இயங்கியல் என்பதோ அல்லது இயக்கவியல் என்பதோ பொருத்தமான வார்த்தையாக இருக்க வியலாது. ஆங்கிலத்தில் DIALECTICS என்பதற்கு உள்ள பொருள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருக்கவில்லை.
இயங்கியல் அணுகுமுறைகளில் முக்கியமானவை பின்வருமாறு:
1. அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்க்கப்படவேண்டும்..
2. அனைத்துப் புள்ளிகளையும் இணைக்கும் ஊடிழையை பிடித்துக் கொள்ளவேண்டும்.
3. அரசியல் எதார்த்தம் ஆகியவற்றிலிருந்து விசயத்தைப் பார்க்க வேண்டும். இன்றைய யதார்த்தத்திலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும்.
தோன்றுவதெல்லாம் உண்மையா? அதுதான் எதார்த்தமா என்பது அடிப்படையான கேள்வியாகும். தோற்றத்தின் சாரப்பொருளை ஆய்வு செய்வதும் தோற்றத்திற்கும் சாரத்திற்கும் உள்ள உறவு குறித்து ஆய்வு செய்வதுதான் இயங்கியல் ஆகும். யாதொன்றையும் அதன் புறத்தோற்றமாகவன்றி உள்ளீட்டை ஆராய்தலின் மூலம் ஆழ அறியும் வழிமுறையை மார்க்சிய விஞ்ஞானம் தந்திருக்கிறது.
மாற்றம் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறவில்லை. சுழற்சி முறையில் நடப்பது மில்லை. காரண காரிய விளைவுகளின் அடிப்படையில் நடப்பது மில்லை. எந்திரத்தனமாக புரிந்துக் கொள்ளக்கூடாது.
சமூகம் கட்டம் கட்டமாக வளர்ச்சிபெறும் என்பதை எந்திரத் தனமாக புரிந்து கொள்வது கூடாது. அதற்கு மாறாக இயங்கியல் ரீதியாக புரிந்து கொள்ளப்படவேண்டும். மேலும் ஒரு கட்டம் முழுமை யடைந்து பிறகு அடுத்தகட்டம் ஆரம்பமாகும் என்பது எந்திரகதியான புரிதலே ஆகும்.
சமூக மாற்றம் என்பது எதார்த்ததின் நிகழ்வுபோக்குகள் நமது அரசியல் சித்தம் ஆகியவற்றின் மூலம் இயங்கியல் விதிகள் செயல்பட்டு வந்துள்ளது. இடம் காலம் சார்ந்து அவற்றிற்கு உட்பட்டு நிகழ்வதாகும்.
அரசியல் சித்தம் அல்லது சூழல் தான் குறிப்பிட்ட இயங்கியல் போக்கைத் தீர்மானிக்கச் செய்கிறது. மார்க்சிய மரபில் இயங்கியல் என்பது அரசியல் சித்தம் என்பதிலிருந்து தொடங்கிற்று. இன்றைய அரசியல் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதை மாற்றுகின்ற அரசியல் உத்திகளை வகுப்பதே.
மார்க்சு சமூகத்தை ஆய்வு செய்யும் போது அளவு மற்றும் பண்பு ஆகிய மாற்றங்களினூடாக வைத்துப்பார்த்தார். எங்கல்ஸ் அதை அறிவியல் விதிகளின் அடிப்படையில் விவரிக்க முயற்சித்தார். அதற்கான நெருக்கடி அவருக்கு இருந்தது என்று புரிந்து கொள்ளவேண்டும்.
ஆனால் லெனின் அறிவியல் விதிகளைச் சார்ந்திருப்பதை விடவும் ஹெகலை அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அதற்கான நிர்பந்தம் இருந்தது. மாவோவைப் பொறுத்தவரை சீன தத்துவ மரபிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியிருந்ததது.
இன்றைய முதலாளித்துவ சமூகத்திலிருந்து மூலதனத் திரட்சியிலிருந்து முந்தைய சமூகங்களின் வரலாற்றை ஆய்வு செய்தார். ஆனால் எல்லா சமூகங்களும் முதலாளித்துவத்திற்கு வந்து சேரும் என்றோ அல்லது முதலாளித்துவத்தின் வழியாக கடந்து செல்லும் என்றோ மார்க்சு கூறவில்லை. (எனது ஐயப்பாடு என்னவென்றால் இன்றைய இந்திய முதலாளித்துவ வளர்ச்சியிலிருந்து இந்திய மூலதன திரட்டலிருந்து முந்தைய இந்திய சமூகங்களைப் புரிந்து கொள்ளமுடியுமா என்பதாகும்.)
மனித சமூக வரலாற்றின் வளர்ச்சிப் படிகள் குறிப்பிட்ட சில விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு கட்டமாக வளர்ச்சி பெற்று வந்துள்ளமையைத் துல்லியமாக எடுத்து விளக்கிய அவர் நிகழ்காலப் போக்கின் ஊடே எதிர் காலத்தின் வளர் திசையையும் சுட்டிக் காட்டினார்.
மார்க்சின் விஞ்ஞான சோசலிசம் சாத்தியமா? அதற்கு முதலாளித்துவம் முன்நிபந்தனையாக இருக்க தேவையில்லையா?
உற்பத்தி சாதனங்களுக்கு வர்க்கத்தன்மை இருக்கும் அதே நேரத்தில் அதற்கு ஒரு சமூகத் தன்மை உள்ளதையும் மறுக்கவியலாது.
பண்புமாற்றத்தின் பின்னர் பழையதின் மிச்ச சொச்சங்கள் இருக்கவே செய்யும் என்பது தான் இயங்கியல் ஆகும்.
தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்த பார்வை என்ன? திட்டமிட்ட போராட்டங்கள் குறித்த பார்வை என்ன? இரண்டின் மீது மார்க்சியர் களிடையே வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருந்தன.
தோழர் பாலகோபால் ஆந்திர மாநிலத்தின் சமூக பண்பாட்டு பொருளாதார ஆய்வு குறிப்பிடத்தக்கது. அவருக்கு பின் யாரும் அந்த போக்கை வளர்த்தெடுக்கவில்லை.அவரது ஆய்வின் சுருக்கம் முதன்மை முரண்பாடு, எப்போதும் சமூக மாற்றத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதாகும்.
கோசாம்பி சாதியம் வர்க்கம் இரண்டிற்கு மிடையிலான உறவு குறித்து ஆய்வு செய்தார். அவர் மத்திய மாகாணத்தில் இருந்ததால் ஆரிய க்ருத்தாக்க தாக்கத்தையோ அல்லது திராவிட கருத்தாக்க தாக்கத்தையோ பெற்றிருக்கவில்லை என்பது அவருக்கு சாதகமான அம்சங்கள் ஆகும்.
1940 களின் திராவிட இயக்கம் இந்திய பொது உடைமையர்களை இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் குறிப்பான அம்சங்கள் குறித்து தத்துவார்த்த கருத்தியல்கள் உருவாக்க வலியுறுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜனசக்தி, குடியரசு ஆகிய இதழ்களுக்கு இடையே நடந்த விவாதங்கள் குறிப்பிடத்தக்கது.
அறிவாராய்ச்சியிலின் அடிப்படையில் பார்த்தால் அனைத்து விடயங்களிலும் பரவியிருப்பது பிராமினிய கருத்தியல்களே ஆகும்.
1. உழைப்புக்கு சம்பந்தபடாத அறிவு..
2. மேதாவிதனமான அணுகுமுறை
3.மற்றவர்களை தாழ்ந்ததாக அணுகுவது
எதிரெதிர் முரண்களுக்கிடையிலான உறவு குறித்துப் பேசுவது இயங்கியல் ஆகும் என்று மார்க்சியம் கூறும். இத்தகைய எதிர்மறை கூறுகளில் இன்றைய எதார்த்தம் கோரும் நிலைமைகளை ஆராய வேண்டும். அவை எத்தகையதை அவசியமாக்குகிறதோ அதன்படி செயலாற்ற வேண்டும்.
சுற்றுசூழல் பிரச்சனையில் உற்பத்தி உறவுகளை மாற்றியமைத்தால் மட்டும் போதாது உற்பத்தி சக்திகளையும் கருவிகளையும் மாற்றியமைப்பதில் ஈடுபடவேண்டும் என்ற ட்ராக்சிய விவாதங்கள் கவனத்தில் கொள்ளத் தக்கன.
அறிவியல் மற்றும் தத்துவம் குறித்த உறவுகள் விவாதங்கள் தொடர்ந்தன.
(சென்னை அரசியல் பள்ளியின் இயங்கியல் குறித்த வகுப்பு --- வ.கீதா அவர்கள் இயங்கியலின் பல்வேறு கூறுகளை விளக்க அதன்மீது பலரும் விவாதத்தில் ஈடுபட்டனர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக