வெள்ளி, 16 ஜூலை, 2010

'தமிழர் குடியரசு முன்னணி' அறிக்கையின் கண்ணோட்டத்தைப் பற்றியும் மீதும் அணுகுமுறைப் பற்றியும் எனது கருத்துரைகள்-1

எதிரிவர்க்க‌ முகாமில் பேசப்பட்டு பரப்பட்டு வந்த 'உலகத் தமிழர் ஒற்றுமை' என்ற முழக்கம், இப்போது நமது முகாமிலும் பேசப்படுவது புதிய நிகழ்வு. 'கடந்த ஆண்டு இதே நாட்களில் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட எமது இன சொந்தங்களின் நினைவாக' வெளியிட்டதன் மூலம் இந்த அறிக்கையின் பின்னணியைச் சிறிது புரிந்துகொள்ள முடிகிறது.
அதைத் தொடர்ந்து 'அவர்களின் தமிழீழ கனவு தமிழர்களால் ஒடுக்கப்பட்ட உலக மக்களின் துணையோடு நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறோம்' என்று சூளுரைத்து இறுதியில் 'சர்வதேச அளவில் தமிழர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பை உருவாக்க அறைகூவல் விடுவதன் மூலம் இவ்வறிக்கைத் தனது அடிப்படை முரணை வெளிப்படுத்திக் கொள்கிறது.
தமிழர் என்பது கருத்தளவில் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டு உலகம் தழுவி வாழும் அனைத்து தமிழ் சாதிகள், வர்க்கங்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கும் ஒரு விரிந்த பரந்த பொருளுடையதாகும் என கூறுகிறது.
திட்டம் குறித்து மரபுரீதியாக கடைபிடித்து வந்த அணுகுமுறையை உடைத்து ஒரு புதிய கண்ணோட்டத்தில் அணுகியிருப்பது கவனிக்கத்தக்கது. உதாரணத்திற்கு இதுவரை தேசியஇனம் என்றால் ஒரு மொழி, பண்பாடு, புவியியல் பரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்திருக்கக் காணலாம். ஆனால் தமிழினம் அதன் புவியியல் பரப்பையும் தாண்டி இப்பிரச்சனையைக் கையாண்டிருப்பது வினோதமாக இருக்கிறது.
மரபுரீதியாக மார்க்சியவாதிகள் தேசிய இன விடுதலையை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் வென்றெடுக்க முனைவர். ஆனால் தமிழர்களே தேசிய சனநாயகப் புரட்சியின் முதன்மை ஆற்றலாகவும் முதுகெலும்பாகவும் உள்ளார்கள் என்ற கருத்துக்கோப்பு மரபை மீறியதாகக் காணலாம்.
அறிக்கையில் ஆங்காங்கே இந்திய பார்ப்பனீய, தரகு முதலாளிகளை எதிரியாக காண்பித்தாலும், தமிழக பார்ப்பனீய தரகு முதலாளிகளைக் குறித்து இவ்வறிக்கையால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. 'தமிழர்களுக்கோ தமிழ் தேசிய மக்களுக்கோ முதன்மை எதிரி பார்ப்பன‍ பார்ப்பனியமும் தரகு முதலாளித்துவ இந்திய தேசியமும் இந்திய அரசுமே ஒழிய'…. ஒரு வேளை இவர்களையும் உள்ளடக்கியதான தமிழ் தேசிய விடுதலையைப் பெறுவதாக இருக்கலாம்.
இந்திய அரசு, சிங்கள் பேரின வாத அரசு, ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் தமிழ் ஈழத்தில் நடத்திய தமிழ் இன படுகொலையின் விளைவாக தமிழர்க்ளின் அரசியல் செயல்பாட்டுத் தளம் சர்வதேச அளவில் அரசியல் நடவடிக்கைகளைத் திறந்துவிட்டிருக்கிறது என உலகம் தழுவி தமிழர்கள் ஒன்றிணைவதற்கான ஒரு வரலாறு அடிப்படையை முன்வைத்திருக்கிறது இந்த அறிக்கை.

சோசலிச புரட்சிக்கு உந்து சக்தி
உலகந் தழுவி பரவியிருக்கும் தமிழ் தேசிய இன மக்கள் உலக சோசலிச புரட்சிக்கு உந்து சக்தியாக திகழ்வர் என்ற கோட்பாட்டை உருவாக்கும் அளவிற்குச் செல்கிறது. பன்னாட்டு கம்யுனிச அகிலத்தின் அங்கமாகத் திகழும் விருப்பத்தையும் சாத்தியக்கூறுகளையும் தெரிவிக்கிறது. உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ளின் 'சோச‌லிச‌க் க‌ட‌மையை' உண‌ர்த்துவதன் மூலம், உலகம் முழுக்க பரந்து கிடக்கும் அனைத்து மக்களையும் தேசிய இனங்களின் அடிப்படையில் திரட்டி சோசலிசம் படைக்கலாம் போலிருக்கிறது.

'”தமிழின தற்பெருமையும் பெருமிதமும்அறிக்கை முழுவதிலும் ஆங்காங்கே பிரதிபலிக்கக் காணலாம்.
இங்கு கையாளப்பட்டிருக்கும்உலகத்தமிழர் ஒற்றுமை, “அகண்ட தமிழகம் ஆகிய கருத்தாங்கள் இதன் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது. இது ஆளும்வர்க்கத்தின் விரிவாதிக்கத் தன்மையை வெளிகாட்டுகிறது.

இது பழைய வரலாற்றை மீட்டெடுக்க முனையும் அதே வேளையில் கடந்து வந்த‌‌ வரலாற்றின் பொருளீய அம்சங்களை மறுதலிக்கச் செய்கிறது.

1 கருத்து:

  1. சேரன்,
    தேசிய இன அடிப்படையை மறுத்து அவர்கள் திட்டம் தயாரித்திருக்கலாம் என்று உங்கள் கருத்துரையிலிருந்து அறிய முடிகிறது. அதனால் தான் ஒரு மொழி பேசும் (தமிழ்) பல்வேறு தேசிய இனம் என்பதை மறுத்து எல்லோரும் ஒரு தேதிய இனமாக பார்ப்பதும் அதற்காக அகண்ட தமிழகம் பேசுவதும் உள்ளடக்கமாக இருக்கிறது. அவர்களுக்கு இனக்குழு என்பதற்கும் தேசிய இனம் என்பதற்கும் வேறுபாடு தெரியாதவர்கள் அல்லது வேண்டுமென்றே மறைத்து திசைதிருப்புவர்களாக இருக்கவேண்டுமேயன்றி வேறொன்றாக இருக்க வாய்ப்பில்லை. உங்கள் விமர்சனத்தில் அந்த அடிப்படையை விளக்கவில்லை. இதுதான் மற்ற பிரச்சனைகளில் தீர்வுகாண்பதற்கு தடையாக இருப்பது.

    பதிலளிநீக்கு