இயக்கவியல் பொருள்முதல்வாதம்
இயற்கையிலுள்ள எல்லாவிதமான பொருட்களின் இயக்கத்தையும், பரஸ்பர தொடர்புகளையும் புரிந்து கொள்வதையே இயங்கியல் கோட்பாடு முன்னிறுத்துகின்றது. ஒவ்வொரு பொருளினதும் இயக்கம், வளர்ச்சி போன்றவற்றை விவாதித்து தர்க்கத்தின் மூலம் அதன் சாரம்சமான உண்மைகளைத் தேடிக்கொள்வதை இயங்கியல் வற்புறுத்துகிறது. உண்மையை அறிவதற்கான ஓர் அணுகுமுறையை இயங்கியல் நமக்கு அளிக்கின்றது.
இயற்கை, உயிரினங்கள், சமூக வாழ்வு அனைத்துமே எப்போதும் இயங்கிக் கொண்டும், மாற்றமடைந்து கொண்டும் இருக்கின்றன. இவ்வியக்கப் போக்கு என்பது ஒவ்வொரு பொருட்களிலும் அடங்கி இருக்கும் முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட எதிர் நிலை சக்திகளுக்கிடையிலான போராட்டத்தின் மூலமே நடைபெறுகின்றது. இம் முரண்பாடும் போராட்டமும் எங்கும் நிறைந்திருத்கின்றன. இதன் காரணமாகவே இயக்கம் நடைபெறுவதுடன் வளர்ச்சி, மாற்றம், பழையன சிதைந்து புதியன தோன்றுதல் என்னும் தொடர் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு முரண்பட்ட சக்திகளிடயே போராட்டமும் அதே வேளையில் அவற்றிடையே ஒற்றுமையும் நிலவச் செய்வதையும் நாம் காணலாம். இம் முரண்பட்ட எதிர் நிலை சக்திகள் ஒன்றை ஒன்று நிராகரித்துச் செல்லாமல் உடனிருந்தே தமது போராட்டத்தை நடத்தி வருவதையும் காண முடியும். ஒரு பொருளின் இயக்கத்திற்கும், வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் அதற்குள் அடங்கியுள்ள எதிர் நிலை சக்திகளின் உள் முரண்பாடுகளும் போராட்டமும் தான் அடிப்படையான காரணமாக இருக்கின்றன. அதேவேளையில் வெளிப்புறத் தாக்கத்தையும் புற நிலை முரண்பாட்டையும் நாம் நிராகரிக்கமுடியாது.
முரண்பட்ட எதிர்நிலை சக்திகளின் போராட்டம் என்பது முழுமையானதாகவும் ஒற்றுமை என்பது நிபந்தனைக்குட்பட்டதாகவும் விளங்கும். அதே வேளையில் எந்த ஒரு பொருளும் ஏனைய பொருட்களுடன் பரஸ்பரத் தொடர்புடையதாகவே விளங்கும் என்ற உண்மையை அறியவேண்டும். அத்தகைய தொடர்பு இன்றி எந்தப் பொருளும் அதன் இயக்கத்தையோ அல்லது வளர்ச்சி மாற்றத்தையோ பெற்றுக் கொள்ள முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இயங்கியலின் மற்றொரு விதி தனது இயக்கப்போக்கில் அளவு மாற்றம் குணாம்ச மாற்றமாக மாறும் தன்மையாகும். எதிர்நிலைகளின் போராட்டத்தில் இயக்கம் ஏற்படும் போது அளவில் மாற்றம் ஏற்படுகிறது. அத்தகைய அளவு மாற்றம் அதன் வளர்ச்சிப்போக்கில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்ததும் அளவு, குணாம்சமாக மாற்றமடைந்து புதியவற்றை தோற்றுகின்றன. சான்றாக முட்டை அடைகாத்தலை கூறலாம். இருபத்தியொரு நாட்களுக்கு பின்னர் முட்டை குஞ்சாக மாற்றம் பெறுவது இந்த விதியின் அடிப்படையிலேயேதான் என்பதை பலரும் அற்வோம். அதேபோன்று நீரைச் சூடாக்கும் போது குறிப்பிட்ட நேரத்தின் பின் நீராவியாகும் தன்மை அளவு குணாம்சமாக மாறுவதன் மற்றுமொரு சான்றாகும்.
இவ்வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் பழைய நிலை மறுக்கப்பட்டு புதிய நிலை தோற்றுவிக்கப்படுகிறது. அடுத்த கட்டத்திலும் அதன் பழைய நிலை மறுக்கப்பட்டு புதியநிலை தோற்றம் பெறுகிறது. ஆனால் அவற்றுக்கிடையிலான இடைத் தொடர்பு முற்றாக அறுபடுவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றும் போது பழைய நிலையை விட மேம்பட்டதாகவே புதிய நிலை உருவாக்கப்படுகிறது. இதைத்தான் நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்று கூறுவர். இந்த இயக்கப்போக்கில் புதிய வளர்ச்சி என்பது ஏற்படுகின்றது. இதுவும் இயங்கியல் போக்கின் ஓர் அம்சமாகும்.
இயக்கவியலை அனைத்து பரிணாமங்களிலும் வளர்த்தெடுத்தவர் ஹெகல் என்று ஏற்கன்வே பார்த்தோம். ஹெகலின் இயக்கவியலானது மனித வரலாற்றின் வளர்ச்சியை விவரிப்பதாக அமைந்தது. அவர் உண்மை என்பதை வரலாற்றின் விளைபொருளாகப் பார்த்தார். அது பல்வகையான இயக்கங்களின் வழி கடக்கின்றது. தவறு என்ற வழியாகவும்கூட உண்மை என்பதன் வளர்ச்சியைக் காணமுடியும் என்றார். வரலாற்றை இவ்வாறு உணர்வின் விளைபொருளாக விளக்குவதை மார்க்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. சமூகத்தில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக சமூக வரலாறு வளர்வதாக மார்க்ஸ் கண்டறிந்தார்.
இவ்வாறு இயங்கியலையும் பொருள் முதல் வாதத்தையும் ஒன்றிணைத்து முற்றிலும் விஞ்ஞான அடிப்படை கொண்ட தத்துவ நோக்கினை உருவாக்கிக் கொண்ட மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் அதன் ஊடே மனித சமூக வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டனர். இவ்வாய்வுக்கு இயங்கியல் பொருள் முதல்வாத அடிப்படை விதிகளையே அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
அதாவது இயற்கையின் போக்கை தீர்மானிப்பதில் பொருள்தான் அடிப்படை என்பது தான் மார்க்சியத்தின் இயங்கியல் பொருள்முதல் வாதத்திற்கும் ஹெகலின் இயங்கியல் கருத்துமுதல் வாதத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஆகும்.
மார்க்சிய இயக்கவியல் மூன்று அடிப்படை விதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவை முதன் முதலில் கிரேக்க தத்துவாதிகளால் கண்டறியப்பட்டு ஹெகல் என்பரால் தொகுக்கப்பட்டது. இந்த மூன்று விதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் மார்க்சிய இயங்கியல் மார்க்சாலும் ஏங்கல்ஸாலும் உருவாக்கப்பட்டது. அது, அன்றைக்கு எழுந்த இயற்கை மற்றும் சமுதாயம் பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கு பதிலளித்தது.
மனித சமூக வரலாற்றின் வளர்ச்சிப் படிகள் குறிப்பிட்ட சில விதிகளுக்கு உட்பட்டு வளர்ச்சி பெற்று வந்துள்ளமையைத் துல்லியமாக எடுத்துகாட்டி விளக்கிய அவர்கள் நிகழ்காலப் போக்கின் ஊடே எதிர் காலத்தின் வளர் திசையையும் சுட்டிக் காட்டினர்.
இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற சொல்லை முதன்முதலில் 1887 ஆம் ஆண்டு கண்டறிந்து பயன்படுத்தியவர் ஜோசப் டயட்ஜென் என்பவர் ஆவர். அதே ஆண்டில் ‘பிரடெரிக் ஏங்கல்ஸ்' என்ற நூலில் காட்ஸ்கி என்பவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதைக் காணமுடியும். பின்னர் இரசிய சோசலியத்தின் தந்தை என்றழைக்கப்படும் பிளக்கனெவ் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்.பின்னர்தான் மார்க்சியர் எல்லோராலும் இந்தச் சொல்லாடல் பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.
இயக்கவியல் பொருள்முதல்வாதம் தான் மார்ச்சியத்தின் தத்துவ அடிப்படையாகும். மார்க்ஸ் தனது தத்துவத்தை இந்தப் பெயரைக் கொண்டு அழைக்கவில்லை என்றாலும் மார்க்சியம் என்பது இயக்கவியல் மற்றும் பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டின் கூட்டிணைவாகத் தான் புரிந்துக்கொள்ளப்படுகின்றது.
நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நமது சிந்தனைகள் இந்த உலகத்தோடு எத்தகைய உறவைக் கொண்டுள்ளன? நமது சிந்தனை எதார்த்த உலகை அறிந்துணரும் திறன் கொண்டதா? எதார்த்தமான உலகத்தைப் பற்றிய நமது கருத்துக்களிலும் எண்ணங்களிலும் எதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்க நம்மால் முடிகிறதா? இது போன்ற அறிவாராய்ச்சியியல் கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றது.
உண்மையை அறிவது முதல் கொண்டு அதை மாற்றுவது வரையிலான அனைத்து வளர்ச்சிப் போக்குகளிலும் ஊடுருவிப் பாய்ந்து செல்லும் திறனுடையது இயக்கவியல் ஆகும். இயங்கவியல் தத்துவத்தின் அனைத்துவிதமான போக்குகளுடனும் செயலாற்றிவருகின்றது. அனைத்து விதமான தத்துவ கூறுகள் எழுப்பும் பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணும் ஒரு கண்ணோட்டத்தை இயக்கவியல் வழங்குகிறது.
துணையாக நின்ற நூல்கள்
1. மனிதரும் சமூக வாழ்வும் (சமூக வரலாற்றுக் குறிப்புகள்), சி.கா.செந்திவேல்
2. டூரிங்கிற்கு மறுப்பு, பி. ஏங்கெல்ஸ்,
3. மெய்யியல் – சிவகுமாரன்
4. மெய்யியல்:கிரேக்க மெய்யியல், முதல் தற்காலம் வரை, 2006,
எம்.எஸ். எம். அனஸ்
5. லுத்விக் ஃபாயர்பாக்கும் பாரம்பரிய ஜெர்மன் தத்துவத்தின் முடிவும், (பிரடெரிக் ஏங்கெல்ஸ்)
இவற்றையும் படிக்க
இயங்கியல் வடிவங்கள் - 1
இயங்கியல் வடிவங்கள் - 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக