வெள்ளி, 19 அக்டோபர், 2012

விஞ்ஞான தத்துவமும் விஞ்ஞான முறைமையும் - 1

 
விஞ்ஞானம் என்பது என்ன? விஞ்ஞான அறிவு எவ்வாறு பெறப்படுகின்றது? என்பது விஞ்ஞானத்தின் மீதும் விஞ்ஞான தத்துவத்தின் மீதும் கேட்கப்படும் அடிப்படையான கேள்விகளாகும். விஞ்ஞான அறிவு என்பது விவரங்களிலிருந்தும், தரவுகளிலிருந்தும், பொருண்மைகளிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் பெறப்படும் அறிவாகும். விஞ்ஞானம் என்பது அனுபவ உண்மைகளிலிருந்து பெறப்படும் அறிவாகும் என்பது அறிவியல் தத்துவம் குறித்த பொதுவாக எல்லோராலும் கோட்பாடாகும். இது விஞ்ஞான துறையைச் சார்ந்த அறிஞர்களும் கூட இவ்வாறுதான் விளக்கம் கொடுப்பார்கள்.

நாம் புற உலகத்தை கண்ணால் பார்க்கின்றோம்; காதால் கேட்கின்றோம்; வாயால் சுவைக்கின்றோம்; மூக்கால் நுகர்கின்றோம்; உடலால் உணர்கின்றோம். இந்த அனைத்தும், பொருட்கள் புலன்களைப் பாதித்து, நமது மூளையால் உணரும் அனுபவங்களாகும். ஆக புறவுலக பொருட்கள் குறித்த அறிவைப் பெற வேண்டுமானால்  அவற்றின் நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நாம் உணரவேண்டும். அவ்வாறின்றி பொருட்கள் குறித்த அறிவைப் பெறவியலாது என்பதைதான் மேற்குறித்த விஞ்ஞான கண்ணோட்டம் உணர்த்துகின்றது. நேரடியாக பார்ப்பது, கேட்பது, தொடுவது போன்ற அனுபவங்களை மட்டும் விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் கற்பனைகளையும், யூகங்களையும் விஞ்ஞானம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஆக விஞ்ஞான அறிவு என்பது பொருட்கள் குறித்த பொருண்மைகள், நிகழ்வுகள், அனுபவங்கள் மீது கட்டப்படும் கட்டிடம் ஆகும். இன்றளவும் இத்தகையக் கோட்பாடுதான் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆனால் பண்டைய கால விஞ்ஞானத்தின் அணுகுமுறை, கோட்பாடு என்பவை முற்றிலும் வேறானவையாக இருந்தது.
    
பண்டைய விஞ்ஞானத்தின் அடிப்படை

கிரேக்கர்கள் தங்களது சிந்தனைக்கான‌ வடிவமைப்புகளை சில அடிப்படையாக கோட்பாடுகளிலிருந்தோ அல்லது கொள்கைகளிலிருந்தோ பகுத்தாராய்வதன் மூலம் பெற்றார்கள்; தொகுத்தாராயும் முறை என்பது அவர்களுக்கு அறியாத ஒன்றாக இருந்தது எனலாம்.  பகுத்தாராய்வதும், தர்க்க அறிவும் கொண்டதுதான் கிரேக்கத் தத்துவத்தின் சாரமாகத் திகழ்ந்தன‌.

      இத்தகைய‌ பகுத்தாய்வு முறைமைக்கு வித்திட்டவர் பண்டைய‌ கிரேக்க விஞ்ஞானியும் தத்துவ அறிஞருமான‌ அரிஸ்டாடில் ஆவர். இவரது காலம் தொட்டு 17 ஆம் நூற்றாண்டுவரை பகுத்தாய்வு முறைமைதான் அனைத்து விஞ்ஞான துறைகளிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்தன. பண்டைய விஞ்ஞானம் என்பது பகுப்பாய்வு முறையின் மீது எழுப்பப்பட்டது என்றால் அது மிகையாகாது.

மரபு விஞ்ஞானத்தின் அடிப்படைகள்

  பருப்பொருட்களுக் கிடையே செயல்படும் விசையைப் பற்றிய துல்லியமான வரையறை செய்தவர் நியூட்டன் ஆவர். இந்த விசையானது எளிதானது. இருபொருட்களுக்கும் இடையே உள்ள தூரத்திற்கும் அவற்றின் நிறைக்கும் உள்ள சமன்பாடாகும். அதுதான் ஈர்ப்புவிசை எனப்படுகின்றது.

பெளதீக நிகழ்வுகள் அனைத்தும், பொருட்களின் பரஸ்பர ஈர்ப்பினால் இயங்குகின்ற இயக்கமாகக் கருதப்பட்டன. அதாவது ஈர்ப்பு விசையினால் நிறைப்புள்ளி மீதான விசையின் விளைவை துல்லியமான கணிதவியல் வடிவத்தில் வடிக்கும் பொருட்டு, நியூட்டன் முற்றிலும் புதிய கருத்தாக்கங்களையும் கணிதவியல் நுட்பங்களையும் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. அவை வகைநுண்கணிதம் எனப்பட்டது.

   பருப்பொருட்களும் அவற்றிற்கிடையில் செயல்படும் விசையும் இறைவனால் உருவாக்கப்பட்டதாக கருதப்பட்டன. நியூட்டனும் இவ்வாறே நம்பினார். முதல் முடுக்கம் பெற்றப்பின் ஒழுங்குமுறையில் பிரபஞ்சம் இயங்கும். இத்தகைய ஒழுங்குமுறைக்கு உட்பட்ட இயக்கம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதே நியூட்டனின் பிரபஞ்சம் பற்றிய கருத்துரையாகும்.

நியூட்டனின் இயந்திரவியல் கொள்கை

துவக்கத்தில் பிரபஞ்சம் இயக்கம் ஏதுமின்றி ஓய்வுநிலையில் இருந்தது. எல்லாப் பொருட்களும் இயக்கமற்றுதான் இருந்தன. முதல் முடுக்கம் பெற்றப்பின் பிரபஞ்சம் தானே சுயமாக இயங்கத் துவங்கியது. அதன் பிறகு எந்த தலையீடும் தேவையில்லை. இந்த‌ நியூட்டனின் இயந்திரவியல் கொள்கைதான் மரபுவழி இயற்பியலுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் வரைக்கும் இயற்கையியல் தத்துவங்களுக்கு ஓர் உறுதியான அடிப்படையைத் தந்தது.

நியூட்டனின் கருத்துப்படி, கடவுள் முதலில் பருப்பொருட்களையும் அவற்றிற்கிடையேயான விசைகளையும் அடிப்படை இயக்க விதிகளையும் படைத்தார். பிறகு, ஒட்டுமொத்த பிரபஞ்சமும், ஓர் இயந்திரம்போல, மாறாத‌ விதிகளால் தீர்மானிக்கப்பட்டு, இயங்கப்பட்டது. இன்னமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கின்றது.

இயற்கை பற்றிய இயந்திரவியல் கண்ணோட்டத்தின்படி, இயற்கையின் இயக்கம் என்பது காரணகாரிய உறவு உடையதாகவும், கறாராகத் தீர்மானிக்கக் கூடிய தன்மையாக இருந்தது. இந்த வகையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உள்ள அனைத்து விவரங்களையும் தெரியுமானால் கொள்கையளவில் எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை முழுமையான உறுதியுடன் முன்கூட்டியே சொல்லிவிடலாம் என்று முழுமையாக நம்பப்பட்டது.

நியூட்டனின் கொள்கைப்படி வெளியானது (Space) எப்பொழுதும் மாற்றமில்லாதது; நிரந்தரமானது. காலம் (Time) என்பது சார்பற்றது;  சுயேச்சையானது. இயற்கையோடும் உலகத்தோடும் எத்தகைய சார்பையோ அல்லது ஒட்டுறவையோ இவை பெற்றிருக்கவில்லை என்பது இவரது தீர்மானகரமானக் கருத்து.

நியூட்டனின் இயந்திரவியல் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தது. லேப்லாஸ் என்ற கணிதமேதை நியூட்டனின் கணக்கீடுகளை  யெல்லாம் திருத்தியமைத்து செழுமைப்படுத்தினார். இவற்றை  'பிரபஞ்ச இயந்திரவியல்' என்ற ஐந்து தொகுதிகளில் தொகுத்தளித்தார்.

இப்பெரும்பணியின் மூலம் லேப்லேஸ் கோள்கள், துணைக் கோள்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இயக்கம் பற்றிய மிக நுட்பமான விவரங்களையும் கண்டறிந்தார். அதே போல ஈர்ப்பு சக்தியோடு தொடர்பு கொண்ட ஒளி வெள்ளப் பிரவாகங்கள் போன்ற நிகழ்வுகளையும் விளக்குவதில் வெற்றி கண்டார். இவ்வாறாக சூரிய மண்டலத்தின் ஸ்திரதன்மையை உறுதி செய்து, நியூட்டனின் விதிகளுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

வானவியலில் பெற்ற வெற்றியை அடுத்து நியூட்டனின் இயந்திரவியலை அனைத்து துறைகளுக்கும் பரிசோதனை செய்வதில் அனைவருக்கும் ஆர்வம் மேலிட்டது. இறுதியாக பிரபஞ்சம் என்பதே நியூட்டனின் இயக்கவிதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிவருகின்றது என்று முழுமையாக நம்பப்பட்டது. இதையே முடிவான கொள்கைகளாகக் கொள்ளப்பட்டன. நியூட்டனின் இயக்கவியல் சமன்பாடுகள் மரபு வழி இயந்திரவியலுக்கு ஆதாரமானவை.அவை நிலைநிறுத்தப்பட்ட விதிகளாக கருதப் பட்டன.

அதாவது பருப்பொருளுக்கு அடிப்படைக் கட்டுமானக் கற்கள் வேண்டும். அடிப்படையான கோட்பாடுகள் ஆதாரமாக அறிவின் அடித்தளமாக உள்ளன. இத்தகைய உறுதியான அடித்தளங்களின் மீது எழுப்படும் மாளிகைகளாக அறிவை உருவகப்படுத்துகின்ற பழக்கம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மேற்கத்திய சிந்தனையில் நிலவி வந்துள்ளது.

நியூட்டானிய உலகம் என்பது அவரால் மட்டுமே கட்டியெழுப்பப் பட்டதன்று; அவருக்கு முந்தைய தலைமுறையினர்களான கலிலியோ கலிலி, லியோனார்டோ டாவின்சி, சைமன் ஸ்டினர், பாஸ்கல் போன்றவர்களின் பங்களிப்பும் உண்டு.

நியூட்டனிய உலகக் கண்ணோட்டத்தின் பிரதான கருத்தாக்க‌ங்களாக விளங்கியவை: 1.சார்பற்ற வெளியும் காலமும், 2. அழிக்க வொண்ணா சிறிய திடமான துகள்கள், 3. கடுமையான காரண காரியங்களுடன் கூடிய இயற்கை நிகழ்வுகள், 4.இயற்கையை ஆய்வதற்கான புறநிலையான‌ அணுகுமுறை ஆகியனவாகும்.

மின்சாரம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகளை நியூட்டனின் கொள்கைகளால் விளக்க முடியாமல் போனது எப்படி?

மைக்கேல் பாரடே தாமிரக் கம்பிச் சுருளுக்கருகில் காந்தத் துண்டை நகரச் செய்தார். இதன்மூலம் மின்னோட்டத்தை ஏற்படுத்தினார். காந்த துண்டை நகரசெய்வது என்ற‌ இயந்திரவியல் வேலையை மின்னாற்றாலாக மாற்றிய செயல் விஞ்ஞானத்திலும் தொழிற்நுட்பத்திலும் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய‌து. இந்நிலையில் மின்சாரம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகளை நியூட்டனின் கொள்கைகளால் விளக்க முடியாமல் போனது.

மைக்கேல் பாரடே மின்சாரம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகளை நடைமுறையில் ஆராய்ந்து கொண்டிருந்த அதேவேளையில்,  இவருக்கு துணையாகவும் இணையாகவும் கோட்பாட்டு ரீதியில் ஒரேதிசையில் பயணித்தவர் கிளார்க் மாக்ஸ்வெல் ஆவர். இவரது கொள்கை அடிப்படையாக வைத்து, இறுதியில் முழுமையான மின்காந்தவியல் கொள்கை உருவாக்கப்பட்டது.

நியூட்டனின் கண்ணோட்டத்தில் விசைகள் தாம் செயல்படுகின்ற பொருட்களோடு மட்டுமே தொடர்பு கொண்டனவாக இருந்தன. தற்போது விசை என்கிற கருத்தாக்கம் இருந்த இடத்தில் விசைப்புலம் என்ற ஆழமான கருத்தாக்கம் இடம் பிடித்துக்கொண்டது. இக்கொள்கையின் வளர்ச்சிதான் மின்சார இயக்கவியல் எனப்பட்டது. அதன்படி ஒளி என்பது விரைவாக மாறிக் கொண்டிருக்கின்ற,  அலைவடிவங்களில் வெளியில் பயணிக்கின்ற ஒரு மின்காந்தப் புலம் மட்டுமே என்று உணர்ந்தறியப் பட்டது. இதன் மூலம் இவர்கள் நியூட்டனின் இயற்பியலைக் கடந்து சென்றனர்.

ஆனாலும் நியூட்டனின் இயந்திரவியல், இயற்பியலின் ஆதாரம் என்கிற தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டது என்பதை மறுக்க வியலாது. மேக்ஸ்வெல் தன்னுடைய முடிவுகளை இயந்திரவியல் வழியே விளக்குவதற்கு முற்பட்டார் என்பது உண்மைதான். இருந்த போதிலும் தன்னுடைய கொள்கையின் அடிப்படைக் கூறுகள் புலங்கள்தாம் என்பதையும் இயந்திரவியல் அமைப்புகள் அல்ல என்பதையும் உள்ளுணர்வாகக் கொண்டிருந்தார். இந்த‌ உண்மையை 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐன்ஸ்டீன் தெளிவாகக் கண்டறிந்தார்.

நவீன இயற்பியலின் வளர்ச்சியும் அறிவியல் சிந்தனையில் ஏற்பட்ட‌ மாற்றங்களும்

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூட்டனின் இயற்பியல் உலகம் ஆட்டம் காணத் தொடங்கியது என்று கூறலாம். இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் இயற்பியல் ஒட்டுமொத்தமாக தீவிரமான மாற்றத்திற்குள்ளானது. நியூட்டனிய உலகக் கண்ணோட்டத்தின் பிரதான கருத்தாக்க‌ங்களான சார்பற்ற வெளியும் காலமும், அடிப்படைத் துகள்கள், கடுமையான காரண காரியங்களுடன் கூடிய இயற்கை நிகழ்வுகள், இயற்கையை ஆய்வதற்கான புறநிலையான‌ அணுகுமுறை போன்ற அனைத்து கோட்பாடுகளையும் தகர்த்தன என்று கூறப்படுகின்றது. இன்றைய விஞ்ஞானத் தத்துவமானது, குவாண்டம் சார்பியலின் தத்துவ அடித்தளத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்டது என்றால் அது மிகையாது.

இயற்கையின் உட்பொதிந்த ஒழுக்கமைப்பின்பால் ஐன்ஸ்டீன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இயற்பியலுக்கு ஒருங்கிணைந்த அடித்தளம் ஒன்றைக் கண்டுபிடிப்பதே அவருடைய அறிவியல் வாழ்க்கை முழுவதிலும் ஆழ்ந்ததோர் அக்கறையாக இருந்தது. மரபுவழி இயற்பியலில் இரண்டு தனித்தனிக் கொள்கைகளாக மின் இயக்கவியலும் இயந்திரவியலும் இருந்து வந்தன. இவற்றிற்கிடையே ஒரு பொதுவானதொரு ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். இந்தக் கட்டமைப்புதான் சார்பியல் சிறப்புக் கொள்கை என்றழைக்கப் படுகின்றது. இது மரபு வழி இயற்பியலின் வடிவமைப்பினை ஒருங்கிணைத்து முழுமைப்படுத்தியது எனலாம். அதே சமயத்தில், வெளி, காலம் பற்றிய மரபுவழி கருத்தாங்களுக்கும் ஒரு தீர்க்கமான மாற்றத்தினை ஏற்படுத்தினார்.

1905 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் வெளியிட்ட இரு கட்டுரைகள், அறிவியல் உலகில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தின. ஒன்று அவருடைய சார்பியல் சிறப்புக் கொள்கைகளாகும்; மற்றொன்று மின்காந்தக் கதிர்களைப் புதியதொரு கோணத்தில் ஆய்வதற்கு வழிவகுத்தது. அதுவே பின்னர், அணுவியல் நிகழ்வுகளை விள‌க்கும் கொள்கையான குவாண்டம் கொள்கையின் சிறப்பம்சமாக ஆனது என்று கூறுவது மிகப் பொருத்தமாக அமையும்.

1915 இல் ஐன்ஸ்டீன் சார்பியல் பொதுக் கொள்கைகளை முன்மொழிந்தார். இதை அவருடைய சிறப்புக் கொள்கையின் கட்டமைப்பு ஈர்ப்பு சக்தியை, பருப்பொருள் தம்மை பரஸ்பரம் ஈர்த்துக் கொள்ளும் சக்தியை, உள்ள‌டக்கும்படி விரிவாக்கப்பட்டது. சிறப்பு சார்பியல் கொள்கை எண்ணற்ற பரிசோதனைகளால் உறுதிப் படுத்தப்பட்ட போதிலும்    பொது சார்பியல் கொள்கை  தீர்மானகரமாக உறுதிபடுத்தப் படவில்லை என்றே சொல்லலாம்.

சார்பியல் கொள்கைப்படி வெளி என்பது முப்பரிமாணம் கொண்டதாகவோ காலம் தனித்துவமான ஒன்றாகவோ இல்லை. இவை இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட 'வெளி - காலம்' என்னும் நாற்பரிமாணத் தொடர் அமைப்பாகும். சார்பியல் கொள்கையின்படி காலத்தைத் தொடர்பு படுத்தாமல் வெளியைப் பற்றியோ,  வெளியைத் தொடர்புபடுத்தாமல் காலத்தைப் பற்றியோ இயலாது.

பார்க்கக் கூடிய நிகழ்வுகளைப் பொறுத்து வெவ்வேறு திசைகளில் நகர்ந்துகொண்டிருக்கும் வெவ்வேறு பார்வையாளர்கள் அந்நிகழ்வுகளை வெவ்வேறு காலக் கிரமப்படி வரிசைப் படுத்துவார்கள். ஒரே சமயத்தில் நிகழ்ந்தனவாக ஒரு பார்வையாள‌ரின் கண்களுக்குட் பட்ட இரு நிகழ்வுகள் வேறு பார்வையாளர்களுக்கு வெவ்வேறு காலக்கிரமங்களில் நிகழ்ந்த  நிகழ்வுகளாகத் தோன்றலாம்.

பொருண்மை என்பது ஆற்றலின் வடிவம் மட்டுமே என்பது உணரப்பட்டது. ஆற்றலுக்கும்  பொருண்மையின் நிறைக்கும் உள்ள தொடர்பு E=mc2 என்கிற புகழ்பெற்ற சூத்திரத்தில் வரையறுக்கப் படுகிறது. இங்கு C என்பது நிலையான எண். அதாவது ஒளியின் வேகம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. ஒளியின் வேகத்தை ஒட்டிய திசை வேகத்தைக் கொண்ட இயற்கை நிகழ்வுகளை விவரிக்க வேண்டுமானால் சார்பியல் கொள்கையின் துணையுடன் தான் செய்யவேண்டும்.

தொழில் நுட்பரீதியாக‌ மறு ஆக்கம் செய்யப்படத்தக்க கொள்கைகளில் மட்டுமே ஐயத்திற்கிடமில்லாத நிரூபணம் சாத்தியமாகிறது. உதாரணமாக e=m2 என்ற கொள்கை அணுகுண்டு மூலம் உலகளாவிய தளத்தில் பாமர மக்கள் கூட ஏற்கும்படி நிறுவப்பட்டது. ஆனால் பொது சார்புக் கொள்கைக்கு அப்படி ஒரு நிரூபணம் சாத்தியமேயில்லை.

பருப்பொருளின் இரட்டைப் பண்புகள்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொதுவாக இரண்டு நிலைகளில் உள்ளன. 1) பொருள் 2) ஆற்றல் ஆகியனவாகும். பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது. ஒரு பொருளைப் பிளந்து கொண்டே சென்றால் கடைசியில் மிஞ்சக் கூடியது அணு மட்டுமே. அணுவைப் பிளக்க முடியாது என்று முதலில் அறிவியல் கண்டுபிடித்தது.

அணுவையும் பிளக்க முடியும். அதனுள்ளே உள்ள நியூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ஆகியவைதாம் கடைசியான துகள்கள் என்று அந்த விதி மற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டது. நியூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ஆகியவை எல்லாம் சரிதான். ஆனால் அவையும் இறுதியான‌ துகள்கள் அல்ல. அவற்றுக்குள்ளும் நுண் துகள்கள் உள்ளன என்று அந்த விதி மேலும் வளர்க்கப்பட்டு செழுமைப் படுத்தப்பட்டது.

இந்த விதியும் குவாண்டம் கொள்கையால் மேலும் மேம்படுத்தப்பட்டது. அதாவது குவாண்டம் கொள்கையானது ஒளியை, அலைப்பண்புடைய துகள்களாக, பொருளாக விளக்குகின்றது. இந்த விளக்கம் கடந்த அரை நூற்றாண்டுகளாகவே மேக்ஸ் பிளாங், ஐன்ஸ்ரைன் ஆகியோரால் ஆய்வு செய்து முன்மொழியப்பட்டது.

குவாண்டம் கொள்கையின்படி மிகச்சிறிய துகள்கள் எனப்படுபவை திடப்பொருட்களாக இருக்கவில்லை. பருப்பொருளின் நுண்ணணுவியல் அலகுகள் மிகவும் சூக்குமமான அமைப்புகளாகவும் இரட்டைத் தன்மை கொண்டனவாகவும் உள்ளன. நாம் அவற்றை பார்க்கின்ற பார்வையைப் பொறுத்து சில சமயங்களில் துகள்களாகவும் சில சமயங்களில் அலைகளாகவும் தோன்றுகின்றன. இதே இரட்டைத்தன்மை மின்காந்த அலைகளாகவும் துகள்களாகவும் வடிவெடுக்கின்ற ஒளியினாலும் வெளிக்காட்டப் படுகின்றது.

பருப்பொருளின் இந்த இரட்டைப் பண்பு இதுவரை இயற்பியல் அறிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே ஒரே சமயத்தில் துகள்களாகவும் அலைகளாகவும் வெளிப்படுத்திக் கொள்ளும் ஒன்றாக இருப்பது இயற்பியல் துறைக்கு புதுமையாக இருந்தது. இந்த முரண்பாடுகள் கொவான் போன்ற புதிர்கள் எழுவதற்கு வழிவகுத்தன. இறுதியாக குவாண்டம் கொள்கையை வடிவமைப்பதில் நிறைவுற்றன. இது மேக்ஸ் பிளான்க் என்கிற விஞ்ஞானியின் கண்டுபிடிப்பால் சாத்தியமானது. அவர் வெப்ப ஆற்றல் தொடர்ச்சியாக வெளிப்படுவதில்லை என்றும் ஆற்றல் பொட்டலங்களாகவே வெளிப்படுகின்றன என்றும் கண்டறிந்தார். இத்தகைய ஆற்றல் பொட்டலங்களையே  குவாண்டங்கள் என்றழைக்கப்பட்டன.

பருப்பொருள் ஒரு சமயத்தில் துகள்களாகவும், அலைகளாகவும் மாறிமாறி இயங்கும் ஒரு முரண் இயக்கம்  தோன்றியது. இங்கு பருப்பொருள் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தினைப் பெற்றிருக்கின்றது என்பது கேள்விகுறியானது. இது ஒரு நிச்சயமற்ற தன்மையைக் காட்டியது. அவ்வாறு துகள்களாக இருப்பதற்கும் அலைகளாக இருப்பதற்கும் சாத்தியக்கூறுகள் மட்டுமே இருந்தன. ஆகவேதான் அவை ஒரே சமயத்தில் அலைகளாகவும் துகள்களாகவும் இருக்கின்றன. இவை கணித நிகழ்திறன் என்ற விதியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கின்றன.
 நவீன விஞ்ஞானம் பொருளையும், பொருண்மையும் புறவயமானதாகவே பார்க்கிறது. புறவயமான‌ நிரூபணத்துக்கு அதில் பெரும் பங்கு உண்டு.ஆனால் பெருஞ்சிக்கல் கோட்பாட்டையோ  (Chaos theory) இழைக் கோட்பாட்டையோ  (String theory) எப்படி புறவயமாக நிரூபிக்க முடியும்? ஆகவே விஞ்ஞானம் புறவய நிரூபணத்திற்கும் அப்பாற்பட்ட விரிவான உண்மையறிதல் முறைகளை வகுத்துள்ளது(விஞ்ஞானம் எவ்வாறு உண்மையை அறிகிறது? – தி. ஸ்ரீனிவாசன்)  என்பதையும் மறுக்கவியலாது.
காரண காரிய உறவு

பொதுவாக இரண்டு பொருட்களுக்கிடையிலோ இரண்டு நிகழ்வுகளுக்கிடையிலோ காரண காரிய உறவு இருப்பதாக கருதப்படுகிறது. அவற்றில் ஒன்று காரணமாகவும் மற்றொன்று அதன் விளைவாகவும் அதாவது காரியாமாகவும் இருப்பதாக கருதப்படுகின்றது.  புலன்கடந்த பொருளியல் அறிஞர்கள் காரணம் என்பது மற்றொன்றை உண்டாக்குவது என்றும் காரணத்தில் உள்ளார்ந்த திறன் ஆற்றல் வல்லமை இருப்பதாகவும் அதுவே காரியத்தை உண்டாக்குவதாகவும் கருதினர்.
     
மேலும் அவர்கள் காரணத்தை காரியத்துடன் இணைக்கின்ற பிணைப்பு ஒன்று இருப்பதாகவும் காரியத்திற்கிடையே ஒரு கட்டாயமான உறவு இருப்பதாகவும் நம்பினார்கள். அதன் பயனாக அவர்கள் நாம் அத்திறனை அறிந்திருத்தால் அனுபவத்தின் சார்பின்றியே காரியத்தை முன்னதாகவே அறிய முடியும் என்றும் சிந்தனை அறிவாய்வு இவற்றின் மூலமாகவே அதனை உறுதியுடன் கூறமுடியும் என்றும் வெளியிட்டனர்.

ஆனால் அய்யக்கொள்கையினரான ஹ்யூம் இக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. காரண காரிய உறவு பற்றிய நம்முடைய அறிவு உற்று நோக்குதல் அனுபவம் ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டுள்ளது. நாம் காரணங்களை காண்பதில்லை. நிகழ்வுகளையும் அவற்றின் தொடர்ச்சிகளையும் காண்கிறோம். எடுத்துக்காட்டாக தீயைத் தொடர்ந்து வெப்பமும் பனியைத் தொடர்ந்து குளிர்ச்சியும், பந்தின் இயக்கத்தை தொடர்ந்து ஓட்டமும் நிகழ்வதையும் காண்கிறோம். இருவகைப்பொருட்கள் அல்லது நிகழ்வுகள் இணைந்தே பலமுறைக் காண்ப்படுவதால் அவற்றிற்கிடையே காரண காரிய உறவு இருப்பதாகவும் அவை கட்டாயம் எனவும் உய்த்துணரப்படுகிறது.

ஆனால் குறிப்பிட்ட ஒரு காரணம் குறிப்பிட்ட ஒரு காரியத்தைத் தான் உண்டாக்க வேண்டும் என்றோ எப்பொழுதும் அதே காரியத்தைத்தான் உண்டாக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை. அவை நிலையானவையும் இல்லை. பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை தொடர்ந்து வருபவை என்று பழகிவிட்டதால் அவற்றை நாம் நம்புகிறோம். ஆனால் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள் பின்னாலும் அவ்வாறே தொடரும் என்று நாம உறுதியாகக் கூறமுடியாது. எனவே விஞ்ஞானம் மற்றும் புலன்கடந்த ஆராய்வு ஏற்படுத்தும் விதிகள் நிகழ்வுகலின் கட்டாயத்தன்மை ஆகியவை நிலையானவை அல்ல.

ஹ்யூமின் கருத்துப்படி கணிதவியல் விதிகள் மட்டுமே கட்டாயத் தன்மை உள்ளவை. அவை  இயற்கையானதும்  மாறுதலற்றதுமான  உண்மையாகும். ஹ்யூம் எழுப்பிய வினாக்கள் மதங்களை மட்டுமல்லாமல் விஞ்ஞானத்தையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தியது  எனலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக