக்கலானதும் தனித்துவம் வாய்ந்ததாகும். அதுமட்டுமல்லாமல் வர்க்கமுரண் சாதிய முரணுக்கு இட்டுச் சென்ற இயக்கப்போக்கையும் சாதியமுரண் வர்க்க முரணுக்கும் இட்டுச் செல்லும் இயக்கப்போக்கையும் கண்டு தெளிவதும் அவற்றைக் கோட்பாடுகளாக வரையறுப்பதும் நமது கடமையாகும்.
சாதியக் கட்டமைப்பை சமத்துவமின்மைக் கொண்டதாகப் பார்ப்பது ஓர் அணுகுமுறை. சாதியக் கட்டமைப்பை படிநிலை சமத்துவமின்மைக் கொண்டதாக காண்பது மற்றொரு அணுகுமுறை. இதில் முன்னது பெரியாரிய அணுகுமுறையாகும். பின்னது அம்பேத்காரிய அணுகுமுறையாகும்…. முன்னதைவிட பிந்தையது முன்னேறிய அணுகுமுறையாகும். பிந்தையது இயங்கியல் பூர்வமான அணுகுமுறைக்கு நெருக்கமானதாகும். தமிழ் தேசிய இனத்தின் முரண்பாடுகளை அளவு ரீதியாக கணித்திருக்கும் அறிக்கை பண்பு ரீதியாக கணிக்க தவறிவிட்டது.
நாம் ‘மார்க்சிய, லெனினிய மாவோவிய பெரியாரிய வழி வந்தவர்கள்' என்று தமது வழிகாட்டும் தத்துவத்தை அடையாள படுத்திக்கொள்கிறது. பெரியாரியத்தை வழிகாட்டும் தத்துவமாக ஏற்றுக் கொள்ளும் அறிக்கை, அம்பேத்காரிய இணைவை இயந்திரத்தனமாக கருதுகிறது. அதாவது இது 'மார்க்சியம் + பெரியாரியம் +அம்பேத்காரியம் ஓர் எந்திரத்தனமான புரிதலே’ என அம்பேத்காரியத்தை புறக்கணிக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட சாதிகளை மையப்படுத்திய சாதிய ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்று கூறுகிறது.
இன்று அகநிலைக் கருத்துமுதல்வாத எந்திரத்தினமான புரிதலே மேலோங்கி இருப்பதாகவும் அதை மறுத்தும் விமரிச்சித்தும் இவ்வறிக்கையில் அணுகியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு மாறாக இன்னெரு துருவத்தின் கடைகோடிக்கு சென்றுவிடுகிறது. அதாவது அகநிலைக் கருத்துமுதல்வாதக் கோட்பாடான இடது தீவிர தன்மையிலிருந்து புறநிலைக் கருத்துமுதல்வாதக் கோட்பாடான வலது சந்தர்ப்பவாத நிலைக்குப் பாய்ந்துச்செல்ல முயற்சிக்கிறது.
ஆய்வு நடைமுறை இரண்டுமே எதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கான நடைமுறையே அன்றி வேறல்ல. அனுபவவாதத்தில் மூழ்கி கிடக்கும் சிதறலான குழுக்கள் நிறைந்த சூழ்நிலைமைகளில் புரட்சிகர தத்துவத்தை மேலும் மேலும் பயில்வதும் பிற்போக்கு தத்துவங்களைக் களைவற்கு இடைவிடாத தொடர்ச்சியான தீர்க்கமான தத்துவப் போராட்டம் நடத்துவதும் இன்றைய முதன்மையான பணியாகும். தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள உறவு பற்றி ஆராய தவறிவிட்டது.
கண்ணோட்டம் குறித்து
'இத்திட்டத்தின் பொது கண்ணோட்டம், வரையறைகள் மற்றும் குறிப்பான திட்டம் குறித்த கண்ணோட்டம்' பற்றி விவாதிப்பதும் விவாதத்திற்கு உட்படுத்துவதுதான் இன்றைய நிலைமைகளில் மிகவும் வரவேற்கத் தக்க ஒன்றாகும். அணுகுமுறைக் குறித்தும் கண்ணோட்டம் குறித்தும் யாரும் கவலைப்படாத நிலையில் அவை குறித்து பேசுவது இவ்வறிக்கையின் சிறப்பாகும். காரணம், அணுகுமுறை மற்றும் கண்ணோட்டம் தான் தத்துவம் குறிப்பாக மார்க்சிய தத்துவத்தில் மிகவும் அடிப்படையான தொன்றாகும்.
அணுகுமுறை என்றால் என்ன? கண்ணோட்டம் என்றால் என்ன? என்பதிலிருந்து தொடங்குவோம். கண்ணோட்டம் என்பது ஒரு பொருள் குறித்த சிந்தனையின் அணுகுமுறையாகும். அணுகுமுறை என்பது ஒரு கருத்து நடைமுறைபடுத்தும் போது ஒருவர் கொண்டிருக்கும் கண்ணோட்டம் ஆகும் என்றும் புரிந்து கொள்ளலாம். இவ்விரண்டு கருத்துருக்களும் வெவ்வேறு தளத்தில் ஏறத்தாழ ஒத்த அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுகின்றன. இரண்டுமே தர்க்கவியலை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
இந்தியப்புரட்சி பேசுவோர் தேசியஇன முரண்பாட்டை அகமுரண்பாடாக கொண்டு அதை முதன்மை வாய்ந்ததாகக் கொள்கின்றனர்; ஆனால் தமிழக விடுதலை பேசுவோர் புறமுரண்பாட்டை முதன்மையாக கொள்கின்றனர். அதாவது முன்னது தேசியஇனத்திற்குள் உள்ளார்ந்துள்ள வர்க்கமுரணை முதன்மைபடுத்தவும் பின்னது தேசிய இனத்திற்கு வெளியே உள்ள இந்திய அரசு மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களை எதிரியாக்கி அவற்றோடு முரண்படவும் செய்கிறது. இந்த வகையில் தேசிய இனத்திற்கு வெளியே நிலவும் இந்திய அரசுதான் முதன்மை எதிரி என்று தீர்மானிப்பதன் மூலம் அகமுரண்பாட்டை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடுகிறது.
அகமுரண்களில் ஊன்றி நின்று புறமுரண்களை ஒழிப்பது என்ற அணுகுமுறை, புறமுரண்பாடுகள்தாம் பிரதானமானது என்பதை உணர்த்துகிறது. அகமுரண்பாட்டை இரண்டாம் பட்சமாக்கிப் புறமுரண்பாட்டை முதன்மையாக்குகிறது. இதன்மூலம் பொருள்முதல்வாதத்தைக் கைவிட நேர்கிறது. பொருள்முதல்வாதம் எப்போதுமே அகமுரண்பாட்டை முதன்மைபடுத்திப் புறமுரண்பாட்டை துணைக்கு அழைத்துக் கொள்ளும் என்பதை இவ்வறிக்கை மறந்துவிடுகிறது.
பொதுவானதிலிருந்து குறிப்பானதற்குச் செல்வது என்பது ஒற்றைவழி அணுகுமுறை ஆகும். இது இயங்கியல் அணுகுமுறை அன்று. இது இயக்க மறுப்பியல் அணுகுமுறையே அன்றி வேறல்ல. இறுதியில் இது கருத்துமுதல்வாதத்திற்கு இட்டுச் செல்லும். அதேபோல குறிப்பானதிலிருந்து பொதுவானதிற்கு செல்வதும் ஒருவழிப்பாதை யாகும். இதில் மிஞ்சுவது அனுபவ வாதமே ஆகும். பொதுவானதிலிருந்து குறிப்பானதற்கும் குறிப்பானதிலிருந்து பொதுவானதிற்கும் செல்வதுதான் இயங்கியல் அணுகுமுறையாகும். தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலான இயங்கியல் உறவுதான் இந்த அணுகுமுறைக்கு அடிப்படையானதாகும்.
சேரன்,
பதிலளிநீக்குஇவர்கள் மார்க்சியத்தை மறுத்து மார்க்சியத்தின் பெயராலேயே அறிக்கை வாசிப்ப்வர்களாக இருக்கிறார்கள். இதில் உங்களின் கருத்துரையும் தெளிவாக இல்லை.
”சாதி சமத்துவமின்மையை பெரியாரியம் பார்க்கிறது, சாதி படிநிலை சமத்துவமின்மையை அம்பேத்காரியம் பார்க்கிறது” என்று குறிப்பிட்டிருப்பதில் இயங்கியல் ரீதியில் மதிப்பிட்டிருக்கிறாதா பிறகு பார்ப்போம் ஆனால் நிச்சயம் யாரும் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் அனுகவில்லை என்பதை உறுதியாக கூறலாம். அதேபோல் முற்றிலும் மார்க்சிய நிலையிலிருந்தே அவர்கள் இருவரும் வேறுபட்டவர்கள் என்பவர்கள் என்பதை விளக்கவேண்டியிருக்கிறது. இவர்கள் யாரும் உற்பத்தி உறவுக்கும் அதன் வரலாற்று மாற்றத்திற்கும் உட்படுத்திப் பார்க்காமல் சாதியை மாறாநிலை கண்ணோட்டத்தோடே பார்க்கிறவர்கள். அதனால்தான் அதை ஒழிப்பதற்கான திட்டத்தை அவர்களால் சரிவர கூறமுடியவில்லை இல்லை திட்டமிட்டே சரியான முடிவை வந்தடையாமல் இருப்பதற்கான திசைதிருப்பல் முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.
சாதிக்கும் வருணத்திற்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்துகொண்டேலே உற்பத்தி உறவுக்கும் அதற்கான சமூக கட்டமைத்தலுக்கும் உள்ள உறவு வெளிச்சமிட்டு காட்டும். இது குறித்த டி.டி.கொசம்பி, ராம் சரன் சர்மா, திபங்கர் குப்தா ஆகியோரது பங்களிப்பும் தொடக்கமும் மிகவும் முக்கியமானது.
முழுமையிலிருந்து பகுதிக்கும், பகுதியிலிருந்து முழுமைக்கும் இயங்கியல் உறவு இருந்தாலும் தீர்மானிக்கும் முதல் உறவு என்பது முழுமையிலிருந்து பகுதியே. அதே போல் மார்க்சியம் ஒருமைவாத கண்ணோட்டத்தை வழிமொழிகிறது. பிற தத்துவங்கள் ஒருமைவாத கண்ணோட்டத்தை மறுக்கிறது. மார்க்சியவாதிகள் நிர்ணயவாதிகள், ஆனால் பிறர் எந்த நிர்ணயிப்புக்கும் ஆளாகமல் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதில் தெரிந்தோ தெரியாமலோ முன்னணியில் நிற்கிறார்கள்.