சனி, 20 நவம்பர், 2010

இயங்கியல் வடிவங்கள் - 2

செர்ம‌ன் இயங்கியல்

இயங்கியலின் இரண்டாவது வடிவம் என்பது மூலச்சிறப்புள்ள செர்மன் மெய்யியலாகும். இயங்கியலின் இந்த‌ வடிவம், கான்ட் முதல் ஹெகல் வரையிலான மூலச்சிறப்புள்ள செர்மன் மெய்யியலாகும்.




கான்ட் அறிவின் முரண்பாடுகளை வெளிக்கொணர முடியுமே தவிர தீர்க்க வியலாது என கூறுவார். கான்ட் புலன் கடந்த இயங்கியலைப் பற்றிப் பேசுவார். ஹெகல் அதை உலகப் பொருள்களுக்கும் விரிவுப்படுத்துவார்.


பிட்ச் இயங்கியலை உலகை விவரிப்பதற்கு பயன்படுத்துவார். அவரது இயங்கியல் மூன்று வளர்ச்சிக் கட்டங்களைக் கொண்டது. கருத்துரை, எதிர்கருத்துரை, இணைவாக்கம் ஆகியன வாகும். இதில் எதிர்கருத்துரை என்பது கருத்துரைக்கு எதிர்மறையானது. இணைவாக்கம் என்பது மேற்கண்ட இரு கூறுகளை இணைத்துக் கொண்டு உருவாகின்றது.


ஷெல்லிங் இயங்கியலின் மூன்று கட்ட வளர்ச்சிப் போக்குகளை விவரிப்பார். உலக வளர்ச்சிப் போக்கு மூன்று கட்டங்களைக் கொண்டது என்பார்.. முதலாவதாக செயல், இரண்டாவதாக எதிர் செயல் , மூன்றாவதாக இணைவாக்க செயல். செயல், எதிர்ச்செயல் ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்றாவதாக இணைவாக்கசெயல் உருவாகின்றது என கூறுவார். ஹெகல் மேற்கண்ட இருவரின் இயங்கியல் கூறுகளில் உள்ள குறைகளை விமரிசித்து முழுமையான உண்மையான இயங்கியலை வளர்தெடுப்பார்.



ஹெகலைப் பொருத்தவரை இயங்கியல் என்பது எதிர்மறைகளை உட்கிரகித்துக் கொண்ட இணைவாகும். ஹெகலின் இயக்கவியல் முரண்பாட்டு விதிகளை தன் அடிப்படையாக கொண்டுள்ளது. என்றாலும் ஹெகலின் முரண்பாட்டு விதிக்கும் எனைய அவருக்கு முந்தைய முரண்பாட்டு விதிக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உள.


ஹெகலின் முந்தைய முரண்பாட்டு விதி என்பது எதிர்மறைகளை முழுமையாக தனித்தனியானதாகவும், ஒன்றுக்கு ஒன்று தவிர்த்து இருப்பதாகக் காணப்பட்டது. அவை முரண்பட்ட எதிர்மறைகளின் ஒற்றுமையை அங்கீகரிக்கவில்லை. மாறாக ஹெகல் முரண்பாட்டை எதிர்மறைகளின் தீர்மானகரமான ஒற்றுமை என்று வரையறுப்பார். வேற்றுமைகளின் ஒற்றுமையை காண்பார்.


ஹெகலின் இயக்கவியல் முறை என்பது பொருள்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகக் கூறுகின்றது. எல்லாப் பொருள்களுமே தமக்குள் முரண்பாடுகளைக் கொண்டுள்ளன எனவும் கூறுகிறது. இந்த உள் முரண்பாடுகள்தான் எல்லா இயக்கத்திற்கும் எல்லா உயிர்த்திறனுக்கும் அடிப்படையாகும். ஒவ்வொன்றும் தனக்குள்ளேயே முரண்பாடு கொண்டிருப்பதனால் தான் அது இயங்குகிறது என்று ஹெகலியம் கூறுகிறது. ஆனால் இது மனித உணர்வின் வளர்ச்சியிலிருந்து எழுவதாக ஹெகல் வரையறுத்தார். வரலாறும் நிகழ்வுகளும் கலைகளும் உலகில் நிகழ்வதுபோல் தோன்றினாலும் இவை மனித மனத்தின் படைப்புக்கள் என்றார்.


ஹெகலின் கருத்துப்படி இயக்கவியல் என்பது கருத்துருவத்தின் சுயவளர்ச்சியாகும். ஆன்மா என்பது வரலாற்றின் எல்லா கட்டங்களின் ஊடாகவும் தனக்குள் வளர்ச்சி அடைகிறது. பின்னர் அது இயற்கையாக மாறித் தன்னை அந்நியமாக்கிக் கொள்கிறது. பின்னர் தன் உணர்வாக மீண்டும் மனிதனுக்குள் அது வருகிறது. இயற்கையியலும் வரலாறியலிலும் நடைபெறும் இயக்கவியல் வளர்ச்சி கருத்துருவத்தின் தன்னியக்கச் செயலாக உள்ளது என்று ஏங்கெல்ஸ் கூறுவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


உலகத்தில் உள்ள அனைத்துமே நிரந்தரமாக மாறிக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து நிகழும் நிகழ்ச்சிப் போக்குகள், தொடர்புகள், உறவுகள் மூலம்தான் உலகம் முழுமை செய்யப்படுகின்றதே அன்றி உலகம் முழுமை செய்யப்பட்ட பொருட் சேர்க்கையின் நிரந்தர வடிவமல்ல என அது சுட்டிக்காட்டியது. சிந்தனையில் மட்டுமின்றி உலகத்தை அறிகின்ற நிகழ்ச்சிப் போக்குகள் முழுவதிலும் இந்த சிக்கல் மிகுந்த முரண்பாடான தன்மைகள் காணப்படுவதை ஹெகலியம் முன்வைத்தது.


உலகத்தின் அனைத்துப் பொருட்களிலும், அவற்றின் இயக்கத்திலும் மற்றும் எல்லா நிகழ்ச்சிப் போக்குகளிலும் வேராக இருப்பது முரண்பாடு ஆகும். முரண்பாடின்றி வாழ்வில்லை, வளர்ச்சியில்லை. ஒவ்வொன்றும் மாற்றமடைந்து அவற்றின் மறுப்புக்களாகின்றன என ஹெகலின் இயக்கவியல் கூறுகின்றது.


ஹெகலின் மையக்கருத்து ஹெராக்ளிட்டஸின் கருத்திற்குப் பெரிதும் ஒத்துள்ளதைப் பார்க்கலாம். ஒவ்வொன்றும் இருந்துகொண்டும் அதே நேரத்தில் இல்லாமலும் இருக்கின்றது. ஏனெனில் ஒவ்வொன்றும் நிலைபாடற்றதாய் இருக்கின்றது. இடையறாது மாறுவதாகவும் மறைந்து செல்வதாகவும் இருக்கிறது. இக்கருத்தோட்டம் ஒட்டுமொத்தமான பொதுத் தன்மையைச் சரியாகத் தெரிவித்த போதிலும் இந்தத் தோற்றப்பாட்டுச் சித்திரத்தில் அடங்கிய விவரங்களை விளக்குவதற்கு இது போதாது என் ஏங்கெல்ஸ் கூறுகிறார்.


உண்மைநிலை என்றால் பொருளின் இருப்பு, இயக்கம், மாற்றம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். சமூக எதார்த்தம் என்பது சமூக இருப்பு, இயக்கம், மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகத் தான் புரிந்து கொள்ளவேண்டும். பொருளின் இருப்பையோ அல்லது சமூக இருப்பையோ மட்டும் அறிந்தால் போதாது, அத்தோடு பொருளின் இயக்கம், மாற்றம் அல்லது சமூக இயக்கம், மாற்றம் ஆகியவற்றையும் ஒருங்கிணைந்த வகையில் ஆராய வேண்டும். அதாவது எதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு மாற்றத்தின் படிமுறைப் போக்கு அல்லது மாற்றத்தின் தத்துவம் அறியப்படவேண்டும். முரண்பாடுகள் தமக்குள் ஒரு தீர்வைக் காணும் வரை இயங்குகின்றன. அது ஒரு புதிய சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. இதனை ஹெகல் அறிவுரீதியான மாற்றம் என்று கூறுகிறார். இந்த முழுப்படிமுறையும் ஹெகலினால் இயக்கவியல் படிமுறைப்போக்கு என்று கூறப்படுகிறது.


தலைகீழான முறையில் வைக்கப்பட்டிருந்த இயங்கியல் முறையை நேராக்கியும் அதன் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்ததிலும் அந்த முறையினை விஞ்ஞானபூர்வமான முறையில் அரசியல் பொருளாதாரத்தின் உண்மைத் தகவல்களுக்குப் பிரயோகித்ததிலும் முதல்வராகத் திகழ்ந்தார் என்னும் பெருமை மார்க்சையே சார்ந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக