வெள்ளி, 12 நவம்பர், 2010

இயங்கியல் வடிவங்கள் - 1

கிரேக்க இயங்கியல்

ஹெராக்ளிட்டஸ் இயங்கியலின் தந்தை என்று போற்றப்படுபவர். அவரது கருத்துப்படி sஉலகம் படைக்கப்படுவதற்கும், அழிவதற்குமான யுகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் உலகம் படைக்கப்பட்டு தீயால் அழிந்து விடுகின்றது.



உலகம் எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு பொருளும் விளக்கொளியைப் போல ஒவொரு வினாடியும் அழிந்தும் உண்டாகிக் கொண்டும் இருக்கின்றது. ஸ்திரத்தன்மை என்பது வெறும் பிரமையேயாகும். பிரமையில் உருவான அந்த ஸ்திரத்தன்மை மாற்றத்தின் வேகத்திலும் தனக்கு முந்தைய பொருளைப் போலவே உண்டாகும் பொருளினாலும் ஏற்படுகின்றது என்று கூறினார் ஹெராக்ளிட்டஸ்.

நீ ஒரே ஆற்று வெள்ளத்தில் இரண்டு தடவை குளிக்க முடியாது. ஏனெனில் ஆற்று நீர் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். உலகத்தின் தோற்றமே அதன் அழிவாகும். உலகத்தின் அழிவே அதன் தோற்றமாகும். ஸ்திரமான குணங்களுடைய எந்த பொருளுமே இல்லை. இசையின் ஏற்ற இறக்கத்தாலே அதன் எதிர்மறைகளின் இணைப்பாலேயே அது முழுமை பெறுகின்றது.'

எதிர்மறைகளின் போராட்டத்திலேயே உலகம் இயங்குகிறது. போர் எல்லாவற்றின் தந்தையும் அரசனும் ஆகும். போரில்லாவிட்டால் உலகம் அழிந்துவிடும். அது இயங்காமல் செத்துவிடும் என்றார் ஹெராக்ளிட்டஸ்.


இந்த விதி கடவுளர்களாலோ மனிதர்களாலோ உண்டாக்கப் பட்டதல்ல. இது எப்போதுமே இருந்து வந்தது.வருங்காலத்திலும், அப்படியே இருக்கும். நிரந்தர ஒரு உயிருள்ள தீயாக ஒரு குறிப்பிட்ட அளவின் படி எரிந்தும் அணைந்தும் கொண்டிருக்கும். இவ்வாறு ஹெராக்ளிட்டஸ் தனக்கு தெரியாமலேயே உலகத்தின் மகத்தான புரட்சிகர தத்துவமான ' இயக்கவியல் பொருள்' முதல்வாதத்தின் தந்தையானார். இவர் தொடர்ந்து கிரேக்க மெய்யியலார்கள் பலரும் ஒரு இய‌ங்கிய‌ல் ம‌ர‌பைத் தொட‌ங்கி வைத்த‌ன‌ர்.


இவ்வாறு தொடங்கிவைத்த கிரேக்க மெய்யியலே இயங்கியலின் முதலாவது வடிவம் ஆகும். இங்கு இயங்கியல் ரீதியான சிந்தனைமுறையானது மிகவும் ஆரம்பநிலையில் இருந்தது. புற உலகைப் பகுதி பகுதியாகவும் துண்டுதுண்டாகவும் தனிதனியாகவும் புரிந்துகொண்டிருந்தனர். அதற்கு மேல் அவர்களால் அடுத்த வளர்ச்சியை எட்டமுடியவில்லை. ஒரு பகுதியை புரிந்து கொள்வதிலிருந்து முழுமையையும் புரிந்து கொள்ள முன்னேறுவதையும், விஷயங்களின் பொதுவான பரஸ்பரத் தொடர்புகள் பற்றியும் ஒரு நுண்ணறிவு பெற முன்னேறுவதற்கான நிலைமையும் அறிகுறிகளும் அன்று இல்லாமல் இருந்தது.


கிரேக்கர்கள் இயற்கையை பகுத்து ஆய்வு செய்து பார்ப்பதில் இன்னும் போதியளவு முன்னேறாத காரணத்தால் அவர்கள் இன்னும் இயற்கையை பொதுப்படையாகவே பார்த்தனர். இயற்கைப் புலப்பாட்டின் சர்வ வியாபகமான தொடர்பு அதன் பிரத்யேக அம்சங்களில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. கிரேக்கர்களை பொறுத்தவரை இது நேரடியான சிந்தனை ஆர்வத்தின் விளைவாகவே இருந்தது. இங்கு தான் கிரேக்க மெய்யியலின் பற்றாக்குறை காணக்கிடக்கிறது என ஏங்கல்ஸ் கூறுவார்.


கிரேக்கச் சிந்தனைகளில் இரு நுட்பமான போக்குகள் அமைந்திருந்ததைக் காணலாம். முதலாவது சாக்ரடீசுக்கு முற்பட்டது; இரண்டாவது சாக்ரடீசுக்கு பிற்பட்டது. முதலாவது காலப்பகுதியில் அமைந்த சிந்தனைகள் பெரிதும் விஞ்ஞான அடிப்ப்டைகள் சார்ந்ததாகவும் குறிப்பாக ஒருவகை இயக்கவாதப் போக்கினைக் கொண்ட பிரபஞ்ச விளக்கத்தினை அளித்ததாகவும் அமைந்திருக்கக் காணலாம். இந்த வகையில் உலகிற்கான அடிப்படைக்கூறுகளாக‌ நீர், காற்று, நெருப்பு, அணு போன்றவைதான் என்று தமது தத்துவ கூறுகளை முன்வைத்து விஞ்ஞானத்திற்கான அடித்தளத்தினை அமைத்து காட்டியது கிரேக்க சிந்தனைகள் எனலாம். இரண்டாவது காலப் பகுதியில் விஞ்ஞான நிலைத் தன்மையுடன் சமயஞ் சார்ந்த, ஒழுக்கவியல் சார்ந்த நிலைகளையும் இணைந்ததாகவும் இருக்கக் காணலாம்.

அவர்களின் ஆராய்ச்சியானது ஓர் அடிப்படையைத் தேடுவதாக இருந்தது. அதாவது உண்மை நிலையை அல்லது மூல காரணத்தைத் தேடுவதாக இருந்தது. உண்மைநிலை என்பதின் அடிப்படை இயல்பு என்ன? அது எதனால் ஆனது? பூரண-முழுமையினாலா? அல்லது பிளவுபடா மூலாதார துகள்களாலா?. உண்மை நிலைக் குறித்த இந்த வாதம் இயங்கியலின் பரிமாணத்திலிருந்து எழுந்ததாகும். இது மெய்யியலின் முக்கியமான பிரச்சனைககளில் ஒன்று.

தேல்ஸ் என்பவர் உண்மைநிலையின் மூலாதாரம் தண்ணீர் என்றார். அனாக்ஸிமெனஸ் காற்று என்று கூறினார். ஹெராகிளடஸ் நெருப்பு என்று சொன்னார்.ஆனால் டெமாகிரடஸ் உண்மை நிலையை பிளவுபடா மூலாதார துகள் என்று கூறினார்.

கிரேக்க மெய்யியலில் டெமாகிரடஸை அணுவாதத்தின் தொடக்கப் புள்ளி எனலாம். இப்பிரபஞ்சம் பிளவுபடா மூலாதார துகள்கலான அணுக்களால் ஆனது என்றும் அனைத்து பருப்பொருட்களும் அணுக்கள் சூனியத்தில் சிதறி மாறுபடுவதற்கு ஏற்ப மாறுபடுகின்றன என்றும் கூறினார். அணுக்கள் எண்ண‌ற்ற அளவுகளில், வடிவங்களில் உள்ளன என்றாலும் அவற்றின் ஆதார இயல்பு ஒன்றே என்றும் அணுக்களும், சூனியமும் தொடக்கமும், முடிவும் இன்றி போய்க்கொண்டே இருப்பவை என்றும் டெமாகிரடஸ் கூறினார்.

மற்றொருபுரம் பரமெனிடிஸ் என்பவர் சூனியமும், மாற்றமும் ஒருவித மாயை என்றும் இப்பிரபஞ்சம் அனைத்தும் உள்ளடக்கப்பட்ட ஒரு மாற்றமில்லா முழுமையினால் ஆனது என்றும் கூறி வந்தார். இவர்களுக்கு பின்னரும் இந்த வாதம் தொடர்ந்தது.

முதல் மெய்யியலாளர்களில் அனேகர் எல்லாப் பொருட்களினதும் மூல அடிப்படை, சடப்பொருள் தன்மைக் கொண்டது என்பதையே வலியுறுத்தினர். அவை உருவாவதும் பின்னர் ஒன்று கலப்பதும் என்ற இயற்கைச் செயற்பாட்டின் மூலமாக இருப்பது இதுவே. இதை அவர்கள் மூலக்கூறுகள் என்று அழைத்தனர் என அரிஸ்டாட்டில் கூறுகிறார்.

கிரேக்கத்தில் மெய்யியல் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்தே மெய்யியலுக்கென்ற பிரத்தியேகமான விசாரணை, சிந்தனைமுறை என்பன அதன் பிரதான பண்புகளாகிவிட்டன. ஒவ்வொன்றின் அடிப்படை உண்மைகளை விளக்குவதற்கு நியாயித்தல், பகுப்பாய்வு, கருத்துருவான கோட்பாடு, இலட்சியங்கள் என்பவற்றினூடாக தமது விளக்கங்களை அவர்கள் முன்வைத்தனர்.

முதல் மெய்யியலாளர்கள் பெளதீகம் என்பதை பொருட்களின் இயல்பு என்பதாகவே கொண்டனர். அதற்கு முன்னர் இருந்த புராணவியல் வகையான தீர்வுகள் அகற்றப்பட்டு அதன் இடத்தில் பகுத்தறிவும் அளவையியலும் வழங்கப்பட்டன.

உலகத்தைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் பின்னாளில் உருவான அணுகுமுறைகள் கிரேக்கத் மெய்யியலின் பல்விதமான வடிவங்களில் கரு உருவில், முளைப்பருவத்தில் அடங்கியிருந்தன என்பதாக ஏங்கல்ஸ் கூறுவார்.


சாக்ரடீசு, பிளாட்டோ, அரிசுடாடில் போன்ற கிரேக்கச் சிந்தனையாளர்கள் அறிவினைப் பெறுவது தொடர்பான சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

சாக்ரடீசு எதையும் ஏன்? எப்படி? எதற்காக? என்பன போன்ற கேள்விகளுக்கு உட்படுத்தி விவாதிப்பதன் மூலமே உண்மைகளைக் கண்டறிய முடியும் எனக் கூறினார். சாக்ரடீசு முறை என்பது வினா விடைகள் மூலம் வாதங்கள் புரிந்து உண்மையைக் கண்டறியும் முறையாகும். இம்முறைதான் அவரது அறிவாராச்சியியல் பற்றிய முறையாகும். பிளேட்டோ மெய்யியல் என்பது உண்மை, அழகு, ஒழுக்கம் பற்றிய ஆய்வாகும். உண்மையை ஆராய்வது அறிவை ஆராய்வதாகும்


கிரேக்க மெய்யியல் இயங்கியலின் முதல் வடிவம் என்ற‌ வகையில் இன்னமும் ஆழமாக கற்றுக்கொள்வது நமது இயங்கியல் அறிவை வளர்த்துக்கொள்ள உதவும், அதே நேரத்தில் இந்த இயங்கியல் போக்குகள் அடுத்தக்கட்டத்திற்கு எவ்வாறு வளர்ந்தன என்பதை அறிந்துகொள்ளவும் உதவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக