வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கண்ணோட்டம் மார்க்சால் 1840 களில் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஜெர்மனில் நிலவிய கருத்துமுதல்வாத கருத்தியலைத் தீர்மானகரமாக கணக்குத் தீர்க்கவேண்டியிருந்தது. அதன்பொருட்டு மார்க்சு தனது இயங்கியல் பொருள்முதல்வாதத்தை நிறுவி அதன் தொடர்ச்சியாக வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைக் கண்டறிந்தார். அதன்மூலம் வரலாறு பற்றிய பழைய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தை மாற்றியமைத்து பொருள்முதல்வாத அடிப்படையில் வரலாற்று அணுகுமுறையை உருவாக்கினார். அதாவது சமூக இயக்கத்தின் அடிப்படையைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தார். சமூக இயக்கத்தின் அடிப்படையை ஆராய்வதற்கு முதன்முதலில் பொருள்முதல்வாத அணுகுமுறையை கொடுத்தவர் மார்க்சு ஆவார். ஜெர்மன் கருத்தியல் என்ற நூலில்தான் அதற்கான அடிப்படையை நிறுவினார். அவருக்குப் பின்னால் அது வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றழைக்கப்பட்டது.
மார்க்சியம், சமூக அமைப்பை அடித்தளம் என்றும் மேற்கோப்பு என்றும் இருவகையாகக் காண்கின்றது. அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற சமூகஎதிர்வு சாராம்சத்தில் வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் உள்ள முரணைக் குறிப்பதாகும். இன்னும் சொல்லப்போனால அது பொருளுக்கும் கருத்துக்கும் உள்ள தத்துவ முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். இம்மூன்று எதிர்வுகளும் வேறு வேறு தளங்களில் வெவ்வேறு நிலைகளில் இயங்குகின்றன. ஆனால் அவையாவும் ஒரே அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. அவையாவும் நெருங்கிய தொடர்புக் கொண்டவையாகும். இம்மூன்று எதிர்வுகளைப் பற்றியும், அவற்றிற்கிடையே உள்ள உறவு பற்றியும், மார்க்சிய மூலவர்களின் கருத்துரைகள் பற்றியும், அது பின்னாளில் எவ்வாறு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது என்பதையும், என்னென்ன போக்குக்கள் வளர்ந்தன என்பது பற்றியும் இக்கட்டுரையில் விவரிக்கவும் விவாதிக்கவும் இருக்கிறோம். பொருள் குறித்தும் சிந்தனைக் குறித்தும் ஆழமான தத்துவார்த்தப் புரிதலிலிருந்து அடித்தளம் மேல்கட்டுமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை அணுகவேண்டும்.
அடித்தளமும் மேல்கட்டுமானமும்
வரலாறு என்பது கருத்துக்களின் வரலாறு என்பதிலிருந்து தொடங்கி, வரலாற்றின் உந்துவிசை சிந்தனைதான் என்பதுவரை ஹெகலின் வரலாறு பற்றிய கருத்துரைதான் வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரைக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது. தலைகீழாக நின்றிருந்த ஹெகலின் கருத்துமுதல்வாத இயங்கியலுக்கு மறுதலையாக பொருள்முதல்வாத இயங்கியலை மார்க்சு உருவாக்கினார். இது ஒரு தொழில்நுட்ப ரீதியிலான மாற்றம் இல்லை. தத்துவ அடிப்படையிலான முழுமையான மாற்றம். இதை விளக்கும் பொருட்டு மார்க்ஸ் சமூகத்தின் அடிப்படையான அம்சங்களைப் பற்றியும் சமூக மாற்றத்தின் உந்துவிசைப் பற்றியும் வரையறுத்து விளக்கியுள்ளார். சமூகத்தின் அடிப்படையான விசயங்களைப் பற்றியும் அதன் கூறுகளைப்பற்றியும் அவற்றிற்கிடையே உள்ள உறவுகளைப் பற்றியும் அவரது ஆரம்பகால நூல்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.
மார்க்சின் கருத்துரை
‘உற்பத்தியும் மறு உற்பத்தியுமே சமூகத்தின் அடிப்படையான விசயங்களாகும்’ என்று வரையறுத்த மார்க்சு அது குறித்து முதன்முதலில் ‘செர்மன் கருத்தியல்’ (1846) என்ற நூலில் பதிவு செய்கின்றார். “மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் - சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது- அவனது பொருளாதாய வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த அறிவு வேண்டுமா, என்ன? “பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது - கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் அந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தானே எப்போதுமே இருந்திருக்கின்றன.” என கம்யூனிஸ்டு அறிக்கையில் (1848) மார்க்ஸும் எங்கல்ஸும் கூறும்போது எல்லா விசயங்களையும் வரலாற்று ரீதியில் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்துவர்.
அடுத்ததாக மார்க்சு தனது தத்துவத்தின் வறுமை (1847) என்ற நூலில் ‘புதிய உற்பத்திச்சக்திகள் வளர்ந்ததும் மனிதர்கள் உற்பத்திமுறையை மாற்றுகின்றனர். உற்பத்திமுறையை மாற்றியதும் அவர்கள் அனைத்து சமூக உறவுகளையும் மாற்றுகின்றனர். கையால் இயக்கப்படும் ஆலை, ஒரு நிலபிரபுத்துவ சமூகத்தை அளிக்கின்றது; நீராவி ஆலை, ஒரு தொழில் முதலாளித்துவ சமூகத்தை அளிக்கின்றது’ என்று குறிப்பிடுவார்.
பின்னர் ‘அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு’ (1857) என்ற நூலின் முன்னுரையில் அடித்தளத்திற்கும் மேற்கோப்பிற்கும் இடையிலான கருத்தை விரிவாக்குகின்றார்.
‘சமூகத்தின் மெய்யான அடித்தளம் பொருளாதாரக் கட்டுமானம் ஆகும். இதன்மீது சட்டம் அரசியல் போன்ற மேல்கட்டுமானம் எழுப்பப்படுகின்றது' என்ற தனது கருத்துக்கோப்பை அழுத்தமாக கூறுவார். அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற சமூக எதிர்வை மார்க்சு முதன்முதலில் வரையறுத்துக் கூறுவார்.
பின்னர், ‘மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகின்றார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சிந்தனைகளிலிருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்திற்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.
“இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக அதன் உண்மையான அடித்தளமாக அமைகின்றது. இதன்மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டும், அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத் வாழ்க்கையின் உற்பத்திமுறை சமூக அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை. அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவரகளுடைய உணர்வு நிலையை நிர்ணயிக்கிறது.
“வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு அல்லது அவற்றைச் சட்ட பூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டதுக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்படிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
“பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்று தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உறப்த்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கு (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்கமுடியும்) சட்டம், அரசியல் மதம் கலைத்துறை அல்லது தத்துவ ஞானத்துறைகளில் சுருக்கமாகச் சொல்வததென்றால் சித்தாந்த துறைகளில் இந்த போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
“ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்கமுடியும்.
“எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப் படுவதில்லை. புதிய உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே, மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கின்றது. ஏனெனறால பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.” என்று விரித்துரைப்பார்.
'"விதிவிலக்கு எதுவுமின்றி எல்லாக் கருத்துக்களும் பல்வகையான எல்லாப் போக்குகளும் பொருளாதாயத உற்பத்திச் சக்திகளின் நிலைமையிலேதான் வேர் கொண்டிருக்கின்றன எனபதை வெளிப்படுத்தியதின் மூலமாகவும் சமுதாய பொருளாதார அமைப்பு முறைகளின் தோற்றம், வளர்ச்சி, நலிவு என்ற இயக்கப் போக்கைப் பற்றி முழுதளாவிய, முழுமையான பரிசீலனைக்கு மார்க்சியம் வழிகாட்டியது." என ‘கார்ல் மார்க்ஸ்’ என்னும் நூலில் லெனின் கூறுகிறார்.
‘உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக அதன் உண்மையான அடித்தளமாக அமைகின்றது' என்று கூறுவதன் மூலம் சமூகத்தின் உண்மையான அடித்தளம் உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகளையும் குறிப்பதாக வலியுறுத்துகிறார். இதன் மூலம் சமூகத்தின் அடித்தளம் என்று கூறும் போது உற்பத்திச் சார்ந்த அம்சங்களை மட்டும் வகைப்படுத்துகிறார்; 'கையால் இயக்கப்படும் ஆலை, ஒரு நிலபிரபுத்துவ சமூகத்தை அளிக்கின்றது; நீராவி ஆலை, ஒரு தொழில் முதலாளித்துவ சமூகத்தை அளிக்கின்றது' என்று கூறும் போதும் உற்பத்தி கருவிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்.
‘உற்பத்தியும் மறுஉற்பத்தியுமே சமூகத்தின் அடிப்படையான விசயங்களாகும்’ என்று கூறும் போது உற்பத்தி தளத்தையும் மறுஉற்பத்தி தளத்தையும் இணைத்து கூறுகிறார். உற்பத்தி நேரடியாக பொருளாதாரக் கட்டுமானத்தைக் குறிக்கிறது. அப்பொருளாதாரக் கட்டுமானம் உற்பத்தி, பரிவர்த்தனை, விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆனால் மறு உற்பத்தி என்பது உற்பத்தி என்ற பொருளாதாரத் தளத்தை தாண்டி அதற்குத் துணைபுரியும் சமூக அமைப்பைக் குறிப்பதாகும். இங்கு உற்பத்திச் சக்திகளை மனிதர்களை உற்பத்தி செய்யும் குடும்பம் அது சார்ந்த இன்ன பிற சமூக அமைப்புகளையும் உள்ளடக்கியது. சமூகத்தின் அடிப்படையான விசயங்கள் என்றும் கூறும் போது இங்கு பொருளாதார அடித்தளத்தை விடவும் பரந்த அர்த்தத்தில் மார்க்சு பயன்படுத்துகிறார்.
ஆக சமூகத்தின் உண்மையான அடித்தளத்திற்கான கராறான வறையறையை மார்க்சு வழங்கவில்லை. இதில் முரண் இருப்பதாகக் கொள்ள வேண்டியதில்லை. இதன்மூலம் அடித்தளம், மேற்கட்டுமானம் என்ற சமூக எதிர்வுகளையும் அவற்றிற்கு இடையே உள்ள உறவுகளையும், இவ்விரு எதிர்வுகளின் இணைப்புப் புள்ளிகளையும் சேர்த்து விளங்கிக் கொள்ளும் வகையில் இந்த விளக்கங்கள் அமைந்திருக்கக் காணலாம்.
தொடரும்..
இக்கட்டுரையைப் படிக்கத் தூண்டிய தோழர் இராஜன் அவர்களுக்கு நன்றி . இந்தக் கட்டுரையை மீண்டும் நான் பலமுறைப் படித்தால் மட்டுமே ! எனக்கு விளங்கும் என்றுக் கருதுகின்றேன் .இம்மூன்று எதிர்வுகளும் என்பது எது ? என்பதை ஒன்று , இரண்டு , மூன்று என்று வரிசைப் படித்தினால் தான் என்னைப் போன்ற வாசகர்களுக்குப் புரியும். 1 அடித்தளம் , 2 மேற்கோப்பு 3 குமூக எதிர்வு இவையே அந்த மூன்றுக் கூறுகளா ? அறியவிரும்புகின்றேன் . நன்றி.
பதிலளிநீக்கு