திங்கள், 13 டிசம்பர், 2010

இயங்கியலின் இந்திய வடிவங்கள் - 1

உபநிடதம்


இவ்வுலகின் மூலப்பொருள் என்ன? இவ்வுலகப்பொருட்கள் எல்லாம் எங்கிருந்து தோன்றுகின்றன? எங்கே சென்று ஒடுக்கம் பெறுகின்றன?. இவ்வுலகப்பொருட்கள் யாவும் பிரம்மத்திலிருந்தே உற்பத்தியாகின்றன. இறுதியாக பிரம்மத்தில்தான் எல்லாமும் ஒடுங்கிப்போகின்றன. ஆகவே, பிரம்மம் என்ற ஒரேயொரு வஸ்துவே அடிப்படையாக உள்ளது என்று உரைக்கின்றது. பிரம்மம் என்பது என்ன? பிரம்மம் என்பது ஒரு சடப்பொருளல்ல; மாறாக அது ஒரு சித்து என்ற கருத்துலகம்.




அடுத்ததாக,‌ பிரம்மத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவு என்ன? ஆத்மாக்கள் தனியாகவும் பலவாகவும் காணப்படுகின்றது. அவை பிரம்மம் என்ற ஒற்றை முழுமைக்குள் அடக்கம். ஆத்மாவும் பிரம்மமும் இரு வேறு பொருள்களல்ல; அவையிரண்டும் ஒரே பொருள்தான் என்று உபநிடதம் உரைக்கின்றது.



இந்திய தத்துவ ஞானப் பிரிவுகளுள் பெரும்பாலானவை, ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றா, இல்லையா, இரண்டுமா என்பதிலே ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளால் எழுந்துள்ளவையே. பின்னர் வந்த இந்திய தத்துவ ஞானப் பிரிவுகளில் பெரும்பாலானவை, இந்தப் போக்கில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் எழுந்துள்ளவையே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



உபநிடதங்களிலே, பிரம்மத்துக்கு இரண்டு நிலைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. அப்பிரம்மத்தின் நிலைகள், இரண்டுவிதமான‌ அணுகுமுறைகளைக் குறிக்கின்றன‌.



முதலாவதான பிரம்மமானது உலகத்தோடு கூடி, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலை ஆகும். பிரம்மம் என்பது உலகம் தோன்றுவதற்கும், நிலைபெறுவதற்கும், ஒடுங்குவதற்கும் காரணமாக உள்ளது என்று உரைக்கப்படுகின்றது. இங்கு தோற்றம், நிலைப்பேறு, ஒடுக்க‌ம் ஆகிய‌ மூன்று நிலைகளைப் பற்றிப் பேச‌ப்ப‌டுகின்ற‌ன.


அடுத்ததாக‌, பிரம்மம் இந்த உலகம் எங்கும் வியாபித்துள்ளது. என்றாலும் அதையும் தாண்டி, பிரம்மத்துக்கு உலகத்தைக் கடந்த ஒரு நிலையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவே இந்த இரண்டாவது நிலை ஆகும்.


ஆகவே, உலகத்துள் பிரம்மம் இருப்பதில்லை; மாறாக இப்பிரம்மத்துள்தான் உலகம் இருக்கின்றது. அதாவது, பிரம்மம் என்ற கருத்தையே உலகத்துக்கும் பிரபஞ்சத்திற்கும் அடிப்படையாகத் திகழ்கின்றது. பிரம்மத்திலிருந்து உலகம் உற்பத்தியாகிறது; நிலைபெறுகின்றது; பின்னர் பிரம்மத்திலேயே ஒடுங்கிவிடுகின்றது. இதுவே உபநிடதங்கள் கூறும் கருத்துரைகள் ஆகும்.


மேலும் பிரம்மத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவையும் விளக்குகின்றது. உபநிடதங்கள் மாகாவாக்கியங்களின் கூற்றுப்படி, இரண்டும் ஒன்றாயிருக்கிறது; இரண்டும் உடனிருக்கின்றது; இரண்டும் வேறாயிருக்கின்றது. பிரம்மத்திற்கும், பிரபஞ்சத்திற்கும் உள்ள இத்தகைய உறவுதான் பின்னாளில் மூன்று பெரும் தத்துவ சமயப் போக்குகளாக பிரிகின்றது.


பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: "பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது....."ஈசோபநிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது: "அது நகர்கிறது. அது நகர்வதில்லை.

அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது. அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது. அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது".


கீழ்கண்ட சான்றுகள் யாவும் பிரம்மத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள உறவு குறித்து எளிமையாகவும் நுட்பமாகவும் விளக்கி நிற்கின்றன.

ஒரு பானை நிறைய இருந்த தண்ணீர் இருக்கையில், அந்தப் பானை உடைந்து, அதன் நீர், ஒரு பெரிய நீர்நிலையில் கலந்து விட, அந்த நீர்நிலையில் இருக்கும் தண்ணீரில், எந்தத் தண்ணீர் பானையில் இருந்த வந்த தண்ணீர், எனப் பிரித்தறிய இயலாததுபோல, பரமனில், ஜீவனின் ஆன்மா, இரண்டற இருப்பதை அறிவான்.


ஒன்றுமில்லாத பானை, ஒன்று உடைந்து போக, பானைக்குள் இருந்த பரப்பிற்கும், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பரவெளிக்கும், இடையே பிரிவேதும் இல்லை. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு, அணைந்து போக, எங்கே போனது நெருப்பு?. அணைந்த நெருப்பும், எல்லாமுமான பரமனில் கரைந்தது போல.


பிரம்மமே உலகத்தின் அடிப்படை என்பதால் அது கருத்துமுதல்வாத மாகின்றது. பிரம்மம் ஒரு முழுமையான பரம்பொருள் என்பதால் அது ஒருமைவாதம் ஆகின்றது. உலகத்தின் தோற்றம், நிலைப்பேறு, ஒடுக்க‌ம் ஆகிய‌ மூன்று நிலைகளைப் பற்றிப் பேசும் போதும், உலகத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவைப் பற்றி பேசும் போது இயங்கியல் கூறு வெளிப்படுகின்றது.


இதன்மூலம் ஒரு முக்கிய இயங்கியல் பிரச்சனையை முன்வைக்கின்றது. அதாவது தனிக்கும் முழுமைக்கும் உள்ள உறவு எத்தகையது என்பதை பற்றி பேசப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக