புதன், 29 டிசம்பர், 2010

இயங்கியலின் இந்திய வடிவங்கள் - 2

சமணம்



பொருள் என்றால் என்ன, பொருள் எதனால் ஆனது, பொருளை எவ்வாறு அறிகின்றோம் என்ற கேள்விகளுக்கு சமணம் விளக்கம் அளிக்கின்றது. அணுக்கள் ஆகிய மூலப்பொருளிலிருந்து உலகு உற்பத்தியாயது என்பர் சமணர். உலகத்தின் தோன்றுவதற்கு கடவுள் தேவையில்லை என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே கடவுள் மறுப்பு தத்துவத்தை முன்வைத்தன‌ர்.




பொருளை அழிக்கவும் முடியாது, ஆக்கவும் இயலாது


பொருளை ஆக்கவோ அழிக்கவோ முடியுமா என்பது குறித்து சமணர் கொண்டுள்ள கருத்துக்கள் மிகவும் குறிப்பிடத்தக்கனவாகும். பொருளை அழிக்கவும் முடியாது; அதே போல ஆக்கவும் இயலாது என்பது சமணரின் கூற்று. பொருளுக்கு அழிவு என்று கூறப்படுவதெல்லாம் அப்பொருளில் ஏற்படும் மாறுதலையே குறிக்கும். ஒரு பொருள் அழிந்துவிட்டதென்றால் அது இன்னொன்றாக மாறிவிட்டதென்பதே அதன் பொருள். பகுதி பொருட்கள் சேர்ந்து பொருளாக மாறுகிறது. இதைத் தான் பொருள் உருவாகின்றது என்பதாகும். அதேபோல அப்பொருள் மாறும் போது என்ன நடக்கிறது என்றால் எவ்வெப்பகுதிகள் சேர்ந்து அப்பொருள் ஆயதோ அவ்வப் பகுதிகளாகப் பிரிந்துவிட்டது என்பதே கருத்து.



ஒரு பொருளை இன்னொன்றாக மாற்றலாமேயன்றி ஒன்றுமேயில்லாமல் அழிக்க முடியாது. ஒரு பொருளிலிருந்துதான் இன்னொரு பொருள் உருவாக்கமுடியுமே தவிர‌ எதுவுமேயில்லாமல் ஒன்றையும் ஆக்கவியலாது. அழிதல் என்பது பொருளின் நிலை மாறுதல் அல்லது பகுதிகளாகப் பிரிதல் மட்டுமே ஆகும். எனவே, எது, பகுதிகளாலாயதோ அது தான் அழியும். மேலே பிரிக்க முடியாத இந்த மூல நுண்பொருள்களைச் சமணர் அணுக்கள் என்பர். மிகச்சிறிய இவ்வணுக்களிலிருந்து தான் மிகப்பெரிய இவ்வுலகம் உற்பத்தியாகின்ற தென்பதே சமணரது கொள்கை ஆகும்.



.இப்பிரபஞ்சம் முழுவதையும் சமணர் சீவன், அசீவன் என்ற இரு பிரிவுகள் அடக்குவர். நம் புலன்களுக்கு புலப்படும் பௌதிகப் பொருள்கள் அனைத்தும் அசீவன் எனப்படும். இவற்றைப் புற்கலம் என்ற கோட்பாட்டால் விளக்குவர் சமணர். புற்கலம் என்பதற்குச் சேர்ந்து ஒன்றாவதும், பின் பிரிந்து பல ஆவதும் என்பது பொருள் ஆகும். எனவே, புற்கலங்கள் இருநிலையை யுடையன. ஒன்றுசேர்ந்து முழுப் பருப்பொருள்களான நிலை. இந்நிலையில்தான் புற்கலங்களைப் புலன்களால் உணர்வும் நுகரவும் முடியும்.


தொடக்கமும் முடிவும் உண்டா

இவ்வுலகத்திற்கு தொடக்கமும் முடிவும் உண்டா என்பதை விவாதிக்க முன்வருகின்றனர். இவ்வுலகத்திற்கு தொடக்கத்தை அறிய வேண்டுமாயின், அதன் முடிவை ஆராயவேண்டும். முடிவு எங்கேயோ அங்கேதான் தொடக்கமும். தொடக்கத்தை அறிய வேண்டுமானால் முடிவை ஆராய வேண்டும். ஆக்கத்தை அறியவேண்டுமானால், அழிவை ஆராயவேண்டும். பொருள்களுக்கு அழிவென்பது பகுதிகளாகப் பிரிதல். உலகை, இதற்குமேல் அழிக்க முடியாது என்ற நிலை வரை அழித்துக்கொண்டு போனால், அணுக்களில் போய் முடியும். அத‌ற்கு மேல் பிரித‌ல் இல்லை.



எதிரெதிர் அம்சங்கள் சேர்ந்ததே பொருள்

பொருட்கள் ஒவ்வொன்றும் அவ்வப்பொருளிலுள்ள இயல்புகளாலேயே ஆனது. ஒரு பொருளிலுள்ள குணங்களைக் கொண்டே அதனை அறிகிறோம். ஆனால், ஒவ்வொரு பொருளும் தன்னிடத்துள்ள குணங்களால் மட்டுமன்றித் தன்னிடத்தில்லாத தன்மைகளாலும் ஆன‌து. ஒரு பொருளை அறிவதற்கு அதனிடத்துள்ள தன்மைகளோடு அதனிடத்திலில்லாத த‌ன்மைகளும் சேர்ந்து துணை புரிகின்றன என்பது சமணரது கூற்று.



சுருங்கக் கூறவேண்டுமானால், ஒவ்வொரு பொருளையும் உடன்பாட்டுத் தன்மைகளும் எதிர்மறைத் தன்மைகளும் சேர்ந்தே ஆக்குகின்றன. உதாரணமாக, ஒரு மனிதன், அவனாவதற்கு அவனல்லாத பிறவெல்லாம் துணை செய்கின்றன. அவனில் இல்லாத குணங்கள், தன்மைகள் அனைத்தின் இன்மையும் அவனில் இருக்கின்றன. அவனில் உள்ளன அனைத்தும் இல்லாதன அனைத்தும் சேர்ந்தே அவனை அவனாக்குகின்றான். இவ்வாறு எதிரெதிர் அம்சங்கள் இணைந்து செயல்படுவதைப் பற்றி சமணம் அக்கறைக் கொள்கின்றது.



சியாத் வாதம்

மேலும் சமணம், ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் உள்ள உறவைப் பற்றியும் கூறுகின்றது. ஒவ்வொரு பொருளையும் தனித்தும் பிற பொருள்களோடு தொடர்புபடுத்தியும் அறிய வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. ஒரு பொருளைப் பற்றிய ஒரு கருத்து ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது சரியாகும். இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது அதற்கு நேர்மாறான கருத்தும் பொருந்துவதாகக் காணலாம். இங்கு ஒரு பொருளைப்பற்றி இறுதியான முடிவுக்கு வராமல் அதாகவும் இருக்கலாம் அல்லது இதாகவும் இருக்கலாம் என்ற வாய்ப்பைக் கணக்கிலெடுத்து கொள்ளவேண்டும் என்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இத்தகைய அணுகுமுறையை சியாத் வாதம் என்றழைப்பர் சமணர்.



சப்தபங்கி

பல முடிவுகளை வந்தடைவதைப் பற்றி சமணர்கள் கூறினாலும் அவற்றை ஏழுபகுதிகளாக வரையறுக்கின்றனர். அதை இவர்கள் சப்தபங்கி என்பர். சிவஞான முனிவர், இதனை ஓர் உதாரண மூலம் விளக்குகின்றார், “உடம்பெடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என வினாவிய வழி, உண்டாம், இல்லையாம், உண்டும் இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லோணாததுமாம், இல்லையுமாம் சொல்லொணாததுமாம், உண்டுமில்லையுமாம் சொல்லொணாததுமாம் என ஏழு வகையாக இறுத்தல் என்பர்”.

1. syād-asti – "in some ways it is"

2. syād-nāsti - "in some ways it is not"

3. syād-asti-nāsti - "in some ways it is and it is not"

4. syād-asti-avaktavyaḥ - "in some ways it is and it is indescribable"

5. syād-nāsti-avaktavyaḥ - "in some ways it is not and it is indescribable"

6. syād-asti-nāsti-avaktavyaḥ - "in some ways it is, it is not and it is indescribable"

7. syād-avaktavyaḥ - "in some ways it is indescribable"



ஆகவே, அது உளதும் இலதும் ஆகின்றது. இவ்வாறு எக்கூற்றிலும் உண்மை உண்டு என்னும் அநேகாந்தவாதம் உலகிலுள்ள பொருள்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுதுக்கும் அதன் மூலத்துக்கும் பொருந்தும். இதன் மூலம் சமணர் புலப்படுத்த முற்படுவது இப்பிரபஞ்ச மூலம் முரண்பட்டதும் முரண்படாததுமான பல்வேறு இயல்புகளையும் தனக்கு இலககணமாக உடையது என்பதும், அதைப்பற்றிய நம் அறிவு, பகுதி அறிவாகுமே யொழிய முற்றறிவு ஆகாதென்பதும் ஆகும். ஆனால், ஏனைய தத்துவஞானிகள் தம் கொள்கையே முடிந்த முடிவு என்றோ, முற்றிலும் உண்மை என்றோ கொள்வதைச் சமணர் ஏற்கார்.

அநேகாந்தவாதம்

ஒருபொருளைப் பற்றி ஒற்றை முடிவுக்கு வருவ‌து ஏகாந்தமேயாகும். ஆனால் அப்பொருளைப் பற்றி எந்த ஒரு முடிவும் முடிந்த முடிவாக ஒற்றை முடிவாக‌ இருக்கவியலாது. அது யானையின் ஒவ்வோர் உறுப்பையும் தடவிப் பார்த்த குருடர் ஒவ்வொருவரும் பகுதியளவில் மேற்கொண்ட முடிவைப் போன்றதாகும். முடிவுகள் பல இருக்கலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையிலிருந்து நோக்கச் சரியானதாகும். இங்ஙனம் பல முடிவுகளை அதாவது அநேக அந்தங்களை ஏற்கும் சமணர் கொள்கையே அநேகாந்தவாதம் எனப்படும். சமணர்களை அநேகாந்தவாதிகள் எனக் குறிப்பிடுவதுண்டு. இத‌ன்மூல‌ம் ச‌ம‌ணர் தத்துவங்க‌ளின் இய‌ங்கிய‌ல் கூறுக‌ளை அறிந்துக் கொள்ளலாம்.



பொருள் முதல்வாதக் கருத்துக்களை வெளிப்படுத்திய அதே சமயம் இயக்கவியல் கூறுகளை வளர்த்தெடுத்த வகையில் சமணம் முன்னணியில் இருந்ததை பார்க்கமுடிகிறது. சமணர்கள் வேதாந்தவாதிகளுடனும், உலகாதயர்களுடனும் முரண்பட்டு தர்க்கம் புரிந்து வந்தனர். சமணத்தில் உள்ள‌ சிறப்புக்கூறுகளான‌ யதார்த்தவாதம், பன்மைவாதம், அணுவாதம், அநேகாதந்தவாதம், சியாத் வாதம் போன்றவை மிகவும் ஆழமாக பயிலப்பட வேண்டியன வாகும்.



கடவுளை ஒதுக்கிவிட்டு அந்த இடத்தில் கன்மத்துக்கு இடமளித்ததும் கன்மத்தை ஒரு பௌதீகப் பொருளாக, ஒரு சடப்பொருளாக, ‍ சடப்பொருளின் சூக்குமமான நுண்துகள்களாக, நுண் அணுக்களாகக் கொண்டதும் சமணரின் தத்துவக் கோப்பில் இருந்த பலகீனமான அம்சங்கள் ஆகும். எனவேதான் சமணம் இறுதியில் கருத்துமுதல்வாதத்திற்கு பலியாகியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக