ஞாயிறு, 7 நவம்பர், 2010

சாதியம் இருக்கிறதா - 3

சாதியம் என்ற சமூகக் கட்டமைப்பு சுமார் இரண்டாயிரம் வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு அளவு தீவிரத்துடன் அது இயங்கிகொண்டு வந்துள்ளது. சாதியம் முதலாளித்துவ கூறுகள் வளர்ந்த இடங்களில் ஒரு மாதிரியான மாற்றங்களுக்கு உட்பட்டு மீண்டும் வேறு வடிவத்தில் கட்டமைத்துக் கொண்டுள்ளது.
முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நிலைமைகளில் சாதியக் கட்டுமானத்தில் அவ்வாறான, அவ்வளவினதான மாற்றங்கள் இல்லை என்றே சொல்லலாம். கிராமப்புற மக்களுடைய சாதி உணர்வின் அளவிற்கும், நகர்ப்புற மக்களுடைய சாதி உணர்வின் அளவிற்கும் வித்தியாசம் உள்ளது.




முதலாளித்துவ வளர்ச்சிபெற்ற பகுதிகள், வளர்ச்சிபெறாத பகுதிகள், நகரம் கிராமம், பாசன வசதி பெற்ற வளமான விவசாயப் பகுதிகள், வறட்சியான விவசாயப் பகுதிகள், அமைப்பாக்கப்பட்ட தொழில்பகுதிகள், அமைப்பாக்கபடாத தொழில்பகுதிகள் போன்ற முரண்பட்ட வளர்ச்சிப் போக்குகளில் சாதியம் வெவ்வேறு தன்மைகளில் மாறுபட்டு இன்று காட்சியளிக்கின்றது.



அதுமட்டுமின்றி, பொருளாதார அடித்தளத்திலும் கருத்தியல் மேற்கோப்பிலும் சாதியம் தனது இருப்பையும் வாழ்வையும் கொண்டிருக்கிறது. பொருளாதார அடித்தளத்திற்கும், மேற்கட்டுமானத்திற்கு எப்போது ஒருவகையான முரண்பாடு இருப்பதால், பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்ட உடன் சாதியத்திலும் அதே அளவுக்கு மாற்றம் ஏற்படுவதில்லை. சாதிய இருப்பில் அதன் அடித்தள‌த்தில் ஒரு சில அதிர்வுகளைக் காணமுடியும். அதே போல் கருத்தியல் தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் சாதியத்தின் மீது சில குறிப்பிடத்தக்க‌ மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.


பொருளாதார நிலைமைகளில் வேர்களை ஆழப் பதிந்துகொண்ட‌ சாதியக் கட்டுமானம் தழைத்தோங்கி பல்வேறு கருத்தியல் கிளைகளாகக் கிளைத்துள்ளது. அம்மேற்கட்டுமான கிளைகள், விழுதுகளாக‌ வளர்ந்து மேலும் பொருளாதாரக் கட்டுமானத்தைத் தாங்கி நிற்கின்றன. இத்தகைய சிக்கல் நிறைந்த சாதியத்தை எண்ணற்ற முரண்கள் ஊடுருவி பாய்ந்து இடைவிடாத இயக்கத்தில் நிலை நிறுத்தியுள்ளது.


எண்ணற்ற சாதிக்குழுக்கள் நிறைந்திருக்கும் சமூகத்தில் பொருளாதார தளத்தில் ஒரே மாதிரியான தன்மை இருந்தாலும், கருத்தியல் தளத்தில் வேறுபட்ட பல்வேறு போக்குகள் இருப்பதைக் காணமுடிகிறது. உதாரணத்திற்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மிக பெரும்பாலோருக்கும், இன்னபிற இடைப்பட்ட சாதிகளில் இருக்கும் பெரும்பான்மையோருக்கும் இடையேயான பொருளாதார அடிப்படை நீண்டகாலமாகவே ஒரேமாதியாக‌ இருக்கிறது. ஆனால் சிந்தனையில் வேறுவேறு கருத்தியல்கள், தத்துவார்த்த போக்குகள் இன்னமும் நீடிப்பதைக் காணலாம். ஆக பொருளாதாய நிலைமைகள் சிந்தனையை தீர்மானிக்கிறது என்பதை முழுமையான கோட்பாடாக பார்க்கவியலாது. ஒப்பீட்டளவிலும், பருண்மையான நிலைமைகளை கணக்கிலெடுத்து கொண்டு பார்க்கப்படவேண்டும்.


சாதியம் குறித்த அணுகுமுறையில் முக்கியமானதும் அடிப்படையானதும ஆனது சாதியக் கட்டுமானத்தில் செயல்படும் முரண்கள் குறித்ததாகும். சமூகத்தில் சாதியம் எவ்வாறு தனிச்சிறப்புவாய்ந்ததாகவும், மிகவும் சிக்கலானதாகவும் இருக்கிறதோ அதே போல சாதியத்திற்குள் இயங்கும் முரண்களும் அதே அளவுக்கு சிக்கலானதும் மிகவும் வளர்ச்சிபெற்ற அம்சமாகவும் திகழ்கின்றன.



மாவோவின் முரண்பாடுகள் குறித்த தத்துவக் கண்ணோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவர் முரண்பாட்டுத் தத்துவத்தை மிகவும் உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்துள்ளார். இந்த அணுகுமுறை சாதியத்தைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவிசெய்யும். என்றாலும், பொது உடைமையர் பொருளாதார விசயங்களுக்கு மாவோவின் முரண்பாட்டுத் தத்துவத்தை பயன்படுத்திய அளவுக்கு சாதியம் குறித்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினரா என்பது ஐயமே. சாதியத்தின் படிநிலை முரண் போன்ற அம்சங்கள் இதுவரை சமூகவியல் கண்டறியாத புதிய அம்சங்கள் ஆகும். இவற்றைப் பயில்வதற்கும் புரிந்துக் கொள்வதற்கும் மாவோவிற்கு வாய்ப்பில்லை. ஆகவே மாவோவின் முரண்பாட்டுத் தத்துவத்தை மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிகிறது.


சாதி    ஒழிப்பு விசயத்தில் இரண்டு விதமான முக்கிய அணுகுமுறைகள் இருப்பதைக் காணலாம். அவையாவன, வர்க்க அடித்தளத்தை நொறுக்காமல் சாதியை முற்றிலும் ஒழித்துவிட முடியாது என்பது ஒரு கண்ணோட்டம். இது பரவலாக பொது உடைமையர்களின் அணுகுமுறையாகக் காணப்படுகிறது. சாதியை ஒழிக்காமல் வர்க்கப் போராட்டம் வெற்றியைப் பெறாது என்பது வேறொரு கண்ணோட்டம். இது அம்பேத்காரிய பெரியாரிய அணுகுமுறையாகும்.


முதலாவது கண்ணோட்டம், சாதியப் போராட்டத்தை வர்க்கப்போராட்டத்திற்கு உட்பட்ட விசயமாக வைத்து பார்க்கிறது. இரண்டாவது கண்ணோட்டம் வர்க்கப் போராட்டத்தை சாதியப் போரட்டத்திற்கு உட்பட்ட விசயமாக பார்க்கிறது. இது இன்னும் ஒருபடி மேலே சென்று சாதியப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்திற்கு சமப்படுத்துகிறது. அதாவது சாதியப் போராட்டத்தையே வர்க்கப் போராட்டமாகக் காட்டுகிறது.


கடந்த பல பத்தாண்டுகளாக பொது உடைமையர்கள் அவர்கள் கட்சியைச் சார்ந்தோ அல்லது குழுவைச் சார்ந்தோ உள்ளூர் அளவிலும், வட்டார அளவிலும் பிராந்திய அளவிலும் சாதியத்தை குறுக்கும் நெடுக்குமாக எதிர்கொண்டு தொடர்ந்து வினையாற்றி வந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் அவை அவரவர்களின் அனுபவமாகவே தனித்தனியாக தேங்கி நின்றன. அவைகள் தொகுக்கப்படவோ அல்லது கருத்துருவாக்கம் செய்யவோ இன்று வரை யாரும் முயலவில்லை என்பதுதான் உண்மை.


வர்க்க போராட்டத்தின் போது சாதியப் பிரச்சினையை எதிர்கொண்டு அதைக் கையாண்ட முறைகளையும், சாதியப் போராட்டத்தில் பெற்ற அனுபவங்களையும் தொகுப்பதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவற்றை கோட்பாடுகளாகவும் தத்துவார்த்தமாகவும் உயர்த்தப்படவில்லை என்று சொல்லலாம்.


இது ஒரு புறம் இருக்க, சமகாலத்திய அம்பேத்காரிய, பெரியாரிய இன்னபிற சாதி எதிர்ப்பு கருத்தியலகள், சாதி ஒழிப்புப் போராட்டங்கள் ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் விட்டதும் உரிய கவனம் செலுத்தி ஆராயாமல் தவிர்த்ததும், இப்பிரச்சினையிலிருந்து இவர்களை வெகு தூரத்திற்கு தள்ளிவைத்தன.

கடந்த பத்தாண்டுகளாக அம்பேத்காரிய, பெரியாரிய நீரோட்டங்களின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியிருந்தாலும், இன்னும் பிரச்சினையின் மையத்தை அடையவில்லை என்பதே நிதர்சனமாக வெளிப்படுகிறது. அதற்கான‌ காரணம் பொது உடைமையரிடையே ஆழமான விரிந்த அளவிலான தத்துவ உணர்வு இல்லாமல் இருப்பதே ஆகும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக